அரசு கவின்கலைக் கல்லூரி, சென்னை

ஆள்கூறுகள்: 13°04′50″N 80°15′56″E / 13.08044°N 80.265561°E / 13.08044; 80.265561
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Government College of Fine Arts
அரசு கவின்கலைக் கல்லூரி
வகைஅரசு
உருவாக்கம்1850
அமைவிடம்,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்

அரசு கவின்கலைக் கல்லூரி (Government College of Fine Arts, Chennai) (முன்பு: சென்னை ஓவியப் பள்ளி) என்பது இந்தியாவின் பழமையான ஓவியப் பள்ளியாகும். இந்த நிறுவனம் 1850 ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சை மருத்தவரான அலெக்சாண்டர் ஹண்டர் என்பவரால் தனியார் ஓவியப் பள்ளியாக நிறுவப்பட்டது. இது 1852 ஆம் ஆண்டில், அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் இது அரசு தொழில்துறை கலைப் பள்ளி என பெயர் மாற்றப்பட்டது.[1] 1962 ஆம் ஆண்டில், இது அரசு கலை மற்றும் கைவினைப் பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது. இறுதியாக தற்போது உள்ள பெருக்கு மாற்றப்பட்டது.[2]

வரலாறு[தொகு]

இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் போது, மதராசில் பல திறமையான ஓவியர்கள் இருந்ததை ஆட்சியாளர்கள் கண்டறிந்தனர். மதராசிலும் அதைச் சுற்றியும் ஆங்கிலேயர்கள் தங்கள் குடியேற்றத்தை நிறுவிய காலக்கட்டத்தில், இலண்டனில் உள்ள கலை ஆர்வலர்கள் இந்தியர்களின் பண்பாட்டையும் கலைகளையும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியதை, சென்னை அரசாங்கம் உணர்ந்தது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு நிறுவனத்தை நிறுவ முடிவு செய்யப்பட்டது. முதலில் பாரம்பரிய கலைஞர்களைக் கொண்டு மட்பாண்டப் பொருட்கள், தாமிரப் பொருட்கள், தச்சுப் பொருட்கள், ஓவியங்கள் போன்றவற்றை உருவாக்கப்பட்டன, இவர்களின் கலைப் பணிகள் இங்கிலாந்து இராணியின் அரண்மனைகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிறுவனமானது மெட்ராஸ் பல்கலைக்கழகத்திற்கு முன்னதாக இந்தியாவின் முதல் கலைப் பள்ளியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. பள்ளியானது சென்னை பிராட்வேயில் அமைந்திருந்தது. 1852 ஆம் ஆண்டில், பூந்தமல்லி சாலையில் நான்கு ஏக்கர் பரப்பளவுள்ள தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது.[1]

1928 ஆம் ஆண்டில், தேவி பிரசாத் ராய் சௌத்தரி அதன் துணை முதல்வராக இணைந்தார், 1929 இல், அவர் அதன் முதல் இந்திய முதல்வராக உயர்ந்தார். இவர் 1957 வரை முதல்வராக நீடித்தார். அவருக்குப் பிறகு கே. சி. எஸ். பணிக்கர், ஆர். கிருஷ்ணா ராவ், எஸ். தனபால், கே. எல். முனுசாமி, ஏ. பி. சந்தனராஜ், சி. ஜே. அந்தோனி தாஸ் உள்ளிட்ட பல பிரபல கலைஞர்கள் முதல்வராக பதவி வகித்தனர் .

1966 ஆம் ஆண்டில், முன்னாள் முதல்வர் கே. சி. எஸ். பணிக்கர், அவரது மாணவர்கள் மற்றும் கல்லூரியுடன் தொடர்புடைய சில கலைஞர்களுடன் இணைந்து, சென்னைக்கு அருகே சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தை நிறுவினார், இது தற்போதும் இந்தியாவின் மிகப்பெரிய 10 கலை தருணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[3]

அரசு கவின்கலைக் கல்லூரி ஒரு பரந்த பார்வை, சென்னை

கற்பிக்கப்படும் பாடங்கள்[தொகு]

இங்கு ஓவியம், சிற்பம், காட்சித் தொடர்பியல், வணிக ஓவியங்கள், ஆடை வடிவமைப்பு, வரைகலை, மட்பாண்டக் கலை ஆகியவற்றில் இளங்கலை நுண்கலை படிப்புகள் [பொறியியல் துறை] வழங்கப்படுகின்றன. மேலும் இங்கு ஓவியம், காட்சி தொடர்பியல், ஆடை வடிவமைப்பு, மட்பாண்டக் கலை போன்றவற்றில் முதுகலைப் படிப்புகள் வழங்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் இருந்து, சிற்பக்கலையில் முதுகலைப் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1865 ஆம் ஆண்டில் பரிசு பெற்ற ஆறு மாணவர்களை மெட்ராஸ் தொழில்துறை கலைப் பள்ளியின் ஒளிப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட ஒளிப்படம்.

