பரஞ்சோதி முனிவர்
பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதியவர். இவரது தந்தை மீனாட்சி சுந்தர தேசிகர் எனத்தெரிய வருகிறது. பரஞ்சோதி முனிவர் என நான்கு முனிவர்கள் இருந்துள்ளனர். திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் அவர்கள் வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர் ஆவார். தந்தையே குருவாக இருந்து, மகனுக்குச் சைவ சித்தாந்த கருத்துகளைப் பயிற்றுவித்தார். திருமறைக்காட்டில் கோவில் கொண்டுள்ள சிவனைத் துதித்து வந்த பரஞ்சோதி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோவில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரைக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், அந்நகரில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அதற்கிணங்கிப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை மூன்று காண்டகளாகப் பகுத்துக் கொண்டு 64 திருவிளையாடல்களையும் 64 படங்களில் அமைய 3363 பாடல்களில் எழுதினார்.திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.இவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா ,மதுரைப் பதிற்றுப்பத்து அந்தாதி மற்றும் வேதாரண்ய புராணம் போன்ற படைப்புகளையும் படைத்துள்ளார். சிவ பக்தியில் சிறந்து விளங்கியவர்களுள் ஒருவராக வாழ்ந்தவர்.இவர் திருமறைக்கட்டுக்கு வடமேற்கே புன்னையகாணல் என்ற இடத்தில் இயற்கை எய்தினார்