சீதா தேவி, பரோடா மகாராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளவரசி சீதா தேவி
உய்யூரின் இளவரசி
Tenure1935 – 1943
பரோடாவின் ராணி
Tenure1943 – 1948
பிறப்பு(1917-05-12)12 மே 1917
சென்னை, பிரித்தானிய இந்தியா
இறப்பு15 பெப்ரவரி 1989(1989-02-15) (அகவை 71)
பாரிசு, பிரான்சு
துணைவர்மேகா ரங்கையா அப்பா ராவ்
(திருமணம். 1935 - விவாகரத்து. 1943)
பிரதாப் சிங் கெய்க்வாட் சிங் ராவ்
(திருமணம். 1943 - விவாகரத்து. 1956)
குழந்தைகளின்
பெயர்கள்
உய்யூரின் இளவரசர் வித்யூத் குமார் அப்பா ராவ்
பரோடாவின் இளவரசர் சாயஜி ராவ் கெய்க்வாட்
தந்தைராவ் வெங்கட குமார மகிபதி சூர்ய ராவ்
தாய்கபிலேசுவரபுரத்தின் இளவரசி சின்னமாம்பா

பிதாபுரத்தின் இளவரசி சீதா தேவி ( Princess Sita Devi of Pithapuram ) (முன்னர் பரோடா ராணி என்று அழைக்கப்பட்டார்) (2 மே 1917 - 15 பிப்ரவரி 1989) [1] "இந்தியாவின் வாலிசு சிம்ப்சன் " என்றும் அறியப்பட்டார். [2] மேலும், இவர் சாதாரண மக்களுக்கு கிடைக்காத சமூக நடவடிக்கைகளில் பங்கேற்க உலகம் முழுவதும் பயணம் செய்யும் செல்வந்தர்களின் சர்வதேச சமூகக் குழுவான ஜெட் செட் என்பதில் உறுப்பினராக இருந்தார். சீதாதேவி ஐதராபாத்தின் நிசாமின் மருமகள் இளவரசி நிலோபர் பரகத் பேகம் என்பவரின் நெருங்கிய தோழியாவார்.[3]

சுயசரிதை[தொகு]

சீதா தேவி பிதாபுரம் மகாராஜா ராவ் வெங்கடகுமார மகிபதி சூர்ய ராவ் பகதூர் கரு மற்றும் அவரது மனைவி ராணி சின்னமாம்பா தேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

முதல் திருமணம்[தொகு]

சீதா தேவி முதலில் உய்யூரின் ஜமீந்தார் மேக ரங்கய்யா அப்பா ராவ் பகதூர் என்பவரை மணந்தார். [2] இவர்களுக்கு ராஜா எம். விதுத்குமார் அப்பாராவ் என்ற மகன் இருந்தார்.

இரண்டாவது திருமணம்[தொகு]

இவர் தனது இரண்டாவது கணவரான பரோடாவைச் சேர்ந்த பிரதாப் சிங் கெய்க்வாட்டை 1943 இல் சென்னை குதிரைப் பந்தயத்தில் சந்தித்தார்,[2] கெய்க்வாட், அந்த நேரத்தில், உலகின் எட்டாவது பணக்காரராகக் கருதப்பட்டார். இந்தியாவின் இரண்டாவது பணக்கார இளவரசர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கெய்க்வாட் பின்னர் சீதா தேவியுடன் காதல் உறவைத் தொடங்கினார். அவரது வழக்கறிஞர் குழுவுடன் காதலர்கள் ஆலோசனை நடத்தினர். இந்திய சட்டப்படி ஜமீந்தாருடனான தனது முதல் திருமணத்தை முறித்துக் கொள்ள இந்துவான சீதா தேவியை இசுலாம் மதத்திற்கு மாறுமாறு வழக்கறிஞர்கள் பரிந்துரைத்தனர்.[2]