இந்த நிறுவனத்தில் பட்டம் பெற்ற முக்கிய கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தேவி பிரசாத் ராய் சௌத்தரி (சிற்பம்), எஸ். தனபால் (சிற்பம்), கே. சி. எஸ். பணிக்கர், கே. எம். கோபால் (ஓவியம் மற்றும் சிற்பம்), ஏ. பி. சந்தனராஜ் (ஓவியம் மற்றும் சிற்பம்), எல். முனுசாமி (ஓவியம் ), கே. எம். ஆதிமூலம் (வரைதல் மற்றும் ஓவியம்), ஆர்.கிருஷ்ண ராவ் (ஓவியம்), கானாயி குஞ்ஞிராமன் (சிற்பம்), நம்பூதிரி (ஓவியம் மற்றும் சிற்பம்), டி. கே. பத்மினி (ஓவியம்), ஆர். எம். பழனியப்பன் (அச்சுக்கலை), ட்ரொட்ஸ்கி மருது (வரைதல் மற்றும் ஓவியம்); பி. எஸ் தேவநாத் (ஒவியம்), எஸ். எஸ்தர் ராஜ் (ஒவியம்), ஜி. செல்வராஜ் (சிற்பம்), சந்துரு (சிற்பம்), எபினேசர் சுந்தர் சிங் (ஓவியம் மற்றும் சிற்பம்), எஸ். இராஜ்குமார், (முப்பரிணாம மாதிரி மற்றும் வரைகலை), எம். பாலசுப்பிரமணியன், (முப்பரிணாம மாதிரி மற்றும் வரைகலை) வி. ஆர். கார்த்திகேயாராயன் (ஆடை வடிவமைப்பு மற்றும் ஓவியம்), இணை பேராசிரியர், என்ஐஎஃப்டி, சென்னை, ஜவுளி அமைச்சகம், இந்திய அரசு, எஸ். மைக்கேல் இருதயராஜ் (ஓவியம்), எம். ராமலிங்கம் (வரைதல், ஓவியம் மற்றும் அச்சாக்கம்), அருள்தாஸ் (ஓவியம்), ராதாகிருஷ்ணன் நடராசபிள்ளை (அச்சாக்கம், ஓவியம்), சிவகுமார் (வரைதல், ஓவியம் மற்றும் நடிப்பு), வி. இராசேந்திரன் பிரபல கலைஞர், முன்னாள் மண்டல இயக்குனர் (ஜவுளி வடிவமைப்பு), இந்திய ஜவுளி அமைச்சகம்), சையத் தாஜுதீன் (மலேசிய பொருள் உருவக கலைஞர்), கே. ராமானுஜம் (ஓவியம்), டி. ஆர். கே கிரண் (கலை இயக்குநர், நடிகர்), மற்றும் பா. ரஞ்சித் (இயக்குநர்). சி. கிருஷ்ணசாமி (ஓவியம்), பெனிதா பெர்சியால் (ஓவியம்), ஆர்.மகேஷ் (ஓவியம்), மோனிகா (எ) முனைவர். வெ. ஜெயஶ்ரீ (ஓவியர், எழுத்தாளர், பேராசிரியர்) ஆகியோராவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Chakravarthy, Pradeep (3 April 2009). "Where creativity thrives". The Hindu இம் மூலத்தில் இருந்து 2009-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090408215041/http://www.hindu.com/fr/2009/04/03/stories/2009040350570300.htm. பார்த்த நாள்: 2009-07-04. 
  2. "Down memory lane". The Hindu. 8 April 2003 இம் மூலத்தில் இருந்து 2004-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040829173508/http://www.hindu.com/thehindu/mp/2003/04/08/stories/2003040800160300.htm. பார்த்த நாள்: 2009-07-04. 
  3. "10 biggest art moments". India Today. 19 December 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]