உமறு இப்னு அல்-கத்தாப்
| 'உமர் | |
| அமீருல் முஃமினீன் (நம்பிக்கையாளர்களின் தளபதி) |
|
|---|---|
| கலீபா உமர் பேரரசு உச்சம், 644. | |
| காலம் | 23 ஆகஸ்ட் 634–7 நவம்பர் 644 |
| பிறப்பு | c. 586-590 |
| பிறந்த இடம் | மக்கா, அரேபியா. (தற்போது, சவூதி அரேபியா) |
| இறப்பு | 7 நவம்பர் 644 |
| இறந்த இடம் | மதீனா, அரேபியா. (தற்போது, சவூதி அரேபியா) |
| முன் ஆட்சிசெய்தவர் | அபூபக்கர் |
| பின் ஆட்சிசெய்தவர் | உதுமான் |
| Other titles | அல் ஃபாரூக் |
உமறு இப்னு அல்-கத்தாப் (அரபி: -عمر بن الخطّاب) கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களில் முக்கியமானவரும் ஆவார். உமறு முகம்மது நபியின் ஆலோசகரும் தோழருமாவார். முகம்மது நபியின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாகப் பொறுப்பேற்றார். இவர் கிபி 634 முதல் கிபி 644 வரை ஆட்சி செய்தார். இவரது நிருவாக மற்றும் போர்த் திறமையால் இசுலாமியக் கலீபகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து, இவரது ஆட்சிக் காலத்தில் ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அர்மீனியா ஆகிய பகுதிகள் அதன் கீழ் வந்தன. முஹம்மது நபியை விட வயதில் இளையவரான உமறு மக்காவிலே பிறந்தவர். அவர் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. கி.பி. 586-ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பர். துவக்கத்தில் உமறு, முகமதின் புதிய மார்க்கத்திற்கு கடுமையான எதிரியாக இருந்தார். ஆனால், திடீரென்று அவர் அம்மார்க்கத்தில் சேர்ந்து, அதன் வலிமைமிக்க ஆதரவாளர்களில் ஒருவரானார். நபியின் ஆலோசகர்களில் ஒருவராகித் தன் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்து வந்தார்.
பொருளடக்கம் |
[தொகு] பதவிப்போட்டியைத் தவிர்த்தல்
முகமது நபி தமக்குப் பின்னால் யார் பதவிக்கு வரவேண்டும் என்பதைக் குறிப்பிடாமலேயே கி.பி. 632-ல் காலமானார். உடனேயே தயக்கம் எதுவும் இன்றி முகமதின் நெருங்கிய தோழரும், மாமனாருமான அபூபக்கர் பதவி ஏற்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தார்கள். இதனால் பதவி போட்டி தவிர்க்கப்பட்டது. அபூபக்கர் முதல் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
கலீபா அபூபக்கர் வெற்றிமிக்க தலைவராக விளங்கினார். ஆனால் இரண்டே ஆண்டுகள் ஆட்சிப் பணி புரிந்துவிட்டு அவர் காலமானார். எனினும் அவர் தமக்குப் பின்னால் உமறு பதவிக்கு வரவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அபூபக்கரைப் போலவே உமறுவும் நபிகளின் மாமனார் ஆவார்.
உமறு கி.பி. 634-ல் பதவியேற்று 644 வரை ஆட்சி செய்தார். அவரை பாரசீக அடிமை ஒருவன் மதீனாவில் கத்தியால் குத்திவிட்டான். மரணப் படுக்கையில் இருந்த உமறு தமக்குப் பின் பதவிக்கு வருவோர்களை தேர்ந்தெடுக்க ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். ஆறு பேர்களுள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஏற்பாடு செய்தார். இவ்வாறாக பதவிக்கான போட்டி தவிர்க்கப்பட்டது. இந்தக் குழு மூன்றாம் கலிபாவாக உதுமானைத் தேர்ந்தெடுத்தது. அவர் 644 முதல் 656 வரை ஆட்சி செய்தார்.