இவரது மதமாற்றத்திற்குப் பிறகு, கெய்க்வாட் இவரை 1943 இல் தனது இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டார். இது பிரித்தானிய அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இது முந்தைய பரோடாவின் கெய்க்வாட் இயற்றிய இருதுணை மணம் பற்றிய சட்டங்களை மீறியது. புது தில்லியில் உள்ள பிரித்தானிய ஆளுநர் இதற்கான விசாரணை மேற்கொண்டார். கெய்க்வாட் இச்சட்டம் பரோடாவின் குடிமக்களுக்கு பொருந்தும் என்றும், தான்ர் அவர்களின் மன்னராக இருப்பதால் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்றும் வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய அரசாங்கம் திருமணத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் சமஸ்தானங்களின் ஆட்சியாளர்களின் மனைவிகளுக்கான நெறிமுறையாக மகாராணியை "ஹெர் ஹைனஸ்" என்று குறிப்பிடவில்லை.[2]

வெளிநாட்டு பயணம்[தொகு]

1946 ஆம் ஆண்டில், கெய்க்வாட் தனது இரண்டாவது மனைவியுடன் வசிப்பதற்கு ஒரு மாளிகையைத் தேடி ஐரோப்பாவிற்கு ஒரு சுற்றுப்பயணம் சென்றார்.[2] சுதந்திரமான மொனாக்கோ தங்களின் இரண்டாவது வீட்டை அமைப்பதற்கு ஏற்ற இடம் என்பதை இவர்கள் கண்டறிந்தனர். இவர்கள் மான்டே கார்லோவில் ஒரு மாளிகையை வாங்கினார்கள். மகாராணி அங்கே நிரந்தரமாக தங்கினார்.[2]

பரோடாவின் பொக்கிசங்கள கையாடல் செய்தல்[தொகு]

கெய்க்வாட் அடிக்கடி பயணம் செய்து பரோடாவின் சில பெரிய பொக்கிசங்களை மொனாக்கோவிற்கு எடுத்துச் சென்று மகாராணியின் பாதுகாப்பில் வைத்திருந்தார்.[4]

இவர்கள் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவிற்கு இரண்டு பயணங்களையும் மேற்கொண்டனர். அங்கு அனைத்து ஆடம்பரமாக செலவழித்துச் சென்றனர். அந்த பயணங்களில் ஒன்றில் இவர்கள் $10 மில்லியன் செலவிட்டதாக பரவலாக அறிவிக்கப்பட்டது. இந்திய அதிகாரிகள் சமஸ்தானத்தின் நிதிகளை தணிக்கை செய்தனர். பரோடா கருவூலத்தில் இருந்து கெய்க்வாட் பல பெரிய தொகையை வாங்கியதை அறிந்த அவர்கள் அதனை திரும்ப அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இளவரசர் வருட வருமான $8 மில்லியனிலிருந்து பல தவணைகளாக செலுத்த இணங்கினார்.[2]

இளவரசர் தம்பதியினர் பரோடா கருவூலத்திலிருந்து ஏராளமான தொகையை மாற்றினர். அதில் புகழ்பெற்ற ஏழு இழைகள் கொண்ட விலைமதிப்பற்ற முத்து கழுத்தணிகள் (பரோடா முத்துக்கள் என்று அழைக்கப்பட்டது), மூன்று இழைகள் கொண்ட வைரம், நான்கு புகழ்பெற்ற முத்து கம்பளங்கள்,[4] 128.80 காரட் (25.760 கிராம்) எடை கொண்ட தெற்கின் விண்மீன் வைரம் மற்றும் 78.53 காரட் (15.706 கிராம்) எடை கொண்ட ஆங்கில திரெஸ்டன் வைரம் ஆகியவற்றை வைத்திருந்தனர். தம்பதியினர் யுஜெனி வைரத்தையும் வைத்திருந்தனர். பரோடா புதிதாக சுதந்திர இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட போது, இந்திய அதிகாரிகள் இறுதியில் சில பொருட்களை மீட்டெடுக்க முடிந்தது. ஆனால் சில நகைகள் மகாராணியின் உரிமைக்கு மாற்றப்பட்டன. 

