உமறு இப்னு அல்-கத்தாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமர்(ரலி)
அமீருல் முஃமினீன்
(நம்பிக்கையாளர்களின் தளபதி)
கலீபா உமர்(ரலி) பேரரசு உச்சம், 644.
காலம்23 ஆகஸ்ட் 634–7 நவம்பர் 644
பட்டங்கள்அல் ஃபாரூக்
பிறப்புc. 583 (அ) 584 -590
பிறந்த இடம்மக்கா, அரேபியா.
(தற்போது, சவூதி அரேபியா)
இறப்பு7 நவம்பர் 644
இறந்த இடம்மதீனா, அரேபியா.
(தற்போது, சவூதி அரேபியா)
முன் ஆட்சிசெய்தவர்அபூபக்கர்(ரலி)
பின் ஆட்சிசெய்தவர்உதுமான்(ரலி)


உமர் இப்னு அல்-கத்தாப்

(அரபி: -عمر بن الخطّاب) எனும் இயற்பெயர் கொண்ட உமர்(ரலி) கலீபாக்களில் இரண்டாமவரும் அவர்களுள் முக்கியமானவரும் ஆவார்.[1] உமர்(ரலி) முகம்மது நபி(ஸல்)யின் ஆலோசகரும் தோழருமாவார். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இவரது மகளை மணந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கு மாமனார் முறையுமாவார்கள். “அஷ்ரதுல் முபஷ்ஷராஹ்” எனப்படும் சுவர்க்கத்துக்கு நன்மாராயங் கூறப்பட்ட பதின்மருள் ஒருவராவார். முகம்மது நபியின் மறைவுக்குப் பின்னர் முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாகப் பொறுப்பேற்றார். இவர் கிபி 634 முதல் கிபி 644 வரை ஆட்சி செய்தார். இவரது நிர்வாக மற்றும் போர்த் திறமையால் இசுலாமியக் கலீபகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து, இவரது ஆட்சிக் காலத்தில் ஈராக், பாரசீகம், எகிப்து, பலஸ்தீனம், சிரியா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் அர்மீனியா ஆகிய பகுதிகள் அதன் கீழ் வந்தன.[2] முஹம்மது நபியை விட வயதில் இளையவரான உமர்(ரலி) மக்காவிலே பிறந்தவர். அவர் பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை. கி.பி. 583-ஆம் ஆண்டாக இருக்கலாம் என்பர். துவக்கத்தில் உமர்(ரலி), முகமதின் புதிய மார்க்கத்திற்கு கடுமையான எதிரியாக இருந்தார்.[3][4][5] ஆனால், தனது சகோதரியின் காரணமாக, அவர் அம்மார்க்கத்தில் சேர்ந்து, அதன் வலிமைமிக்க ஆதரவாளர்களில் ஒருவரானார்.[6] நபியின் ஆலோசகர்களில் ஒருவராகித் தன் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்து வந்தார்.[7]

பிறப்பு[தொகு]

இவர் மக்கத்துக் குறைஷிகளில் மிகவும் பிரபல்யமான கோத்திரமான அதீ என்ற குலத்தில் கந்தமா,கத்தாப் ஆகியோருக்கு மகனாக கி.பி.586 ஆம் ஆண்டு பிறந்ததாக கூறப்படுகிறது. முகமது நபியை விட 10 வயது இளையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடும்பம்[தொகு]

இவருக்கு மூன்று மனைவிகள் முதலாவது மனைவியின் பெயர் கரீபா பின்த் அபீ உமைய்யா அல் மக்சூமி. இரண்டாவது மனைவியின் பெயர் ஜைனப் பின் மாஸியுன். இவருக்கு அப்துல்லா மற்றும் ஹஃப்ஸா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர். மூன்றாவது மனைவியின் பெயர் மலைக்கா பின்த் ஜாருல் அல் குஸைய். இவர் உம்மு குல்தூம் என்றும் அழைக்கப்பட்டார்.

