துர்கை கோயில், அய்கொளெ

ஆள்கூறுகள்: 16°1′14.4″N 75°52′55″E / 16.020667°N 75.88194°E / 16.020667; 75.88194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்கை கோயில்
அய்கொளெயின் துர்கை கோயில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்அய்கொளெ
புவியியல் ஆள்கூறுகள்16°1′14.4″N 75°52′55″E / 16.020667°N 75.88194°E / 16.020667; 75.88194
சமயம்இந்து சமயம்
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பாகல்கோட்டை

துர்கை கோயில் (Durga temple, Aihole) என்பது இந்தியாவின் கர்நாடகத்தின், அய்கொளெ என்ற இடத்தில் அமைந்துள்ள இந்துக் கோயிலாகும் .எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட இக்கோயில் முதலில் சூரியனுக்காக கட்டப்பட்டதாகும். இந்தக் கோயில் சைவ, வைணவ, சாக்த, வைதீக சமயங்களின் தெய்வங்களின் உருவங்களைச் சித்தரிக்கும் அலங்காரமான சிற்பங்களைக் கொண்டுள்ளது. [1] இக்கோயில் அதன் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளுக்கு மட்டுமல்லாமல், அதன் அரைவட்ட கட்ட அமைப்புக்காகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இது ஆரம்பகால சாளுக்கிய கோவில் கட்டிடக்கலைக்கு ஒரு அரிய எடுத்துக்காக்காட்டாக உள்ளது. [2] [3]

இக்கோயில் சூரியனுக்கு கட்டப்பட்டது என்றாலும், 13 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்து அரசுகளுக்கும் இசுலாமிய சுல்தான்களுக்கும் இடையிலான போர்களின் போது இதன் மேல் ஒரு துர்க்கம் அல்லது கோட்டைக் கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டதால், துர்கம் என்று அழைக்கபட்டது. இடிபாடுகளாக 19 ஆம் நூற்றாண்டில் இந்த தளம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டபிறகு சீரமைக்கபட்டது (கோட்டைக் கண்காணிப்புக் கோபுரம் இப்போது இல்லை, கோயில் புதுப்பிக்கப்பட்டபோது அகற்றபட்டது). அய்கொளெயில் உள்ள துர்கை கோயில் சுற்றுலாப்பயணிகளையும், அறிஞர்களையும் ஈர்க்கும் முக்கியக் கட்டட அம்சமாகும். இது நிலுவையில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய கள கோரிக்கையின் ஒரு பகுதியாகும். [4]

காலம்[தொகு]

சாளுக்கியப் பேரரசின் ஆட்சி காலத்தில் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைப்பட்டக் காலத்தைச் சேர்ந்ததாக இக்கோயில் குறிப்பிடப்படுகிறது. [3] இந்தியக் கோயில் கட்டிடக்கலை அறிஞர்களான டாக்கி மற்றும் மெய்ஸ்டர் கருத்துப்படி, 1970களில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, இந்தக் கோயில் முதலில் சூரியனுக்காக கட்டப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது, இது குமாரா என்பவரால் கட்டப்பட்டது, ஆனால் ஆண்டு காணப்படவில்லை. ஆனால் கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கும்போது இக் கல்வெட்டு கி.பி. 700 இக்கு பிந்தையதாக இருக்காது என்கின்றனர். [1][note 1]

கண்டுபிடிப்பு வரலாறு[தொகு]

அய்கொளெயில் உள்ள துர்கை கோயில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து பல தவறான கருத்துக்களுக்கும் விவாதங்களுக்கும் உட்பட்டதாக இருந்தது. தொல்லியல் துறை அறிஞரான கேரி டார்டகோவ், இது அறிஞர்களை எவ்வாறு குழப்பியது, தவறாக அடையாளம் காணப்பட்டது என்பது பற்றிய ஒரு நீண்ட மற்றும் விரிவான வரலாற்றுப் பார்வையை வெளியிட்டுள்ளார். [5] [6] [7]

