விக்ரகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்ரகா (Vigraha) என்பது நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்திய பாதுகாப்புக் கப்பலாகும். இக்கப்பல் இந்திய கடலோர காவல் படைக்கு 2021 ஆம் ஆண்டு 28.8.2021 ஆம் தேதியன்று ஒப்படைக்கப்பட்டது.[1] கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இக்கப்பல் ஈடுபடும். இதன் மூலம் கடல்சார் பயங்கரவாதம், கடத்தல் நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு கடலோரப் பாதுகாப்பு அதிகரிக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள எல் அன் டி தனியார் கப்பல் கட்டும் துறைமுகம் விக்ரகாவை உருவாக்கியது. இங்கு கடலோர காவல் படைக்கு அளிப்பதற்காக சுற்றுக்காவல் கப்பல்கள், அதிநவீன இடைமறிக்கும் படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு அமைச்சகம் 7 சுற்றுக்காவல் கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை 2015 ஆம் ஆண்டு எல் அன் டி நிறுவனத்திற்கு வழங்கியது. விக்ரம், வீரா, விசயா, வராக, வரத், வச்ரா ஆகிய சுற்றுக்காவல் கப்பல்கள் ஏற்கனவே கட்டப்பட்டு கடலோராக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வெள்ளோட்டம்[தொகு]

188 கோடி ரூபாய் செலவில் புதியதாகக் கட்டப்பட்டு விக்ரகா என்று பெயர் சூட்டப்பட்ட இச்சுற்றுக்காவல் கப்பல் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதியன்று கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு முதல் முறையாக நீரில் இறக்கி விடப்பட்டது.[2] கடந்த பத்து மாதங்களாக விக்ரகாவில் நவீன ஆயுதங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. 2021 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 28 அன்று முறைப்படி கடலோரக் காவல் படையுடன் இணைக்கப்பட்டு நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.[3][4]

சிறப்புகள்[தொகு]

முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள விக்ரகா கப்பல் 98 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டு 2200 டன் எடை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய விக்ரகா கரைக்குத் திரும்பாமல் 5000 கடல் மைல் தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்ததாகும்.

உலங்கு வானூர்தி இறங்கு தளம், எண்ணெய் கசிவு போன்ற சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு கருவிகள், நவீன 40/60 போபர்சு துப்பாக்கி உள்ளிட்ட அதி நவீன ரகத் துப்பாக்கிகள், கண்காணிப்புக் கருவிகள், நவீன வழித்தடங்காண் கருவிகள் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விக்ரகாவால் 4 அதிவிரைவுப் படகுகளையும் சுமந்து செல்லமுடியும்.

11 அதிகாரிகள் மற்றும் 110 பணியாளர்களுடன் படைத்தலைவர் அனூப் தலைமையில் விக்ரகா சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுகிறது. இக்கப்பல் உத்தேசமாக 25 ஆண்டுக்காலம் இயங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ரூ188 கோடியில் புதிய ரோந்துக் கப்பல் விக்ரகா:நாட்டுக்கு அர்ப்பணித்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்". தினமணி. https://www.dinamani.com/india/2021/aug/29/rs-188-crore-new-patrol-vessel-vikraka-minister-rajnath-singh-donates-to-the-country-3689135.html. பார்த்த நாள்: 29 August 2021. 
  2. "கடலோரக் காவல் படைக்கான புதிய ரோந்துக் கப்பல் விக்ரகா வெள்ளோட்டம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/oct/07/new-coast-guard-patrol-vessel-vikraka-3479942.html. பார்த்த நாள்: 29 August 2021. 
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Defence minister Rajnath Singh to commission Vigraha, indigenous patrol vessel, today". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-08-28. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
  5. "இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்ட விக்ரகா 45007 ரோந்து கப்பல்!". TopTamilNews (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-06. பார்க்கப்பட்ட நாள் 2021-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரகா&oldid=3263530" இலிருந்து மீள்விக்கப்பட்டது