பதவிப்போட்டியைத் தவிர்த்தல்[தொகு]

முகமது நபி(சல்) தமக்குப் பின்னால் யார் பதவிக்கு வர வேண்டும் என்பதைக் குறிப்பிடாமலேயே கி.பி. 632-ல் காலமானார்.[8][9] உடனேயே தயக்கம் எதுவும் இன்றி முகம்மதின் நெருங்கிய தோழரும், மாமனாருமான அபூபக்கர்(ரலி) பதவி ஏற்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தார்கள்.[10] இதனால் பதவி போட்டி தவிர்க்கப்பட்டது.[9][11][12] அபூபக்கர்(ரலி) முதல் கலீபாவாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

கலீபா அபூபக்கர்(ரலி) வெற்றிமிக்க தலைவராக விளங்கினார். ஆனால் இரண்டே ஆண்டுகள் ஆட்சிப் பணி புரிந்துவிட்டு அவர் காலமானார். எனினும் அவர் நோயுற்றிருக்கும் பொழுது மற்றவர்களுடன் ஆலோசித்து உமர் இப்னு கத்தாப் அவர்களை கலீபாவாகத் தேர்ந்தெடுத்தார்..[13][14][15] அதன்படி இவர் ஹிஜ்ரி 13-ம் ஆண்டு ஜமாதுல்ஆகிர் 23-ந்தேதி (கி.பி:633 ஆகஸ்ட் 23ந்தேதி) பதவியேற்றார். அபூபக்கரைப் போலவே உமரும் நபிகளின் மாமனார் ஆவார்.

இஸ்லாத்தை ஏற்றல்[தொகு]

முதலில் இவர் முஹம்மது நபியை இறைத்தூதர் என அங்கீகரிக்கவில்லை முஸ்லிம்களின் பெரும் விரோதியாக இருந்தார். முஸ்லிம்களுக்கு தொடர்ந்து துன்பங்களை தந்துவந்தார். ஒருநாள் நபியை கொன்று விடுவதாக உருவியவாளுடன் சென்றவர் வழியில் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றிருந்த தனது சகோதரியிடமிருந்த குர்ஆன் வசனங்கள் எழுதியிருந்த காகிதத்தை வாசித்ததும் உண்மை உணர்ந்து இஸ்லாத்தை தழுவினார். இவர் இஸ்லாத்தை தழுவிய பின்னர் இஸ்லாமியருக்குப் பலம் அதிகரித்தது .

உமர் கி.பி. 634-ல் பதவியேற்று 644 வரை ஆட்சி செய்தார். அவரைப் பாரசீக அடிமை ஒருவர் மதீனாவில் கத்தியால் குத்திவிட்டார். மரணப் படுக்கையில் இருந்த உமர் தமக்குப் பின் பதவிக்கு வருவோர்களை தேர்ந்தெடுக்க ஆறு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். ஆறு பேர்களுள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஏற்பாடு செய்தார். இவ்வாறாகப் பதவிக்கான போட்டி தவிர்க்கப்பட்டது. இந்தக் குழு மூன்றாம் கலிபாவாக உதுமானைத் தேர்ந்தெடுத்தது. அவர் 644 முதல் 656 வரை ஆட்சி செய்தார்.

வெற்றிகள்[தொகு]

உமர் அவர்களின் வாள்.

உமருடைய பத்தாண்டு கிலாபத்தின் போதுதான் அராபியர்களுக்கு முக்கிய வெற்றிகள் கிட்டின. உமர் பதவியேற்ற சிறிது காலத்தில் அப்போது பைசாந்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த சிரியாவும், பாலஸ்தீனும் அரபு இராணுவத்தின் படையெடுப்புக்கு இலக்காகின. யர்முக் போரில் (636) அரபுகள் பைஸாந்தியப் படையினைத் தோற்கடித்துப் பெரும் வெற்றிகண்டனர்.[16] அதே ஆண்டு தமாஸ்கசும் (திமிஷ்கும்) வீழ்ந்தது. இரண்டாண்டுகளுக்குப்[ பின்னர் ஜெருசலம் சரணடைந்தது.[17] கி.பி. 641-க்குள், பாலஸ்தீனம் முழுவதையும் சிரியாவையும் அரபுகள் வெற்றிகொண்டு இன்றைய துருக்கியாக அறியப்படும் நாட்டை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தனர். 639 -ல் பைசாந்திய ஆட்சியின் கீழிருந்த எகிப்தின் மீதும் அரபு இராணுவம் படையெடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குள் எகிப்தும் முழுமையாக வெற்றி கொள்ளப்பட்டது. எத்தகைய சண்டையிலும் அரபிய முஸ்லிம்கள் 50,000 நபர்களுக்குமேல் பங்கேற்க வில்லை. ஆனால் எதிரிகளின் படையில் 2 லட்சத்துக்கு மேல் குழுமியிருந்த யுத்தங்களிலும் சொற்பகாலத்தில் பெரும் வெற்றி பெற்றது ஒரு அற்புதச்செயலாகும்.

