அருள் செல்வநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள் செல்வநாயகம்
பிறப்புசூன் 6, 1926
குருமண்வெளி, மட்டக்களப்பு
இறப்புசெப்டம்பர் 2, 1973(1973-09-02) (அகவை 47)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
பெற்றோர்தம்பாய்பிள்ளை, வள்ளியம்மை

அருள் செல்வநாயகம் (சூன் 6, 1926 - செப்டம்பர் 2, 1973) வரலாற்றுச் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள் எழுதிய ஈழத்து எழுத்தாளர். இவரது முதற் சிறுகதையான 'விதியின் கொடுமை' 1946 இல் மின்னொளி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இவரது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, காவேரி, உமா, கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. திருவருட் செல்வம், ரி.டி.எஸ். வழிகாட்டி, குருசெல்வம், செல்வா, ரி. டி. செல்வநாயகம், குபேரன் ஆகிய புனைபெயர்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அருள் செல்வநாயகம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம், குருமண்வெளி என்ற ஊரில் 1926 சூன் 6 ஆம் நாள் தம்பாய்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் 1948 இல் சேர்ந்து 1950 ஆம் ஆண்டில் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். மட்டக்களப்பிலும் மலையகத்திலும் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணிபுரிந்தார். 1956 ஏப்ரல் 23 இல் அருளம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். மனைவியின் பெயரை முதன்மைப்படுத்தி அருள் செல்வநாயகம் என்ற பெயரில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார்.[1]

எழுத்துப் பணி[தொகு]

நுவரெலியா அக்கரைப்பத்தனையில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது ‘பசுமலைப் பார்பதி’ என்னும் கதையை எழுதி வெளியிட்டார். இவர் 23 நூல்களை படைத்துள்ளார். மட்டக்களப்பில் முதல்முதல் சிறுகதை தொகுதி வெளியிட்ட பெருமை இவருக்கே உரியது. இவரது ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள் இலங்கை, இந்திய, மலேசிய வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. "சீர்பாத குல வரலாறு" என்னும் இவரது ஆராய்ச்சிக் கட்டுரை 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது. சென்னை சாகித்திய அகடமி வெளியிட்ட கலைக்களஞ்சியத்திலும் இவரது கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.

சுவாமி விபுலானந்தரால் எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள் முதலியவைகளை அருள் செல்வநாயகம் தேடிப் பெற்று விபுலானந்த அடிகள் என்னும் நூலை 1953 ஆம் ஆண்டு வெளியிட்டார். அத்துடன், விபுலானந்தரின் ஆக்கங்களைத் தொகுத்து விபுலானந்தத்தேன், விபுலானந்த வெள்ளம், விபுலானந்த செல்வம், விபுலானந்த ஆய்வு, விபுலானந்தர் கவிதைகள், விபுலானந்தக் கவிமலர், விபுலானந்த அமுதம், விபுலானந்தச் சொல்வளம், விபுலானந்த அடிகள் என்னும் பத்து நூல்களாக வெளியிட்டார். விபுலானந்த ஆய்வு என்னும் நூல் க.பொ.த (சா.த) வகுப்பிற்கு இலக்கிய பாடப் புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1] விபுலானந்த வெள்ளம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பாடநூலாகவும், விபுலானந்த இன்பம் க.பொ.த. உயர்தர வகுப்புக்குக்கும் பாட நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.[1]

இவரது நூல்கள்[தொகு]

சிறுகதைத்தொகுதி[தொகு]

  • தாம்பூல ராணி

புதினங்கள்[தொகு]

  • பாசக்குரல் - 1963
  • மர்ம மாளிகை – 1973
  • வாழ முடியாதவன்
  • மாலதியின் மனோரதம்
  • சூரிய காந்தி
  • வாள்முனை வாழ்வு – 3 பாகங்கள்
  • திலகசுந்தரி

நாடகத் தொகுப்பு[தொகு]

  • உயிர் தந்த ஓவியங்கள்

ஆராய்ச்சி நூல்கள்[தொகு]

தேடித் தொகுத்து வெளியிட்ட நூல்கள்[தொகு]

  • விபுலானந்த அமுதம்
  • விபுலானந்தத் தேன்
  • விபுலானந்த வெள்ளம்
  • விபுலானந்தக் கவிதைகள்
  • விபுலானந்தச் செல்வம்
  • விபுலானந்த ஆராய்வு
  • விபுலானந்தக் கவிமலர்
  • விபுலானந்த சொல்வளம்
  • விபுலானந்த இன்பம்
  • பூசணியாள் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு (1957)
  • சதாரம் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு (1957)
  • பாஞ்சாலி சுயம்வரம் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு

மேற்கோள்கள்[தொகு]

தளத்தில்
அருள் செல்வநாயகம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 தம்பிப்பிள்ளை, மு. (22 செப்டம்பர் 2014). "சுவாமி விபுலானந்தரின் புகழை நூல்கள் மூலம் முதன்முதலில் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் அருள் செல்வநாயகம்". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருள்_செல்வநாயகம்&oldid=3232137" இலிருந்து மீள்விக்கப்பட்டது