தானுந்து விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தானுந்து விளையாட்டுக்கள் என்று விரைவோட்டத் தானுந்துகள் கலந்து கொள்ளும் பல்வகை விளையாட்டுக்களை குறிப்பிடுகிறோம். இதை, மோட்டார்ப் பந்தயம், கார்ப் பந்தயம் போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. இது உலகில் மிக அதிகமாகத் தொலைக்காட்சியில் பார்க்கப்படும் விளையாட்டுக்களில் ஒன்று.இவற்றில் ஓரிருக்கை தானுந்துகள் போட்டியிடும் பார்முலா பந்தயங்கள், தொலைதூர நெடுஞ்சாலைப் போட்டிகள்,பொதுவாக பயன்படுத்தும் தானுந்துகளின் போட்டிகள் எனப் பலவாறாகப் பிரிக்கலாம்.

வரலாறு [தொகு]

தொடக்கம் [தொகு]

மிகப் பழைய காலத்தில் இருந்தே சில்லுகள் பூட்டிய வண்டிகளின் ஓட்டப்போட்டிகள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. மாட்டுவண்டிப் போட்டிகள், குதிரைவண்டிப் போட்டிகள் போன்றவை தற்போதும் நிகழ்வது உண்டு. பெட்ரோலில் இயங்கும் தானுந்துகள் பயன்பாட்டுக்கு வந்ததுமே தானுந்துப் போட்டிகளும் தொடங்கி விட்டன எனலாம். உலகின் முதல் தானுந்து ஓட்டப்போட்டியை பாரிஸ் வெளியீடான லெ வெலோசிப்பீட் என்பதன் சார்பில் அதன் தலைமை ஆசிரியர் மொன்சியர் போசியர் என்பவர் 1887 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ஒழுங்கு செய்தார். இப்போட்டி 2 கிலோமீட்டர் ஓட்டத் தூரத்தைக் கொண்டிருந்தது. ஜார்ஜ் பூட்டன் என்பவர், ஆல்பர்ட் என்பவருடன் சேர்ந்து தானே உருவாக்கிய தானுந்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். எனினும், இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு இவர் மட்டுமே வந்திருந்ததால் இதனைப் போட்டி என்று சொல்ல முடியாது. 1894 ஜூலை 22 ஆம் தேதி முதலாவது போட்டி என்று சொல்லத்தக்கதான நிகழ்வு லெ பெட்டிட் ஜர்னல் என்னும் இன்னொரு பாரிஸ் சஞ்சிகையால் ஒழுங்கு செய்யப்பட்டது. இதுவும் ஒரு நம்பகத் தன்மைப் போட்டியாகவே ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் காம்டே டி டயன் என்பவர் முதலாவதாக வந்தாலும் பென்ஹார்ட் எட் லெவாசர் என்பவரே முதலிலில் வந்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஓராண்டுக்குப் பின்னர் 1895 ஆம் ஆண்டில் உண்மையான தானுந்துப் போட்டி என்று சொல்லத்தக்க போட்டி பிரான்சில் இடம் பெற்றது. எமிலி லெவாசர் என்பவர் ஓட்டத்தூரத்தை முதலில் கடந்தபோதும் அவருடைய தானுந்து விதிகளின் படி நான்கு இருக்கைத் தானுந்தாக இல்லாததால் அவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.