மேயாத மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேயாத மான்
இயக்கம்ரத்ன குமார்
தயாரிப்புகார்த்திகேயன் சந்தானம்
கார்த்திக் சுப்புராஜ்
(வழங்குபவர்)
இசைசந்தோஷ் நாராயணன்
பிரதீப் குமார் (பாடகர்)
நடிப்பு
ஒளிப்பதிவுவிது அயன்னா
படத்தொகுப்புஷபீக் முகமது அலி
கலையகம்ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ்
விநியோகம்ராக்ஃபோர்ட் என்டர்டெய்ன்மெண்ட்
வெளியீடுஅக்டோபர் 18, 2017 (2017-10-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேயாத மான் (Meyaadha Maan) (ஆங்கில மொழி: The Deer That Does Not Graze) 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இப்படம் மெல்லிய காதலுடன் நகைச்சுவை கலந்த திரைப்டமாகும். இப்படம் ரத்ன குமார் எனும் அறிமுக இயக்குநரால் இயக்கப்பட்டுள்ளது.  இந்தப் படத்தில் வைபவ் (நடிகர்) மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாகவும், விவேக் பிரசன்னா, இந்துஜா இரவிச்சந்திரன், அருண் பிரசாத் மற்றும் அம்ருதா ஸ்ரீநிவாசன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோரின் படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தால் படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.  இந்தத் திரைப்படத்தின் அசலான பின்னணி இசை சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களில் பின்னவருக்கு இது தமிழில் அறிமுகப்படமாகும்.  இத்திரைப்படம் “இதயம் முரளி“ போன்ற ஒரு மெல்லிசைப்பாடகர் ஒருவர் மதுமிதாவுடன் கொண்ட ஒருதலைக்காதலையும், அவரது தங்கை சுடர்விழி அவரது நண்பன் வினோத் ஆகியோருக்கிடையேயான நட்பு, காதல், உறவு போன்றவற்றைச் சுற்றி நகர்கிறது.

இத்திரைப்படத் தயாரிப்பானது அமைதியாக முடிக்கப்பட்ட பின்பு இதன் வெளியீடு குறித்து சூன் 2017 இல் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இத்திரைப்படமானது முதன்மையாக சென்னையின் இராயபுரம் பகுதியில் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் 18 அக்டோபர் 2017 இல் தீபாவளிப் பண்டிகையையொட்டி திரைக்கு வந்து குறிப்பிடத்தக்க வரவேற்பையும் பெற்றது.[1]

கதை[தொகு]