உமறு காலத்திய அராபியப் பேரரசு[தொகு]

உமறு அவர்கள் பதவியேற்பதற்கு முன்னரே, அப்போது பாரசீகர்களின் ஸஸ்ஸானியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த ஈராக் மீது அராபியர்கள் தாக்குதல் தொடங்கியிருந்தனர். கி.பி. 641-க்குள் ஈராக் முழுவதும் அரபு ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அரபு இராணுவம் பாரசீகத்தின் மீதே படையெடுப்பைத் தீவிரப்படுத்தியது. நஹாவந்துப் போரில் கடைசி ஸஸ்ஸானியப் பேரரசின் படைகள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டன. உமறு 644-ல் காலமான போது கிழக்கு ஈரானியப் பகுதியும் கைப்பற்றப்பட்டிருந்தது. உமரின் பத்தரை வருட ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் 22,51,030 சதுர மைல் பரப்பளவுள்ள நாடுகளை கைப்பற்றியது. அக்கால கட்டத்தில் உலகில் இஸ்லாமிய அரசாங்கமே மிகப் பெரிய அரசாங்கமாக திகழ்ந்தது..

உமறு காலமான பின்னருங்கூட அரபு இராணுவத்தின் வேகம் குறையவில்லை. கிழக்கே, அவை பாரசீகம் முழுவதையும் கைப்பற்றின. மேற்கே ஆப்பிரிக்கா நோக்கி முன்னேறின.[18] உமறுவின் வெற்றிகள் பரந்ததாக மட்டுமல்லாமல் அவை நிரந்தரமானதாகவும் இருந்தன. ஈரானிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவினர் என்ற போதும் இறுதியில் அவர்கள் அரபு ஆட்சியிலிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். சிரியா, எகிப்து ஆகிய நாடுகள் அவ்வாறு மீட்டுக்கொள்ளவில்லை. இந்நாடுகள் முழுமையான அரபு மயமானதுடன் இன்றளவும் அவ்வாறே இருந்து வருகின்றன.

உமரின் கொள்கைகள்[தொகு]

தமது அரபியப் படைகள் வெற்றிகொண்ட இந்தப் பரந்த பேரரசை முறையாக ஆட்சி செய்யத் தக்க சட்ட திட்டங்களை உமர் வகுத்தார்.[19] அரபுகள் சலுகைகள் பெற்ற இராணுவப் பிரிவினராகத் தாங்கள் வெற்றி கொண்ட வட்டாரங்களில் வாழ வேண்டும் என்றும் அந்தந்த நாட்டு மக்களிடமிருந்து விலகிக் கோட்டைகளுடைய நகரங்களுக்குள் இருக்க வேண்டுமென்றும் உமர் முடிவெடுத்தார்.[20] பெருவாரியாக அரபுகளாக இருந்த முஸ்லீம் ஆட்சியாளர்களுக்குக் குடிமக்கள் திறை செலுத்தி வர வேண்டும். மற்றபடி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வித தலையீடுமின்றி, அவர்களை அமைதியாக இருக்க விட்டுவிட வேண்டும்.[21] இன்னும் குறிப்பாக அவர்களைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் சேறுமாறு செய்யக்கூடாது என்றும் வழி செய்தார்.[22] எனினும் முஹம்மது நபி அவர்களுக்குப் பின்னர் இஸ்லாம் பரவியதற்கு உமர் ஒரு முக்கியக் காரணமானவராக விளங்கினார்.[23]

இறுதிகாலம்[தொகு]

கிபி 644-ம் ஆண்டு காலை நேரத் தொழுகையை நடத்திகொண்டிருந்த போது முஸ்லிம் போல் வேடம் தரித்த பைரோஸ் என்ற பாரசீக அடிமையால் குருவாளால் ஆறுமுறை குத்தப்பட்ட உமர் மூன்று நாட்களுக்கு பின் மரணமானார்..[24][25] இறக்கும் முன் இவர் ஆறு நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அதனிடம் தங்களுக்குள் தனக்குப் பிந்திய கலீபாவாக ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளப் பணித்தார். மேலும் 3 நாட்கள் இதற்கு அவகாசமும் கொடுத்தார். இவ்வாறு உதுமான் அவர்கள் அடுத்த கலீபாவாக அந்தக் குழுவினராற் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இறந்த பின்னர் இவரின் உடல் மதீனாவில் முகம்மது நபியின் கல்லறைக்கும் அபூபக்கர் (ரலி)யின் கல்லறைக்கும் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

உமரின் சிறப்புகள்[தொகு]

