கற்ப மூலிகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்ப மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும் -

  • "கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
    • கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
  • காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
    • 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
  • கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
    • 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
  • ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
    • ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)
  • "செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
    • 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
  • நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
    • நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
  • பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
    • பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
  • 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
    • மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)
  • "மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
    • 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
  • கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
    • 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
  • கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
    • கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
  • படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
    • 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)
  • "தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
    • தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
  • 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
    • ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
  • பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
    • பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
  • துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
    • சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
  • "சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
    • சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
  • மத்தான மன்மதன்போல் தேகமாகும்
    • மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
  • எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
    • ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
  • அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
    • அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்ப மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது.மலைகளில் எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது.விண் வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.ஒவ்வொரு மூலிகைகளின் வேர்,தண்டு,இலை,காய்,பூ,கொட்டைகள் போன்றவற்றின் தனித்தன்மையினை அக்காலத்தில் சித்தர்கள் நன்கு ஆராய்ந்தும் உள்ளனர்.

இம்மூலிகைகளினால் குழந்தைகள் பிறப்பதனையும் நன்கு ஆராய்ந்து அறிந்துள்ளனர் சித்தர்கள்.

  • கணவனும் மனைவியும் கலவியில் ஈடுபடும் காலத்தில் கணவனின் வலதுநாசித் துவார வழியாக மூச்சு ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும்.
  • இட நாசித் துவாரத்தின் வழியாக ஓடினால் பெண் குழந்தை பிறக்கும்.
  • சுழுமுனை,அஃதாவது நடுவாக ஓடினால் அலி பிறக்கும்.
  • மூச்சு ஜம்பூதங்களில் தோன்றி முழுமையாக ஓடினால் குழந்தை நூறு வயது இருப்பதோடு,ஆரோக்கியமாக இருக்கும்.
  • குறைந்து ஓடினால் அதற்கேற்ற மாதிரி அதன் ஆயுள் குறையும்.
  • ஓடுகின்ற மூச்சு மெல்ல ஓடினால் குழந்தை குட்டையாய்ப் பிறக்கும்.
  • வளைந்து ஓடினால் முடமாகப் பிறக்கும்.இவைகள் எல்லாம் கலவி செய்கின்ற ஆண்களுக்கு.
  • பெண்களின் வயிற்றில் மலம் தங்கியிருந்தால் குழந்தை மந்த புத்தியுடன் விளங்கும்.
  • நீர் தங்கியிருந்தால் ஊமையாகப் பிறக்கும்.
  • மலம், நீர் ஆகிய இரண்டும் தங்கியிருந்தால் குருடாகப் பிறக்கும்.
  • இருவருக்கும் ஒரே மாதிரி நல்லமுறையில் சுவாசம் ஓடினால் பிறக்கின்ற குழந்தை அறிவோடும் அழகோடும் விளங்கும்.

சித்தர்கள் எவ்வாறு இதனை அறிந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வியாசருடன் அம்பிகை போகத்தில் ஈடுபட்ட காலத்தில் அம்பிகை கண்ணை மூடிக்கொண்டதால் குருட்டுக்குழந்தை பிறக்கும் என்றும்,அதே வியாசருடன் அம்பாலிகை போகத்தில் ஈடுபட்ட காலத்து அம்பாலிகை வியர்த்து,அருவருத்து இருந்ததால் வெண்மை நிறமுடைய குழந்தை பிறக்கும் என்றும் அதே வியாசருடன் பணிப்பெண் ஒருத்தி போகத்தில் ஈடுபட்ட காலத்தில் அப்பணிப்பெண் மன நிறைவுடன் போகத்தில் ஈடுபட்டதால்,அறிவுடைய குழந்தை பிறக்கும் என்று வியாசர் கூறியதற்கேற்றாற் போலவே,முறையே குருடனாக திருதாட்டிரனும்,வெண்மை நிறமுடைய பாண்டுவும்,அறிவும்,ஆற்றலுமிக்க விதுரரும் பிறந்தனர் என்று மகாபாரதம் கூறுகின்றது. சித்தர்களின் வைத்திய முறைக்கு ஒத்து வரும் இச்சம்பவத்தின்படி வியாசரும் சித்தரென்ற காரணத்தினால் இதனை அறிந்து கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை நூல்கள்[தொகு]

  • துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
  • முனைவர் இர.வாசுதேவன் *தமிழில் மருத்துவ இலக்கியங்கள்*, பூங்கொடி பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்ப_மூலிகைகள்&oldid=752772" இலிருந்து மீள்விக்கப்பட்டது