கடம்பு மரம்
கடம்ப மரம் (Anthocephalus Cadamba) முருகனுக்கும், திருமாலுக்கும் உரியது எனச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெள்ளை. நன்னன் என்னும் அரசனின் காவல்மரம் கடம்பு. நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். சாமியாடும் வேலன் மட்டும் இதனை அணிந்துகொள்வான். இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பர்.
பொருளடக்கம் |
சங்கப்பாடல் குறிப்புகள் [தொகு]
- கடம்பு புலவர் போற்றும் மரம். [1]
- நீர்வளப் பகுதியில் கடம்பு செழித்து வளரும். [2]
- அருவி ஆடிய மகளிரில் ஒருத்தி கடம்பமரத்தைப் பற்றிக்கொள்ள மற்றவர்கள் அவளது கையைப் பற்றிக்கொண்டு நீராடினர். [3]
- கடம்பின் மலர்க்கொத்து உருண்டு இருக்கும் [4]
- கடம்பு காடைப் பறவை போல் பூக்கும். [5]
- தெய்வம் முருகப்பெருமானைக் கடம்பமர் நெடுவேள் என்பர். [6] [7] [8] [9] [10], [11]
- முருகன் திருவிழாவின்போது கடம்ப மரத்தில் கொடி கட்டுவர். கடம்பு கொடி யாத்து, கண்ணி சூடி, (முருகயர்வர்). [12]
- முருகனுக்குக் கடம்பின் இலைகளால் தொடுத்த மாலை போடுவர். கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் - புறம் 23-3
- கடம்பன் என்னும் சொல் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நால்வகை முதுகுடிகளில் ஒன்று. [13]
- வெறியாட்டு நிகழ்த்தும் வேலன் கடப்பமலர் அணிந்திருப்பான். [14]
- குறமகள் முருகாற்றுப்படுக்கும் இடங்களில் ஒன்று [15]
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாரன் பகைவனின் கடம்ப-மரத்தை வெட்டி முரசு செய்துகொண்டான். [16]
- களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் கடம்பின் பெருவாயில் நன்னனை அதித்தான். [17]
- ஆலமரம், கடம்பு, ஆற்றுநடுத் தீவு (திருவரங்கம்), (இருங்)குன்றம் ஆகிய இடங்களில் திருமால் குடிகொண்டுள்ளான். [18]
கடம்ப மரமும், மதுரையும் [தொகு]
முற்காலத்தில் மதுரை கடம்ப மரங்களின் சோலையாக இருந்தது என்றும், இந்த மரங்களை அழித்துத் தான் மதுரை நகரம் தோன்றியதாகவும் இந்த காரணத்தாலேயே மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயர் உண்டு என்றும் தலபுராண அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். [19] இந்த கடம்ப மரம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தலவிருட்சமாகும். மீனாட்சி அம்மனுக்கு கடம்பவனவாசினி மற்றும் கடம்பவனபூவை என்ற திருபெயர்கள் உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிக்குள் சொக்கநாதர் சன்னதி அருகில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த கடம்ப மரம வெள்ளி தகடு போர்த்திப் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மருதத்துறை என்பதே மருவி மதுரை ஆயிற்று என்பது வரலாற்று உண்மை.
இவற்றையும் காண்க [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
- ↑ புலவரை அறியாத புகழ் பூத்த கடம்பு (அமர்ந்தவன் முருகவேள்) பரிபாடல் 19-2,
- ↑ நறுநீர்ப் பொய்கை அடைகரை நிவந்த துறுநீர்க் கடம்பு - சிறுபாணாற்றுப்படை 69
- ↑ குறிஞ்சிப்பாட்டு 176
- ↑ உருள் இணர்க் கடம்பு - பரிபாடல் 21-11,50
- ↑ வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன ... குறும்பூழ் - பெரும்பாணாற்றுப்படை 203
- ↑ பெரும்பாணாற்றுப்படை 75
- ↑ கடம்பின் சீர்மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ - மதுரைக்காஞ்சி 614
- ↑ கார் கடப்பந்தாரன் எங் கடவுள் – சிலப்பதிகாரம் 24 பாட்டிமடை வெறிவிலக்கல்
- ↑ மணிமேகலையைக் காமுற்ற உதயகுமரன் ‘காரமர் கடம்பன் அல்லன்’ என விளக்கப்படுகிறான். மணிமேகலை 4-49
- ↑ உருவிணர்க் கடம்பின் ஒலி தாரோய் பரிபாடல் 5-81
- ↑ அகநானூறு 138-11,
- ↑ அகநானூறு 382-3,
- ↑ துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை - புறநானூறு 335
- ↑ கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட - நற்றிணை 34
- ↑ புதுப்பூங் கடம்ப மரத்தடி திருமுருகாற்றுப்படை -225
- ↑ பதிற்றுப்பத்து 11-12, பதிற்றுப்பத்து 12-3, பதிற்றுப்பத்து 17-5, பதிற்றுப்பத்து 20-4, பதிற்றுப்பத்து 88-6, அகநானூறு 127-4, அகநானூறு 347-4,
- ↑ பதிற்றுப்பத்து பதிகம் 4-7,
- ↑ பரிபாடல் 4-67,
- ↑ http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-music/madurai-through-a-fish-eyed-lens/article4238705.ece