தமிழ்நாடு தொழிற்சாலைகள் (திருத்தம்) சட்ட முன்மொழிவு, 2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் விதிகள், 1950[1]இல் தற்போது 8 மணி நேரம் மட்டுமே நடைமுறையில் உள்ளது இச்சட்டத்தின் விதிகளை திருத்தம் செய்து, 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதாவை தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு 21 ஏப்ரல் 2023 அன்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்ட மசோதவை நிறைவேற்றியது.

வரலாறு[தொகு]

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் 21 ஏப்ரல் 2023 அன்று சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு, இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரரவையில் 21 ஏப்ரல் 2023 அன்று நிறைவேற்றப்பட்டது.

விளக்கம்[தொகு]

இந்த மசோதா தொடர்பாக விளக்கம் அளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வரும் தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். மேலும் எந்தத் தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்த சட்ட மசோதா பொருந்தும் என்றார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் பேசுகையில், "வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்; இந்த 48 மணி வேலை நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5-வது நாளில் தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்ட மசோதா உள்ளது; அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை; விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.[2] [3][4]

சட்ட திருத்த முன்மொழிவை திரும்ப பெறுதல்[தொகு]

தொழிலாளர் சங்கங்கள் கோரியதன் பேரில், 12 மணி நேர வேலைக்கான தொழிலாளர் சட்டத் திருத்தம் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளது.[5]1 மே 2023 அன்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இச்சட்ட முன்மொழிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.[6][7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]