தாலாட்டு பாடவா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலாட்டு பாடவா
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புஇப்ராகிம் இராவுத்தர்
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்இராவுத்தர் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 5, 1990 (1990-09-05)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாலாட்டு பாடவா (Thalattu Padava) ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பார்த்திபன், ரூபிணி மற்றும் குஷ்பு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இப்ராகிம் இராவுத்தரின் இராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் வெளியானது.[1][2]

கதைக்களம்[தொகு]

இராஜா (பார்த்திபன்) தாயம்மா என்ற தனது தாயுடன் (சுஜாதா) வசித்து வருகிறார். இவர் ஒரு பட்டதாரியாக இருப்பினும் தனக்குப் பொருத்தமான வேலை கிடைக்கும் வரை ஒரு பழுதுபார்ப்பவராக பணிபுரிந்து வருகிறார். இறுதியில் அவருக்கு புதுதில்லியில் ஒரு பணி கிடைக்கிறது. துரதிருஷ்டவசமாக, இராஜா ஒரு தொடருந்து நிலையத்தில் தனது சான்றிதழ்களையும், வண்டியையும் ஒரு ஏழை இட்லி வியாபாரம் செய்யும் பெண்ணான நர்மதாவின் (ரூபிணி) காரணமாகத் தவற விடுகிறார். இராஜா அந்த தொடருந்து நிலையத்தில் அடுத்த வண்டியைப் பிடிப்பதற்காக 4 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. மெதுமெதுவாக, இராஜாவும், நர்மதாவும் காதலிக்கத் தொடங்குகின்றனர். ஐந்தாவது நாள் இராஜா வண்டியைப் பிடித்து ஊர் திரும்பும் போது நர்மதா தான் இராஜாவின் வரவிற்காக அங்கேயே எத்தனை வருடங்களானாலும் காத்திருக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கிறார். இராஜாவும் தான் நிச்சயம் திரும்பி வந்து நர்மதாவை திருமணம் செய்து கொள்வதாவும், நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாகவும், நர்மதாவின் தாத்தாவிடம் வாக்குக் கொடுக்கிறார். இராஜா தன் வீட்டிற்குத் திரும்பும் பொழுது அவரது தாயார் வாய் பேச இயலாதவாறு நோயினால் பாதிக்கப்படுகிறார். அவர் இயல்புநிலைக்குத் திரும்ப அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் மருத்துவ வசதி உள்ளதாகவும் அதற்கு சில இலட்சங்கள் தேவைப்படும் எனவும் மருத்துவர் கூறிவிடுகிறார். வேலையில்லாத நிலையில் சுற்றுலா வழிகாட்டியாகக் கிடைத்த வேலையைச் செய்ய தயாராகிறார். இந்த நிலையில் கந்தசாமி (எஸ். எஸ். சந்திரன்) என்ற பணக்காரரிடம் ஓட்டுநராக பணிபுரியத் தொடங்குகிறார். கந்தசாமியின் பேத்தி நர்மதா (குஷ்பு) இராஜாவை மிகவும் ஏளனமாக நடத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் இராஜா பட்டதாரி என்பதை அறிந்து அவருடன் காதலில் விழுகிறார். நர்மதா அமெரிக்காவிற்குச் செல்வதால் தன் தாயின் மருத்துவம் எளிதாக நடந்தேறும் என இராஜா கருதுகிறார். அடிப்படையான சில வசதிகளை இராஜாவின் தாயாருக்குச் செய்து தரும் நர்மதா(குஷ்பு) தாயம்மாவை அனாதை எனக்குறிப்பிட்டு அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு தான் இராஜாவுடன் அமெரிக்கா செல்ல திட்டமிடுகிறார். இதை அறிந்த இராஜா தன் தாயாரை அனாதை என்ற நிலையில் விட்டு தன் காதல் வெற்றி பெற அவசியமில்லை என முடிவெடுத்து தான் தன் தாயுடன் இருந்து தன்னால் ஆன பணிவிடைகளைச் செய்து கொள்வதென முடிவெடுத்து நர்மதாவுடனான பயணத்தைப் புறக்கணிக்கிறார். காதலை விட தாயன்பே புனிதமானது என்பதாகக் கதை முடிகிறது.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தின் பாடல்கள் அதிகம் பேசப்பட்டவை ஆகும். இளையராஜாவின் இசையில் வராது வந்த நாயகன், நீதானா நீதானா நெஞ்சே நீதானா, அம்மம்மா, ஓடைக்குயில் ஒரு, சொந்தமென்று வந்தவளே ஆத்தா, வெண்ணிலவுக்கு வானத்தைப் பிடிக்கலையாம் போன்ற பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம் பெற்றன. பாடகர்கள் அருண்மொழி, எஸ். ஜானகி, சித்ரா மற்றும் இளையராஜா பாடல்களைப் பாடியுள்ளனர். இத்திரைப்படத்தின் பாடல்களை வாலி மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

நடிப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography of thalattu padava". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Thaalatu Paadava (1990) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.