தஞ்சாவூர் பூக்காரத்தெரு முருகன் கோயில்
முருகன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
அமைவிடம்: | பூக்காரத்தெரு, தஞ்சாவூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | முருகன் |
சிறப்புத் திருவிழாக்கள்: | வைகாசி விசாகம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |

தஞ்சாவூர் பூக்காரத்தெரு முருகன் கோயில் என்பது தஞ்சாவூர் நகரில் பூக்காரத் தெருவில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.
மூலவர்
[தொகு]கருவறையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் காணப்படுகிறார்.
கோயில் அமைப்பு
[தொகு]
ராஜகோபுரத்தைக் கொண்டு இக்கோயில் உயர்ந்த தளத்தில் அமைந்துள்ளது. நுழைவாயிலில் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் உள்ளனர். முன் மண்டபத்தில் கொடி மரம், பலி பீடம், மயில் காணப்படுகின்றன. கொடி மரத்தின் கீழ் கொடி மர விநாயகர் உள்ளார். இடது புறம் நவக்கிரகங்களின் சன்னதி காணப்படுகிறது. அடுத்து உள்ளே உள்ள மண்டபத்திற்கு செல்லும் முன்பாக இரு புறமும் விநாயகர், முருகன் காணப்படுகின்றனர். கருவறையில் மூலவர் உள்ளார். முருகனுக்கு முன்னர் வேல் காணப்படுகிறது. கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் இடது புறத்தில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி, அப்பர், ஞானசம்பந்தர், சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரின் உலோகத் திருமேனிகள் காணப்படுகின்றன. இம் மண்டபத்திற்கு முன்பாக இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். வெளி திருச்சுற்றில் பின் புறம் காசி விசுவநாதர், விசாலாட்சி, விநாயகர், கஜலட்சுமி, துர்க்கை ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. காசி விசுவநாதருக்கு முன்பாக நந்தியும் பலி பீடமும் காணப்படுகின்றன. உள் திருச்சுற்றில் இடது புறம் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது.
குடமுழுக்கு
[தொகு]இக்கோயிலில் 14 செப்டம்பர் 1984 மற்றும் 30 ஆகஸ்டு 2001 ஆகிய நாள்களில் குடமுழுக்குகள் நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
தஞ்சாவூர் அறுபடை வீடு
[தொகு]தஞ்சாவூரில் உள்ள அறுபடைவீடுகளாக மேலஅலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்), வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்சோலை), குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி), பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவில் (திருச்செந்தூர்) ஆகியவற்றைக் கூறுகின்றனர். சுமார் 40 வருடங்களாக இப்பகுதியிலுள்ள முருக பக்தர்கள் ஒரே நாளில் இந்த அனைத்து முருகன் கோயில்களுக்கும் பாத யாத்திரையாகச் சென்று வருவதாகக் கூறினர்.