முத்துப்பட்டி பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்துப்பட்டி பாறை ஓவியங்கள், மதுரைக்கு அண்மையில் உள்ள முத்துப்பட்டி அல்லது கரடிப்பட்டி என்று அழைக்கப்படும் ஊரில் உள்ள சிறிய மலையொன்றின் குகை ஒன்றில் காணப்படும் தொன்மையான ஓவியங்களைக் குறிக்கும்.[1] பாறைச் சுவர்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்களிற் பல காலத்தின் நிமித்தம் அழிந்துவிட்டன, சில ஓவியங்களே இன்று எஞ்சியுள்ளன.

வடிவங்கள்[தொகு]

இங்குள்ள ஓவியங்களுள் ஒன்று ஒரு மனித உருவம் ஆகும். சிவப்பு நிறத்தில் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ள இந்த உருவம் வட்டவடிவமான மிகச் சிறிய தலையையும், ஒற்றைக் கோட்டினால் அமைந்த கழுத்தையும், அகன்ற உடம்பையும் பருத்த இரண்டு கால்களையும் கொண்டுள்ளது. உடலின் இரு பக்கங்களிலும் உள்ள கைகள் ஒற்றைக் கோட்டினால் வரையப்பட்டுள்ளன. உடலிலும், கால்களிலும் அவற்றுக்குக் குறுக்காக வரிவரியாகக் கோடுகள் காணப்படுகின்றன. இந்த உருவத்தை விட, இதற்கு அருகே மேலும் சிறிய மனித உருவங்களைக் குறிக்கும் ஓவியங்கள் சிவப்பு நிறக் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன. ஆனால் இவை தெளிவாக இல்லை.[2]

காலம்[தொகு]

சில ஆய்வாளர்கள் இந்த ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்தவை என்று கூறினாலும், இவை வரையப்பட்டுள்ள முறை, சிவப்பு நிறத்தின் பயன்பாடு, விலங்கு உருவங்கள் காணப்படாமை என்பவற்றை அடிப்படையாக வைத்து இந்த ஓவியங்கள் வரலாற்றுக் காலத்துக்கு உரியது என்று சிலர் கூறுகின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தேனி மாவட்டத்தில் சமணர்கள்". கீற்று இணையத்தளம். 18 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2015.
  2. பவுன்துரை, இராசு., 2001, பக். 69, 70.
  3. பவுன்துரை, இராசு., 2001, பக். 71.

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]