தனது ஆட்சிகாலத்தில் கூபா,புஸரா உள்ளிட்ட நகரங்களை நிர்மாணித்தார். அனைத்து நகரங்களிலும் நீதிபதி (காஜி‌‌‌‌‌‌‌)களை இவரே முதன்முதலில் நியமித்தார். கடிதங்களை எடுத்துச்செல்ல உதவியாக அஞ்சலகங்களை ஏற்படுத்தினார். ஹிஜ்ரி 18-ல் பாரசீகர்களில் நாணய வடிவில் நாணயங்களை வெளியிட்டார். இவரின் ஆட்சியில் வேத வசனங்கள் மறைச் சட்டங்கள் முழு மலர்ச்சி பெற்றன. சாதி, மத, பேதமின்றி அனைத்து மக்களும் இறைநீதியின் நிழலில் நிம்மதியான வாழ்வை அனுபவித்தனர். இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது ஆட்சியாளர்கள் ஏதேனும் தவறு செய்தால், துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் உரிமையும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

உசாத்துணை[தொகு]

மைக்கேல் ஹெச். ஹார்ட், அவர்கள் எழுதிய "நூறு பேர்".(புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை) மீரா பதிப்பகம்- 2008

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. Ahmed, Nazeer, Islam in Global History: From the Death of Prophet Muhammad to the First World War, American Institute of Islamic History and Cul, 2001, p. 34. ISBN 0-7388-5963-X.
  2. Hourani, p. 23.
  3. Al Farooq, Umar by Muhammad Husayn Haykal.chapter no:1 page no:51
  4. Armstrong, p. 128.
  5. Al Farooq, Umar, Muhammad Husayn Haykal Chapter no: 1 page no: 53
  6. Tartib wa Tahthib Kitab al-Bidayah wan-Nihayah by ibn Kathir, published by Dar al-Wathan publications , Riyadh Kingdom of Saudi Arabia, 1422 Anno hegiræ (2002) compiled by Dr. Muhammad ibn Shamil as-Sulami, page 170, ISBN 979-3407-19-6 பிழையான ISBN
  7. Muhammad, ibn Sa'ad (830-840 BCE). At-Tabaqat al Kubra. பக். Chapter 3 page 281. 
  8. as-Suyuti, The History of Khalifahs Who Took The Right Way (London, 1995), p. 54 – 61.
  9. 9.0 9.1 Madelung, Wilferd (1997). The Succession to Muhammad. Cambridge University Press. 
  10. The History of al-Tabari. State University of New York Press. 1990. 
  11. Madelung, Wilferd (1997). The Succession to Muhammad. Cambridge University Press. பக். 33. 
  12. Madelung, Wilferd (1997). The Succession to Muhammad. Cambridge University Press. பக். 22. 
  13. K. Y. Blankinship, The History of al-Tabari: vol. XI, p. 145-153.
  14. Serat-i-Hazrat Umar-i-Farooq, by Mohammad Allias Aadil, page no:58-59
  15. K. Y. Blankinship, The History of al-Tabari: vol. XI, p. 157
  16. http://www.jewishvirtuallibrary.org/jsource/History/Caliphate.html
  17. Dubnow, Simon (1968). History of the Jews Volume 2. Cornwall Books. பக். 326. http://books.google.co.uk/books?id=MZ2MwNzB69IC&pg=PA324&dq=Umar%7Comar+++++++Jews+++Jerusalem&hl=en&sa=X&ei=v5DoT5uAFufC0QXA5eypCQ&ved=0CD4Q6AEwATgK#v=onepage&q=Umar. 
  18. Medieval Islamic Civilization, Josef W. Meri, Jere L. Bacharach page no:844
  19. Encyclopedia Britannica
  20. The Cambridge History of Islam, ed. P.M. Holt, Ann K.S. Lambton, and Bernard Lewis, Cambridge 1970
  21. Modern Islamic political thought, Hamid Enayat, page no:6
  22. Giorgio Levi Della Vida and Michael Bonner, Encyclopaedia of Islam, and Madelung, The Succession to Prophet Muhammad, p. 74
  23. The 100, Michael H. Hart
  24. Modern reformist thought in the Muslim world. By Mazheruddin Siddiqi, Adam Publishers & Distributors. pg.147
  25. Al Farooq, Umar, Muhammad Husayn Haykal. chapter no: Death of Umar

குறிப்பு[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

ஆளுமைப் பண்புகள்[தொகு]

  1. http://www.islamforlife.co.uk/khalifa_umar_bin_al.htm
  2. http://sahaba.net/modules.php?name=News&file=categories&op=newindex&catid=23 பரணிடப்பட்டது 2012-03-16 at the வந்தவழி இயந்திரம்
  3. http://www.bogvaerker.dk/Umar.html
  4. http://www.jewishvirtuallibrary.org/jsource/biography/Khattab.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமறு_இப்னு_அல்-கத்தாப்&oldid=3849157" இலிருந்து மீள்விக்கப்பட்டது