1965 ஆம் ஆண்டில், இவர் பாரிஸில் ஒரு ஓவியத்தை டேனியல் வைல்டன்ஸ்டீன் என்பவரிடமிருந்து வாங்கினார். அது பிரான்சுவா பௌச்சரின் லா போசி என்று நம்பினார். அது போலியானது என்று கண்டறியப்பட்டபோது, டேனியல் மீது ஆங்கில நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

திருமண முறிவு[தொகு]

சீதா தேவி 1956 இல் கெய்க்வாட்டை விவாகரத்து செய்தார். கெய்க்வாட் உடனடியாக இலண்டன் சென்றார். [5]

தனது இரண்டாவது திருமணம் முறிந்த பிறகும் இவர் பாரிஸ் குடியிருப்பிலேயே இருந்தார். இவர் தொடர்ந்து ஆடம்பரமாகவே வாழ்ந்தார். தான் பயணம் செய்யும் போது ஒரு பெரிய அலமாரியை உடன் எடுத்துச் செல்வார். அதில் ஆயிரம் புடவைகள், நூற்றுக்கணக்கான ஜோடி காலணிகள், மேலும், நிச்சயமாக இவருடைய நகைகளும் இருந்தன.[6] ஆனால், 1974 ஆம் ஆண்டு அவளுக்குப் பிடித்த சில நகைகளை ரகசியமாக ஏலம் விடும் அளவுக்கு இவருடைய செல்வம் குறைந்து போனது. [7]

இறப்பு[தொகு]

1985 இல் இவருடைய மகன் சாயாஜி ராவ் கெய்க்வாட் தனது 40 வயதில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அவரது மரணத்திற்கு குடிப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் காரணமாக கூறப்படுகிறது. [8] நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சீதாதேவி இயற்கை எய்தினார்.

மகாராணி இறந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு சில விலைமதிப்பற்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1994 ஆம் ஆண்டு ஜெனிவா பெட்டகத்தில் முத்து கம்பளம் கண்டுபிடிக்கப்பட்டது.[4] இது ஒரு அரபு இளவரசருக்கு 31 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. [2] தற்போது இந்த கம்பளம் கத்தாரில் உள்ள தோகாவிலுள்ள இசுலாமிய கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தெற்கின் விண்மீன் உட்பட பிற வைரங்கள் ஆம்ஸ்டர்டமில் ஒரு நகைக்கடையில் இருந்தன.[2]

மகாராணியின் மரணத்திற்குப் பிறகு, அவரது பரம்பரைச் சொத்தின் ஒரு பகுதி அவரது மருமகள் (சிட்லி குடும்பத்தைச் சேர்ந்த ராணி மஞ்சுளா தேவியின் மகள்) அனங்கரேகா தேவிக்கு மாற்றப்பட்டது. அவர் தற்போது தனது குடும்பத்துடன் அசாமில் வசிக்கிறார்

இறுதியில், இந்தியா, மோசடி காரணமாக, 1951 இல் கெய்க்வாட்டை பதவி நீக்கம் செய்தது. மேலும், அவரது முதல் மனைவி மூலம் பிறந்த அவரது மூத்த மகன் அவருக்குப் பிறகு பதவியேற்றார்.[9]

மகாராணி ஒரு தானுந்து பிரியராக இருந்தார். மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தால் இவருக்காக பிரத்யேகமாக ஒரு வாகனம் தயாரிக்கப்பட்டது. எஸ்குவேர் இதழ் 1969 ஆம் ஆண்டுக்கான "வேடிக்கையான இணைகளின்" பட்டியலில் சீதா தேவி மற்றும் இவரது மகன் சாயாஜி ராவ் கெய்க்வாட் ஆகிய இருவரையும் சேர்த்தது. [6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_தேவி,_பரோடா_மகாராணி&oldid=3882713" இலிருந்து மீள்விக்கப்பட்டது