அமெரிக்க உள்நாட்டுப் போர்
|
||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||
அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861–1865) அல்லது மாநிலங்களுக்கு இடையேயான போர் எனப்படும் இப் போர், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும், தென் மாநிலங்களில், ஜெபர்சன் டேவிஸ் என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உள்நாட்டுப் போர் ஆகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் சுதந்திர மாநிலங்களையும், அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது ஆபிரகாம் லிங்கனினதும் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் அடிமை முறை விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர். 1860 இல் நிகழ்ந்த அமெரிக்கத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஏழு தென் மாநிலங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிவதாக அறிவித்தன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்குமுன்னமே வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதி, ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
1861 ஏப்ரல் 12 ஆம் நாள் கூட்டமைப்பின் படைகள் தென் கரோலினாவின் சம்ட்டர் கோட்டையில் இருந்த ஐக்கிய அமெரிக்காவின் படைகளைத் தாக்கியபோது போர் வெடித்தது. ஆபிரகாம் லிங்கன் பெரிய தொண்டர் போர்ப்படையைத் திரட்டினார். இந் நிலையில் மேலும் நான்கு தென் மாநிலங்கள் பிரிவதாக அறிவித்தன. போரின் முதல் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா எல்லை மாநிலங்களில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியதுடன், தென் மாநிலங்கள் மீதான கடல்வழித் தடையையும் ஏற்படுத்தியது. இரு பகுதியினரும் படைகளையும் பிற வளங்களையும் குவித்து வந்தனர். 1862 இல் இடம்பெற்ற, ஷைலோ போர் (Battle of Shiloh), ஆண்டீடாம் போர் (Battle of Antietam) போன்ற போர்களில் ஐக்கிய அமெரிக்கா முன்ன கண்டிராத அளவுக்குப் பெருமளவு இழப்புகள் ஏற்பட்டன. 1862 செப்டெம்பரில், தென் மாநிலங்களில் அடிமை முறையை ஒழிப்பதே போரின் நோக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் படைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
கிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. விக்ஸ்பர்க் கையும் (Vicksburg), ஹட்சன் துறையையும் (Port Hudson) யுலிசீஸ் கிராண்ட் (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் மிசிசிப்பி ஆற்றின் முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது.
1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, வர்ஜீனியாவின் ரிச்மண்ட்டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி வில்லியம் ஷெர்மன் (William Sherman) ஜோர்ஜியாவின் அட்லான்டாவைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற கடல் நோக்கிய படையெடுப்பைத் தொடங்கினார். 1865 ஏப்ரலில் ஆப்பொமாட்டக்ஸ் மாளிகையில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.
அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன.