அதியமான் குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதியமான் குப்பம் தமிழ்நாடு மாநிலம் விருத்தாச்சலம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்.

அமைவிடம்[தொகு]

நெய்வேலியிலிருந்து சுமார் எட்டு கி.மீ தூரத்திலும் விருத்தாச்சலத்திலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அதியமான் குப்பம் அமைந்துள்ளது. இவ்வூரின் நிலம் செம்மண்ணால் ஆனது.

மக்கள்[தொகு]

இங்கு சுமார் 120 குடும்பங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்கள் ஒரு காலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற இடங்களிலிருந்து வந்து குடியேறியவர்கள் என செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இந்த ஊரின் தெற்கே காட்டுக்கூடலூர் - விருத்தாசலம் சாலை உள்ளது. இச்சாலை வழியே விருத்தாசலத்திற்கு பேருந்து வசதி உள்ளது.

தொழில்[தொகு]

இங்கு வழும் மக்கள் வேளாண்மையை முக்கிய தொழிலாக கொண்டு வாழ்கின்றனர். முன்பெல்லாம் மானாவாரி பயிர்களான புன்செய் தானியங்களை பயிர் செய்து வந்தனர். பின் பணப்பயிரான முந்திரியில் அதிக லாபம் கிடைத்ததால் புன்செய் பயிரிடுவதை விட்டு முந்திரி சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு உள்ளவர்களில் சராசரியாக வீட்டுக்கு ஒருவர் என்ற வீதத்தில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கல்வி[தொகு]

இந்த கிராமத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. ஆரம்பக்கல்வியை முடித்த மாணவர்கள் இருப்பு கிராமத்திலுள்ள அரசு உயர் நிலைப்பளியில் உயர்நிலைக் கல்வி பெறுகின்றனர்.

குடிநீர்[தொகு]

இந்த ஊரின் மண்ணுக்கு நீரைத் தேக்கி வைக்கும் தன்மை இல்லை. ஊருக்கு தெற்கில் ஊத்துக்குட்டை என மக்களால் அழைக்கப்படும் ஒரு சிறிய குளம் ஒன்று உள்ளது. அதன் நீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். வறட்சியான காலங்களில் இக்குட்டை வற்றிவிடுவதுண்டு. அக்காலங்களில் குட்டையின் சில பகுதிகளில் பள்ளம் தோண்டினால் சிறிய அளவில் நீர் ஊரும். அந்நீரை எடுத்து பயன்படுதுவர். அதனால் அக்குளத்தை ஊத்துக்குட்டை என அழைக்கின்றனர். தற்போது ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலம் தண்ணீர் வழங்குகின்றனர்.

கோவில்கள்[தொகு]

ஊருக்கு நடுவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஊரின் அருகில் அரசியம்மன் கோயில் உள்ளது. அரசியம்மன் இவ்வூர் மக்களின் குலதெய்வமாகும். ஊத்துக்குட்டைக்கு கிழக்கு கரையில் வேம்பின் அடியில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதற்கு வழிபாடு ஏதும் செய்வது கிடையாது. ஆனால் சித்திரை மாத வளர்பிறை திருவோண நட்சத்திரத்தில் அரசியம்மனுக்கு இந்த சிவலிங்கம் உள்ள இடத்தில்தான் திருமாங்கல்யம் சூடும் உற்சவம் நடைபெறும். ஊத்துக்குட்டைக்கு வடபுறத்தில் காலஞ்சென்ற பழனி படையாட்சி என்பவரால் முருகன் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதியமான்_குப்பம்&oldid=2757070" இலிருந்து மீள்விக்கப்பட்டது