தஞ்சாவூர் சின்ன அரிசிக்காரத்தெரு முருகன் கோயில்
முருகன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | சின்ன அரிசிக்காரத் தெரு, தஞ்சாவூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | முருகன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகாசி விசாகம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |

தஞ்சாவூர் சின்ன அரிசிக்காரத்தெரு முருகன் கோயில் என்பது தஞ்சாவூர் நகரில் சின்ன அரிசிக்காரத் தெருவில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.
மூலவர்
[தொகு]கருவறையில் முருகன் பால தண்டாயுதபாணியாக நின்ற நிலையில் உள்ளார். கருவறைக்கு முன்பாக மயிலும், பலி பீடமும் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
[தொகு]
ராஜ கோபுரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்தில் நடுவில் முருகன் வள்ளி தெய்வானையுடன் சுதை வடிவில் காணப்படுகின்றனர். ராஜ கோபுரத்தின் அடுத்த தளத்தில் வலது புறம் விநாயகரும், இடது புறம் தண்டாயுதபாணியும் காணப்படுகின்றனர். வாயிலை அடுத்து காணப்படுகின்ற முன் மண்டபத்தில் வலது புறம் உள்ள தூணில் முருகனும், இடது புறம் உள்ள தூணில் விநாயகரும் உள்ளனர். மண்டபத்தின் முன்புறத்தில் வலது புறம் இடும்பனும், இடது புறத்தில் விநாயகரும் உள்ளனர். திருச்சுற்றில் கால பைரவர் சன்னதி, நாக சிற்பம், பக்த ஆஞ்சநேயர் சன்னதி, காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சி சன்னதி ஆகியவை காணப்படுகின்றன. காசி விசுவநாதர் மற்றும் விசாலாட்சி சன்னதிக்கு முன்பாக பலி பீடமும் நந்தியும் காணப்படுகின்றன. கருவறை கோஷ்டத்தில் துர்க்கையம்மன் சன்னதியும், தட்சிணாமூர்த்தி சன்னதியும் உள்ளன. தேவகோட்டத்தில் துர்க்கையம்மன் உள்ளார். கோயிலின் இடப்புறம் நவக்கிரக சன்னதி உள்ளது.
தஞ்சாவூர் அறுபடை வீடு
[தொகு]தஞ்சாவூரில் உள்ள அறுபடைவீடுகளாக மேலஅலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்), வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்சோலை), குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி), பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவில் (திருச்செந்தூர்) ஆகியவற்றைக் கூறுகின்றனர்.[1] சுமார் 40 வருடங்களாக இப்பகுதியிலுள்ள முருக பக்தர்கள் ஒரே நாளில் இந்த அனைத்து முருகன் கோயில்களுக்கும் பாத யாத்திரையாகச் சென்று வருகின்றனர்.[2]
கல்வெட்டு
[தொகு]இக்கோயிலின் திருச்சுற்றில் 1903 பிப்ரவரி 10ஆம் நாளைக் கொண்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அக்கல்வெட்டில் ஒரு கால பூசைக்கு விளக்கு ஏற்றுவதற்காக தானம் கொடுக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.