திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவ நாயனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் முகப்பு

திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டதேவ நாயனார் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் வட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டை அருகில் திருவெண்ணெய்நல்லூர் என்னுமிடத்தில், நகரின் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.விழுப்புரத்திலிருந்து அரசூர் கூட்டு சாலையில் 22 கிமீ தொலைவிலும், திருக்கோயிலூர் கடலூர் சாலையில் 20 கிமீ தொலைவிலும் உள்ளது.

மூலவர்[தொகு]

இக்கோயில் திருவாவதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலாகும்.[1] இக்கோயிலின் மூலவராக மெய்கண்ட தேவர் உள்ளார். அவர் புறச் சந்தான குரவர்கள் எனப் பாராட்டப்படுகின்ற நால்வருள் முதன்மையானவரும், சைவ சித்தாந்த நூல்களுள் தலையாய சிவஞான போதத்தை இயற்றியவரும் ஆவார். சந்தானக் குரவர்களில் புறச்சந்தானக் குரவர்களில் முதன்மையானவராவார்.

அமைப்பு[தொகு]

நுழைவாயில், முன் மண்டபம், திருச்சுற்று, கருவறை, விமானம் உள்ளிட்ட பல பகுதிகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. மகாமண்டப மேற்கூரையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள பிரமிடு வடிவம் மூலமாக ஆற்றல் குவிக்கப்பட்டு மன ஒருமைப்பாடு கிடைக்கிறது. சிதம்பரத்தில் உள்ளது போல இக்கோயிலில் சற்று பெரிய அளவில் பஞ்சாட்சரப்படி உள்ளது. நமச்சிவாய என்ற ஐந்து அட்சரங்களும் யந்திரங்களாக இப்படிகளின்கீழ் அமைக்கப்பட்டுள்ளதால் இது பஞ்சாட்சரப்படி எனப்படுகிறது.

விழாக்கள்[தொகு]

மெய்கண்டாருக்கு தினமும் நித்ய பூசையும், அஷ்டமிகளில் சிறப்பு பூசையும் மாலை நேர பூசையும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் சுவாதி தினத்தன்று மெய்கண்டார் குரு பூசை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றும், ஒவ்வொரு மாதமும் வரும் சுவாதி நட்சத்திர நாள் மற்றும் வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

குடமுழுக்கு[தொகு]

22 ஆண்டுகளுக்குப் பின் தற்போது இக்கோயிலில் குடமுழுக்கு நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]