1860 களின் முற்பகுதியில் பிரித்தானிய பீரங்கி அதிகாரியான பிரிக்ஸ் என்பவரால் துர்கை கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிரிக்ஸ் அதன் கலை, கட்டமைப்பு போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். இவரால் இதன் ஆரம்பகால ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன, அவற்றை "ஐவுள்ல்லியில் உள்ள சிவன் கோவில்" என்று வெளியிட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு, ஜேம்ஸ் பெர்குசன் இதன் அப்போதைய உச்சி வடிவத்தின் காரணமாக இது "ஒரு புத்த நினைவுச்சின்னம்" என்று அறிவித்தார். பெர்குசன் மேலும் ஊகித்தபடி, இது "பிராமண இந்துக்களால் தன்வயப்படுத்திக்கொள்ளப்பட்ட" புத்த சைத்திய மண்டபத்தின் புகழ்பெற்ற, கட்டமைப்பு வடிவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றார். [5] [6] இவ்வாறு நீண்ட காலமாக பௌத்தம் சம்மந்தப்பட்ட கட்டடமாக அனுமானிக்கபட்டு வந்தது. அதற்குப் பிறகு மற்ற அறிஞர்கள் இதன் சிற்பங்கள் போன்ற பிற சான்றுகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததால், துர்கை கோயில் பற்றிய புரிதலும், கோட்பாடுகளும் உருவாகின. ஜேம்ஸ் பர்கெஸ், இது தொடக்கத்தில் இருந்தே விஷ்ணு கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றார், ஏனெனில் எந்த ஒரு பௌத்த கோயிலையும் இந்துக்கள் தன்வயப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றார். ஹென்றி கௌசன்ஸ் முதலில் சூரிய-நாராயணன் (விஷ்ணு) என்பதன் மூலம் இதில் சூரியனை இணைத்தவர். 1960கள் மற்றும் 1970களில் அய்கொளெ தளம் மேலும் ஆய்வு செய்யப்பட்டு, அகழ்வாய்வு செய்யப்பட்டு, இன்னும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு மீட்டெடுக்கப்பட்டதால், பல கண்டுபிடிப்புகளும், புதிய கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன. குறிப்பாக, 1970களில் துர்க்கை கோயிலில் சுத்தம் செய்யப்பட்ட பகுதிகளில், சு. கி.பி. 700 காலத்திய புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது 1976 இல் கே.வி.ரமேஷ் அவர்களாலும், பின்னர் ஸ்ரீனிவாஸ் படிகர் அவர்களாலும் துல்லியமாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு, இந்துக் கடவுளான ஆதித்யாவிற்காக (சூரியன்) குமாரன் என்வரால் கட்டப்பட்ட கோயில் என்பதை உறுதிப்படுத்தியது. [5] [6]

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. The Durga temple of Aihole has quite a few short inscriptions as well, which has caused some confusion and some early speculations that has been discarded. For example, one short inscription reads "Jinalayan". This led early speculations that this was a Jain temple with Hindu deities, or a Jain temple that was converted into a Hindu temple. But, with no evidence of anything Jaina, nor any signs of re-carving in the numerous artwork panels here, the "Jinalayan" is treated as the name of one of the artists or architects who worked on this temple. Such signatures are common in Badami Chalukyan temples.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 M. A. Dhaky & Michael W. Meister 1983, ப. 49–52.
  2. Michell, 330-332
  3. 3.0 3.1 Michell (2011), pp. 82–86
  4. "Evolution of Temple Architecture – Aihole-Badami- Pattadakal". UNESCO. 2004. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
  5. 5.0 5.1 5.2 Tartakov (1997), pp. 1–23, 31–43; Part 1: The Changing Views of the Durga Temple
  6. 6.0 6.1 6.2 Lahiri (1998), pp. 340–342
  7. Sinha (1998), pp. 1215-1216

நூல் பட்டியல்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Durga Temple, Aihole
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கை_கோயில்,_அய்கொளெ&oldid=3843974" இலிருந்து மீள்விக்கப்பட்டது