காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் குளம் (சர்வதீர்த்தம்) என்று அறியப்படுவது, காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரநாதர் கோயில் குளமாகும். மேலும், சிறப்புப் பெற்ற முத்திமண்டபமும் இத்திருக்குளத்தின் கரையில் அமைந்துள்ளதோடு இக்குளத்தின் பெருமையைக் காஞ்சிபுராணம் "சருவதீர்த்தப் படலம்" என்று தனிப்படலமாகவே வைத்துப் போற்றுகிறது.[1]

இறைவர், வழிபட்டோர்[தொகு]

  • இறைவர்: ஏகாம்பரநாதர்
  • இறைவியார்:
  • தல விருட்சம்:
  • தீர்த்தம்:
  • வழிபட்டோர்: அனைத்துத் தீர்த்தங்களும்.

தல வரலாறு[தொகு]

இத்திருக்குளம் மிகவும் பிரசித்தி பெற்றத் திருக்குளமாகும். காசிவிசுவநாதர், ராமேசுவரர் முதலிய அநேக கோயில்கள் இதன்கரையில் அமைந்துள்ளன. அம்மையின் மன உறுதியை உலகம் அறியும் பொருட்டு இறைவனார் நதிகளை அழைத்தபோது, எல்லாத் தீர்த்தங்களும் திரண்டு, நதியுருவம் பூண்டு காஞ்சிக்குப் பிரவாகங்கொண்டு வந்தன. இப்பெரும் வெள்ளத்திற்கு அஞ்சிய அம்பிகை பெருமானைக் காக்கும் பொருட்டு தாம் அமைத்த மணல் லிங்கத்தை (திருவேகம்பத்துப் பெருமானை) ஆரத்தழுவி, கைளாற் பற்றிக் காத்தார். இதன் காரணமாகவே திருவேகம்பர் தழுவக் குழைந்தவராகி, அம்மையின் வளைத்தழும்பும், முலைச்சுவடும் திருமேனியில் ஏற்றார். அதன்பின்னர் அனைத்துத் தீர்த்தங்களும் இங்கியே தங்கி இறைவனை தீர்த்தேஸ்வரர் என்ற பெயரில் வழிபட்டன. இவ்வழிபாட்டை அனைத்துத் தீர்த்தங்களும் செய்தமையினால் இதுவே சர்வதீர்த்தம் எனப் பெயர் பெற்றது.

இறைவன் நதிகளின் வழிபாட்டினை மெச்சி வெளிப்பட்டு "உம்மிடத்தில் (சர்வதீர்த்தத்தில்) நீராடி எம்மை வழிபட்டு, தேவர்கள் முதற்கொண்டு பித்ருக்கள் ஈராக உள்ளோருக்கு தர்ப்பணம் செய்து தானம் தந்து வணங்குவோருக்கு யாம் முத்திப்பேற்றை அருளுவோம். மேலும் உம்மிடத்தில் நீராடியோர் பல பாவங்களினின்றும் நீங்கப் பெறுவர். அத்துடன் உம்மில் நீராடி எம்மை (ஏகாம்பரநாதர்) வணங்குவோர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பயன்களும் பெற்று, தாயின் வயிற்றில் புகாது எம் திருவருளில் வாழ்ந்து மகிழ்வர்" என்று அருளினார் என்பது தலவரலாறாகும்.[2]

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் மேற்கு பகுதியில், வேலூர் செல்லும் சாலையில் இப்பெருங்குளம் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடமேற்கே சுமார் 1 கிலோமீட்டர் இக்குளம் அமைந்துள்ளது.[3]

இவற்றையும் காணீர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Project Madurai, 1998-2008 | 47. சர்வ தீர்த்தப்படலம் 1619 - 1644
  2. tamilvu.org | காஞ்சிப் புராணப் படல அட்டவணை | சருவதீர்த்தப் படலம 479.
  3. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | சர்வதீர்த்தம் ஏகாம்பரநாதர் திருக்கோவில்)". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-02.

புற இணைப்புகள்[தொகு]