[தொகு] வெற்றிகள்
உமறுடைய பத்தாண்டு கிலாபத்தின் போதுதான் அராபியர்களுக்கு முக்கிய வெற்றிகள் கிட்டின. உமறு பதவிஏற்ற சிறிது காலத்தில் அப்போது பைசாந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சிரியாவும், பாலஸ்தீனும் அரபு இராணுவத்தின் படையெடுப்புக்கு இலக்காகின. யர்முக் போரில் (636) அரபுகள் பைஸாந்தியப் படையினைத் தோற்கடித்துப் பெரும் வெற்றிகண்டார். அதே ஆண்டு தமாஸ்கசும் (திமிஷ்கும்) வீழ்ந்தது. இரண்டாண்டுகளுக்குப்[ பின்னர் ஜெருசலம் சரணடைந்தது. கி.பி. 641-க்குள், பாலஸ்தீனம் முழுவதையும் சிரியாவையும் அரபுகள் வெற்றிகொண்டு இன்றைய துருக்கியாக அறியப்படும் நாட்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தனர். 639 -ல் பைசாந்திய ஆட்சியின் கீழிருந்த எகிப்தின் மீதும் அரபு இராணுவம் படையெடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குள் எகிப்தும் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டது.
[தொகு] உமறு காலத்திய அராபியப் பேரரசு
உமறு அவர்கள் பதவியேற்பதற்கு முன்னரே, அப்போது பாரசீகர்களின் ஸஸ்ஸானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஈராக் மீது அராபியர்கள் தாக்குதல் தொடங்கியிருந்தனர்.. கி.பி. 641-க்குள் ஈராக் முழுவதும் அரபு ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அரபு இராணுவம் பாரசீகத்தின் மீதே படையெடுப்பைத் தீவிரப்படுத்தியது. நஹாவந்துப் போரில் கடைசி ஸஸ்ஸானியப் பேரரசின் படைகள் முற்றிலுமக முறியடிக்கப்பட்டன. உமறு 644-ல் காலமான போது கிழக்கு ஈரானியப் பகுதியும் கைப்பற்றப்பட்டிருந்தது.
உமறு காலமான பின்னருங்கூட அரபு இராணுவத்தின் வேகம் குறையவில்லை. கிழக்கே, அவை பாரசீகம் முழுவதையும் கைப்பற்றின. மேற்கே ஆப்பிரிக்கா நோக்கி முன்னேறின. உமறுவின் வெற்றிகள் பரந்ததாக மட்டுமல்லாமல் அவை நிரந்தரமானதாகவும் இருந்தன. ஈரானிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர் என்ற போதும் இறுதியில் அவர்கள் அரபு ஆட்சியிலிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். சிரியா, எகிப்து ஆகிய நாடுகள் அவ்வாறு மீட்டுக்கொள்ளவில்லை. இந்நாடுகள் முழுமையான அரபு மயமானதுடன் இன்றளவும் அவ்வாறே இருந்து வருகின்றன.
[தொகு] உமறுவின் கொள்கைகள்
தமது அரபியப் படைகள் வெற்றிகொண்ட இந்த பரந்த பேரரசை முறையாக ஆட்சி செய்ய தக்க சட்ட திட்டங்களை உமறு வகுத்தார். அரபுகள் சலுகைகள் பெற்ற இராணுவப் பிரிவினராக தாங்கள் வெற்றி கொண்ட வட்டாரங்களில் வாழவேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களிடமிருந்து விலகி கோட்டைகளுடைய நகரங்களுக்குள் இருக்க வேண்டுமென்றும் உமறு முடிவெடுத்தார். பெருவாரியாக அரபுகளாக இருந்த முஸ்லீம் ஆட்சியாளர்களுக்குக் குடிமக்கள் திறை செலுத்தி வரவேண்டும். மற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வித தலையீடுமின்றி, அவர்களை அமைதியாக இருக்க விட்டுவிட வேண்டும். இன்னும் குறிப்பாக அவர்களைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் சேறுமாறு செய்யக்கூடாது என்றும் வழி செய்தார்.எனினும் முஹம்மது நபி அவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் பரவியதற்கு உமறு ஒரு முக்கியக் காரணமானவராக விளங்கினார்.
கிபி 634-ம் ஆண்டு ஒரு பாரசீக அடிமையால் படுகொலை செய்யப்பட்டார். இறக்கும் முன் இவர் பத்து நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அதனிடம் தங்களுக்குள் தனக்குப் பிந்திய கலீபாவாக ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளப் பணித்தார். மேலும் 3 நாட்கள் இதற்கு அவகாசமும் கொடுத்தார். இவ்வாறு உதுமான் அவர்கள் அடுத்த கலீபாவாக அந்தக் குழுவினராற் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
[தொகு] உசாத்துணை
மைக்கேல் ஹெச். ஹார்ட், அவர்கள் எழுதிய "நூறு பேர்".(புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை) மீரா பதிப்பகம்- 2008