1990 களில் வெளிவந்த இதயம் திரைப்படத்தின் உணர்வுபூர்வமான நாயகன் முரளியின் பெயரால் இதயம் முரளி என வினோத் (விவேக் பிரசன்னா) மற்றும் கிஷோர் (அருண் பிரகாஷ்) ஆகியோரால் அழைக்கப்படும் முரளி (வைபவ் (நடிகர்)) தனது சொல்லப்படாத காதலுக்குரிய கல்லுாரித் தோழியான மதுவின் ( பிரியா பவானி சங்கர்) கல்யாண நிச்சயதார்த்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் காணப்படுகிறான். முரளி இதன் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் எனக் கருதும் நண்பர்கள் அத்தற்கொலையை தடுக்கும் விதமாக மதுவிடம் முரளியை மோசமாகத் திட்டும்படி கூறுகிறார்கள். மது இதைத் தயங்கியவறே செய்து விடுகிறார். இதன் காரணமாக தான் மிகவும் மோசமாக சீற்றமடைந்து தனது தற்கொலை முயற்சியைக் கைவிடுகிறான். முரளி மதுவை மோசமான பெண் என்று முடிவு கட்டுகிறான். இருப்பினும் அவன் மதுவைப் பற்றியும் அவளைத் தான் எவ்வாறு காதலித்தேன் என்பதைப் பற்றியும் உளறும் உளறல்கள் மதுவை இலேசாகக் கரையச்செய்து விடுகிறது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஓராண்டு தள்ளிப்போடப்படுகிறது. ஓராண்டு கழிந்து, வாழ்க்கை இவ்வாறாக நகர, கிஷோர் தனது திருமணத்திற்கு வினோத் மற்றும் முரளியை அழைக்கிறான். இதற்கிடையில் வினோத் ஒரு விபத்தில் காயமுற முரளி திருமணத்தில் தனது ”மேயாத மான்” இசைக்குழு வினருடன் கலந்து கொள்கிறான். முரளி மதுவைச் சந்திக்கும் ஒரு தருணத்தில் அறை ஒதுக்கீடு தொடர்பாக இருவருக்குள்ளும் ஒரு சிறு சச்சரவு ஏற்படுகிறது. இந்த நிலையில் முரளியின் தங்கை சுடர்விழி முரளியின் நண்பன் வினோத்தைக் காதலிப்பதை முரளி அறிந்து கொள்கிறான். மது ஒரு நாள் மயங்கி விழும் போது முரளியின் நண்பன் வினோத் அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். மதுவைப் பற்றி தவறான கருத்து ஏற்பட்டிருந்ததால் முரளி இதை விரும்பவில்லை. சுடர்விழிக்கு வினோத் மணமகன் தேடி வரும் போது முரளி தன் தங்கை வினோத்தைக் காதலிப்பதால் தன் தங்கையை மணமுடித்துக் கொள்ள கேட்கிறான். இவர்களின் காதலுக்கிடையில் முரளிக்கு தன் நண்பர்களின் துாண்டுதலாலேயே மது தன்னை மோசமாகத் திட்டியது தெரிய வருகிறது. முரளி - மது காதல் வெற்றி பெற்றதா? வினோத் - சுடர்விழி காதல் வெற்றி பெற்றதா? ஏற்கெனவே நிச்சயித்த திருமணம் எவ்வாறு தடுக்கப்பட்டது என்பதை மீதமுள்ள திரைக்கதை சொல்கிறது.

நடிப்பு[தொகு]

  • “இதயம் முரளி”யாக வைபவ்
  • மதுமிதா என்ற மதுவாக பிரியா பவானி சங்கர்
  • வினோத்தாக விவேக் பிரசன்னா
  • சுடர்விழியாக இந்துஜா இரவிச்சந்திரன்
  • கிஷோராக அருண் பிரசாத்
  • பிரியங்காவாக அம்ருதா ஸ்ரீநிவாசன்
  • மதுமிதாவின் தந்தையாக வர்கீஷ் மாத்யூ
  • மதுமிதாவின் தாயாக சுஜாதா பஞ்சு
  • ”தங்கச்சி” பாடலில் சிறப்புத் தோற்றத்தில் அந்தோணி தாசன்

தயாரிப்பு[தொகு]

கார்த்திக் சுப்புராஜ் இயக்குநர் ரத்னகுமாரிடம் அவரது ”மது” குறும்படத்தினை தனது திரைப்படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்சுக்காக திரைப்படமாக மாற்றித்தரும்படிக் கேட்டார். முன்னதாக, இத்திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கதைகளில் மது (2013) குறும்படமும் ஒன்றாக இருந்தது.[2] தொடக்கத்தில் ரத்னகுமார் மது குறும்படத்தை முழுநீளத் திரைப்படமாக மாற்றுகிற எண்ணம் கொண்டிருக்கவில்லை. மது குறும்படத்தைத் தன்னைப் பற்றிய அறிமுகத்திற்கான வாய்ப்புக் கேட்கும் கருவியாகவே வைத்திருந்தார். இருப்பினும் கார்த்திக் சுப்புராஜின் வேண்டுகோளுக்காக வட சென்னைப் பின்னணியில் இந்தக் கதையைப் படமாக்க இசைந்தார். இராயபுரம் மக்களின் படைப்பாக்கத் திறனையும், குறிப்பாக இராயபுரம் மற்றும் காசிமேடு பகுதியில் உள்ள மக்களில் பலர் நல்ல பாடகர்களாகவும் பாடலியற்றுபவர்களாகவும் இருப்பதைக் கண்டு அவர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meyaadha Maan finishes its theatrical run in Tamil Nadu". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2018.
  2. "The good side of North Madras". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 5 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேயாத_மான்&oldid=3709395" இலிருந்து மீள்விக்கப்பட்டது