ஐக்கூ
ஐக்கூ அல்லது கைக்கூ அல்லது ஹைக்கூ ((Haiku),
ஒலிப்பு மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம். ஐக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்புகழ் பெற்ற கவிதை வடிவமாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர்.
ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில்தான் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஐக்கூ கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.
ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் டோக்கியோ காலத்தில் (கி.பி 1863 க்கு அடுத்தது) ஐக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு பிரான்சிய மொழி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் பரவி தமிழிலும் பரவியது.
பொருளடக்கம் |
[தொகு] ஐக்கூ பெயர்க் காரணம்
ஆரம்ப காலத்தில் ஐக்கூ கவிதை ஒக்கூ (hokku, ஃகொக்கூ) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஐகை என்று திரிந்து ஐக்கூ என்றாயிற்று. ஐக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர்.
தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.
[தொகு] ஐக்கூ விளக்கம்
தமிழக ஐக்கூ கவிஞர் ஓவியர் அமுதபாரதி ஐக்கூவிற்கு ஒரு விளக்கம் அளித்திருகிறார். ஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது) ஐ என்றால் கடுகு. கூ என்றால் பூமி. கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை உள்ளடக்கியது இந்த ஐக்கூ கவிதை.
தமிழக பெண்கவிஞர் மித்ரா அவர்கள் ஐக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று பொருள் தருகிறார்.
[தொகு] ஐக்கூ கவிதையின் அளவு வரையறை
ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில் 7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக் கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சிலபிள் (syllable) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் இதனை ஓன் (音, on)) அல்லது ஓஞ்சி (音字, onji) அழைக்கிறார்கள். இதன் பொருள் ஓர் ஒலித்துகள் (அல்லது அசை). ஆங்கில மொழியியல் துறைக் கலைச்சொல்லில் இதனை மொரே (morae) என்கின்றனர். ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும். ஜப்பானிய மொழியின் ஒஞ்சி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி!)
தொடக்கக் காலத்தில் இந்த 5, 7, 5 என்ற அசை அமைப்பு முறையாக கடைப் பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5, 7, 5 என்ற அளவுகோலை விட்டுவிட்டார்கள். தமிழ் அசை மரபின் 5, 7, 5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த ஐக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் வெளியிட்டார்.
[தொகு] ஐக்கூ கவிதையின் வளர்ச்சி
புத்த மதத்தின் கிளைப் பிரிவான சென் (Zen) தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஐக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. ஜப்பானியக் கவிஞர்கள் மோரிடேகே (1473-1549), மற்றும் சோகன் (1465-1553) ஆகியோர் ஐக்கூ கவிதையின் முன்னோடிகள் என்றழைக்கப் படுகிறார்கள். ஐக்கூ முன்னோடிகளை அடுத்து மட்சுவோ பாஸோ (1465-1553), யோசா பூசன் (1716-1784), இசுசா (1763-1827), சிகி (1867-1902) ஆகிய ஐக்கூ நால்வர்கள் தோன்றிப் புகழ் ஈட்டினர்.
[தொகு] தமிழ் ஐக்கூ எடுத்துக்காட்டுகள்
பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று முகம் பார்த்தன
சலூன் கண்ணாடிகள்
-
-
- - நா.முத்துக்குமார்
-
வெள்ளையடித்த சுவர்
மேலும் அழகாய்க் குழந்தையின்
கிறுக்கல்கள்
-
-
- - சீனு. தமிழ்மணி
-
சோளக்கொல்லை பொம்மைக்கும்
உடையுண்டு
எங்களுக்கு!
-
-
- - சீனு. தமிழ்மணி
-
[தொகு] வெளி இணைப்புகள்