வம்சோத்தாரகர் கோயில், பெருங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வம்சோத்தாரகர் கோயில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை வட்டத்தில் பெருங்களூரில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 19 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[1] முற்காலத்தில் இங்கு முல்லை மரங்கள் அதிகம் இருந்ததால் முல்லை வனம் எனவும், மூன்றாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கப்பட்டதால் சோழலிங்கபுரம் எனவும் இவ்வூர் அழைக்கப்பட்டது. [2]

அமைப்பு[தொகு]

கோயிலின் மேற்கில் குளம் உள்ளது. குளத்திற்கும் கோயிலுக்கும் நடுவில் வன்னி மரம் உள்ளது. வன்னி மரத்தின்கீழ் விநாயகர், நாகர், அய்யனார் உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோயிலின் கிழக்கில் இறைவி சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு எதிரே இருந்த நவக்கிரக சன்னதியானது திருப்பணியின்போது திருச்சுற்றில் அமைக்கப்பட்டது.[2]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் வம்சோத்தாரகர், இறைவி மங்களநாயகி. [1] அம்மன்னன் குழந்தைப்பேறு வேண்டி சிவனை வணங்கியபோது, இறைவன் கிழக்கு நோக்கிய நிலையில் ஒரு லிங்கத்தையும், மேற்கு நோக்கிய நிலையில் ஒரு லிங்கத்தையும் அமைக்கும்படி கூறினார். மேற்கு நோக்கிய லிங்கத்தை பெருங்களூரிலும், கிழக்கு நோக்கிய லிங்கத்தை மேற்கு சோழலிங்கபுரத்திலும் அமைத்தார். இரு லிங்கங்களுக்கு நடுவில் நின்று இறைவனைப் பிரார்த்தித்த நிலையில் அவருக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். சோழனுக்கு இறைவன் குழந்தை பாக்கியத்தைத் தந்ததால் இவ்விறைவன் வம்சோத்தாரகர் என்றும், குலோத்துங்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். [2]

திறந்திருக்கும் நேரம்[தொகு]

திருவனந்தல் (காலை 6.00 மணி), சிறுகாலசந்தி (காலை 7.00 மணி), காலசந்தி (காலை 8.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் ஆறு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 முதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும். வைகாசி விசாகம் 10 நாள்கள், ஆடிப் பூரம் 10 நாள்கள் ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003
  2. 2.0 2.1 2.2 புத்திரப்பேறு அளிக்கும் பெருங்களூர் வம்சோத்தாரகர், தினமணி, 2 பிப்ரவரி 2018