மின்மம்
மின்மம் என்பது ஒரு பொருளைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் தோற்றுவிக்கும் அடிப்படையான ஒன்றாகும். இவ்விசைப் புலத்தை மின்புலம் என்பர். இம் மின்மமானது அடிப்படையில் அணுவின் உட்கூறுகளில் இயல்பாகவே இருப்பதாகும். எல்லாப்பொருளும் அணுக்களால் ஆனவை. ஐதரசன் அணுவைத் தவிர்த்த மற்ற எல்லா அணுக்களும் மூன்று வகையான துகள்களால் ஆக்கப்பட்டவை என்று கருதலாம். இங்கு துகள் எனப்படுவது அணுவின் உட்கூறு ஆகும். ஐதரசனில் மட்டும் இரண்டே இரண்டு வகையான துகள்கள் தாம் உள்ளன. ஓர் அணுவில் உள்ள இந்த மூன்று வகைத் துகள்களில் இரண்டு வகைத் துகள்களானவை, இரு வேறு வகை மின்மம் கொண்டவை. ஒருவகை, அணுவின் கருவில் உள்ளது. இதனை நேர்மின்னி என்பர். இந்த நேர்மின்னி தன்னகத்தே இயல்பாகக் கொண்டிருக்கும் இவ் வகையான மின்மத்தை நேர்மின்மம் என்பர். இதனைக் கூட்டல் குறி ( + ) இட்டுக் காட்டுவர்.
மற்றொரு வகைத் துகள் அணுக்கருவைச் சுற்றிப் பல்வேறு சுற்றுப் பாதைகளில் உலா வரும் ஒன்று. இவற்றை எதிர்மின்னிகள் என்பர். இவ் எதிர்மின்னிகள் தன்னியல்பாய்க் கொண்டிருக்கும் மின்மத்தை எதிர்மின்மம் என்பர். இதனைக் கழித்தல் குறி ( - ) இட்டுக் காட்டுவர். எனவே அணுக்கருவில் உள்ள நேர்மின்னியின் நேர்மின்மப் பரும அளவும், அணுக்கருவைச் சுற்றி உலா வரும் எதிர்மின்னியின் எதிர்மின்மப் பரும அளவும் ஒன்றே ஆகும், ஆனால் அவை எதிர்-எதிர் இயல்பு (வகை) கொண்டவை. எதிரெதிர் இயல்பு கொண்ட மின்மங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் பண்பு கொண்டவை. இதனிடையே ஈர்ப்பு விசை இருக்கும். ஒரே வகை மின்மம் கொண்ட பொருள்கள் ஒன்றை ஒன்று உந்தி விலக்கும் பண்பு கொண்டவை. இவையிடையே விலகுவிசை இருக்கும். மின்மத்தால் வினைப்படும் விசைக்குக் கூலாம் விசை என்பர். கூலாம் என்பது மின்மத்தைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடியான பிரான்சிய அறிவியலாளர் ஒருவரின் பெயர். (பார்க்க: சார்லசு அகசிட்டின் டெ கூலாம்) இவைகளைப் படத்தில் காணலாம்.
மேலும் ஐதரசனைத் தவிர மற்ற எல்லா வகை அணுவின் கருவினுள்ளேயும் மின்மம் ஏதும் இல்லா ஒருவகைத் துகளும் உண்டு அதற்கு நொதுமின்னி அல்லது நொதுமி என்று பெயர். நொது என்னும் சொல் எப்பக்கமும் சேராப் பொது என்று பொருள் படும். மின்மம் ஏதுமில்லாததால் நொதுமிகள் மின்மத்தால் எவ்விசைக்கும் உட்படாது. மின்மம் உடைய ஒரு பொருளானது மின்மம் உள்ள மற்றொரு பொருளைத்தான் தன் மின்புலத்தால் விசைக்குள்ளாக்கும்.
வரலாறு [தொகு]
மிகப் பழங்காலத்திலேயே, அணுவின் துகள்களைப் பற்றி அறியத் தொடங்கிய 19 ஆம் நூறாண்டுக்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே, சுமார் கி.மு. 600 காலப்பகுதியில் தாலசு என்னும் கிரேக்க அறிஞர் மின்மம் பற்றிய சில அரிய கண்டுபிடிப்புகளை எழுதியுள்ளார். திண்மமாய் மாறிய, மஞ்சள் நிறத்தில் காணப்படும், மரப்பிசினாகிய அம்பர் என்னும் பொருளை ஒரு துணியில் தேய்த்தால், அது சிறு சிறு செத்தைகள், முடி போன்றவற்றை ஈர்ப்பதை அறிந்திருந்தனர். கி.மு.300 காலப்பகுதியில் வாழ்ந்த பிளாட்டோ என்பாரும், அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி எழுதியுள்ளார். பிற்காலத்தில், கி.பி. 1600களில் இங்கிலாந்தின் அரசி எலிசபெத்-1 அவர்களின் மருத்துவராகிய வில்லியம் கில்பர்ட் என்பாரும் அம்பர் மட்டுமல்லாமல், வைரம், கண்ணாடி, மெழுகு, கந்தகக் கட்டி முதலியனவும் அதே பண்பு கொண்டிருப்பதை அறிந்து எழுதினர். இலத்தீன் மொழியில் அம்பருக்கு எலெக்ட்ரம் என்று பெயர், இதன் அடிப்படையிலேயே மின்மப் பண்பு காட்டும் பொருட்களுக்கு மேற்குலக மொழிகளில் எலெக்ட்ரிக்ஃசு (electrics) என்றும், அதன் அடிப்படையில் சர் தாமசு பிரௌன் (Sir Thomas Browne), மின்சாரம் என்பதற்கு எலெக்ட்ரிசிட்டி (electricity) என்னும் சொற்களும் ஆக்கினர். பின்னர் 1729 ஆம் ஆண்டு காலப்பகுதியில், பிரான்சின் டு ஃவே (Du Fay) என்பார் மின்மங்கள் ஓட்டத்தில் இருவகை இருப்பதாகக் கண்டார். 1785 ஆம் ஆண்டு பிரான்சின் சார்லசு டெ கூலாம் என்பபர் மின்மங்களுக்கு இடையே நிலவும் விசைகள் பற்றிய, துல்லியமான தொடர்பாடுகளை நிறுவினார். மின்மங்களுக்கு இடையே உள்ள மின்விசையை அளந்து ஓர் அடைப்படையான சமன்பாட்டை நிறுவினார். இதற்கு கூலாம் விதி என்று பெயர்.