ம. நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ம. நாராயணன்
Ma. Narayanan
பிறப்பு01.01.1950
வேலூர், தமிழ்நாடு
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துறைகவிதை, கட்டுரை,
பணியிடங்கள்சிறப்பு உதவியாளர் (ஓய்வு), பாரத அரசு வங்கி, சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம்
கல்வி கற்ற இடங்கள்இளநிலை இயற்பியல், ஊரிசு கல்லூரி, வேலூர்.
முதுநிலை தமிழ், பச்சையப்பன் கல்லூரி, சென்னை
முனைவர் பட்டம், சென்னை பல்கலைக் கழகம்
விருதுகள்தமிழ்ச்செம்மல் விருது
துணைவர்கௌரி
பிள்ளைகள்நா.பூங்குன்றன், நா.முல்லை, நா. மருதம்

ம. நாராயணன் (Ma Narayanan) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கவிஞரும் கட்டுரையாளரும் ஆவார்.[1] பொதுவாக இவர் கவிஞர் வேலூர் ம. நாராயணன் என்ற பெயரால் அறியப்படுகிறார். தமிழ்ச் செம்மல் விருது, மு.வ. நினைவு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று வேலூரில் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வருகிறார்.[2] தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.[3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

எம்.கே மதுரை, ம. வள்ளியம்மாள் தம்பதியருக்கு மகனாக 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று நாரயணன் பிறந்தார். ஓர் அண்ணன் மற்றும் ஒரு தம்பி, ஒரு தங்கை இவருடன் பிறந்தவர்கள் ஆவர். முதல் வகுப்பு தொடங்கி இயற்பியல் இளநிலை பட்டப்படிப்பு வரை வேலூரில் இருந்த சர்க்கார் மண்டி ஆரம்பப் பள்ளி, கோடையிடி ஏ குப்புசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளி, ஊரிசு கல்லூரி ஆகிய பள்ளிகளில் இவர் கல்வி கற்றார். ஆரம்ப பள்ளியில் சான் இயேசு பாதம், உயர்நிலைப் பள்ளியில் புலவர் கே.குப்புசாமி பிள்ளை, ஊரிசு கல்லூரியில் பேராசிரியர் ம.வி சுதாகர் போன்ற நல்லாசிரியர்கள் நாரயணனுக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்து வைத்தனர். 1970- ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து முதுநிலை தமிழ் படித்தார். அங்கு மு. வரதராசனார், க. ப. அறவாணன் போன்ற தமிழறிஞர்களிடம் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்றார்.

தொழில்[தொகு]

தமிழில் முதுகலை பட்டம் பெற்றதும் இவர் சென்னை கௌரிவாக்கத்திலுள்ள் எசு ஐ வி இ டி கல்லூரியில் ஓராண்டு தமிழ் துறையில் பணியாற்றினார். இங்கு புகழ்பெற்ற திரை கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் தமிழ் துறை தலைவராக இருந்தார். 1973 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை வேலூர் பாரத மாநில வங்கியில் எழுத்தராக பணியாற்றினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பாரத மாநில வங்கி எழுத்தர்களில் முதன் முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. பெரியாரும் மனிதநேயமும் என்ற தலைப்பில் இவர் முனைவர் பட்டம் பெற்றார் என்பது கூடுதல் சிறப்பாகும்.

தமிழ்ப் பணி[தொகு]

வேலூர் இலக்கிய அன்பர்கள் வட்டம் எனும் ஓர் இலக்கிய அமைப்பை தொடங்கி தமிழ் ஆர்வலர்கள் துணையுடன் சிறப்புற நடத்தினார். ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் சிறந்த தமிழ் அறிஞர்களை வேலூருக்கு அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தினார். கி. அ. பெ. விசுவநாதம், சுரதா, அப்துல் ரகுமான், சிலம்பொலியார் போன்ற அறிஞர்கள் இப்பட்டியலில் இடம்பெற்ற அறிஞர்களாவர்.

1983- ஆம் ஆண்டு கவிஞர் சுரதா அவர்கள் நல்கிய ஊக்கத்தால் நிலா முற்றம் எனும் கவிதை நூல் வெளியீட்டில் தொடங்கிய இவரது படைப்பு பயணம் 2016- ஆம் ஆண்டில் வெளியான இளந்தமிழா இதோ உன் சொத்து என்ற நூல் வரை 52 நூல்கள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. இவர்தம் நூல்களை ஆய்வு செய்து ஐந்து மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், ஒருவர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

விருதுகள்[தொகு]

  • தமிழக அரசு 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதை இவருக்கு வழங்கி சிறப்பித்தது.[4]
  • மு.வ. அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் மு.வ. நினைவு விருது 2018 ஆம் ஆண்டு சூலை மாதம் நாராயணனுக்கு வழங்கப்பட்டது.[5]

இவற்றைத் தவிர அறவாணர் சாதனை விருதாக பத்தாயிரம் ரூபாய் பரிசும், 2017 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை விருதாக ரூபாய் ஒரு லட்சம் பரிசும் வேலூர் ம. நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மானுடம் போற்றிய மாமனிதர் பெரியார் https://www.dailythanthi.com/News/Districts/2017/12/23110200/periyar-is-a-rare-honor-great-men-of-humanity.vpf". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Districts/2017/12/23110200/periyar-is-a-rare-honor-great-men-of-humanity.vpf. பார்த்த நாள்: 22 April 2023. 
  2. "தமிழ் மொழி வளர்ச்சிக்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும்:கவிஞர் ம. நாராயணன் பேச்சு". தினமணி. https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&action=edit. பார்த்த நாள்: 22 April 2023. 
  3. "சென்னை வானொலியில் கவிஞர் ம. நாரயணன் பேச்சு, மார்ச் 30". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2012/mar/31/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-30-478416.html. பார்த்த நாள்: 22 April 2023. 
  4. "தமிழ்ச் செம்மல், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள்:முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்". தினமணி. https://m.dinamani.com/tamilnadu/2022/dec/21/tamil-semmal-best-translator-awards-presented-by-chief-minister-stalin-3970823.amp. பார்த்த நாள்: 22 April 2023. 
  5. "வேலூர் கவிஞர் ம. நாராயணனுக்கு மு.வ. விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2018/may/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2911395.html. பார்த்த நாள்: 22 April 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._நாராயணன்&oldid=3700188" இலிருந்து மீள்விக்கப்பட்டது