சிபி ஜாதக கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்தரின் பல்வேறு அவதாரங்களின் அத்தியாயங்களை விவரிக்கும் ஜாதக கதைகளில் சிபி ஜாதகாவும் (Sibi Jataka) ஒன்றாகும். ஒவ்வொரு ஜாதகக் கதையும் பல்வேறு வடிவங்களில் தருமம் மற்றும் தியாகத்தின் பௌத்த கொள்கைகளை விளக்குகிறது. நற்பண்புகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் நிர்வாணம் அல்லது ஞான நிலையை அடைகிறார் என்பதை வலியுறுத்தும் இந்த கதைகள் புத்தரால் இந்தியாவில் தனது ஊழியத்தின் போது கூறப்பட்டதாகக் கூறுகிறது.

சிபி சக்கரவர்த்தி கதை[தொகு]

சிபி சக்கரவர்த்தி, காந்தாரம், கி.பி 2-3 ஆம் நூற்றாண்டு, பிரித்தானிய அருங்காட்சியகம் சிற்பம்

சிபி மன்னரின் கதையை அரவிந்த சர்மா பின்வரும் சொற்களில் விவரிக்கிறார்.

"ஒரு நாள் சிபிச் சக்கரவர்த்தி அரசவையில் அமர்ந்திருந்தபோது, பருந்து ஒன்றால் துரத்தப்பட்ட குருவி ஒன்று, அவரது மடியில் தஞ்சம் புகுந்தது. பருந்து தனது வாழ்வாதாரமாக இருந்த குருவியை அரசனிடம் கோரியது. பருந்தின் உரிமையை ஏற்று, மன்னர் தனது குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையை நிறைவேற்றுவதற்காகத் தனது தொடையினை வெட்டி இறைச்சியாகப் பருந்திற்குக் கொடுத்தார்"[1]

மாறுபாடுகள்[தொகு]

சிபி ஜாதகத்தின் பல பதிப்புகள் உள்ளன. மேலே விவரிக்கப்பட்ட காட்சி ஒன்று மகாபாரதத்திலும் காணப்படுகிறது.[2] . சிபி கதையின் மற்றொரு பதிப்பு பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது:

"இந்திரன், சிபி மன்னனிடம் பார்வையற்றவனாக வந்து, தன் பார்வையை ஓரளவுக்குத் திரும்பப் பெற அவனது ஒரு கண்ணை தானம் செய்யச் சொன்னான். சிபி, பார்வையற்றவரின் பார்வையை முழுமையாக மீட்டெடுக்கத் தனது இரண்டு கண்களையும் வழங்கினார். சிபி மன்னன் தன் இரு கண்களையும் தியாகம் செய்யத் தயாராக இருந்ததால், இந்திரன் தனது உண்மையான உருவத்தை வெளிப்படுத்தி அரசனுக்கு ஆசி வழங்கினான். சீன புத்த பாரம்பரியத்தில், இந்த இரண்டு கதைகளின் பதிப்புகள் இரண்டு வெவ்வேறு மன்னர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. கண்களைத் தியாகம் செய்யும் மன்னன் குய்-மு வாங் (மகிழ்ச்சியான கண்கள் கொண்ட அரசன்) என்று அழைக்கப்படுகிறான்.

குகை ஓவியங்கள்[தொகு]

இந்தக் கதை பல பௌத்த குகை ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அஜந்தாவில் உள்ள குகை 17-ல் இதனைக் காணலாம். சக்கரவர்த்தி தனது சதையை வெட்டுவதில் ஈடுபட்டிருக்கும் போது, ஒருவன் சதைகளின் தொகுப்பை வைத்திருப்பதும் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. மன்னரின் இந்த உன்னத செயலால் அரசவையினர் மற்றும் குடிமக்கள் மகிழ்ச்சி அடைவதையும் ஓவியம் காட்டுகிறது. மொகாவோ கற்குகைகளில் உள்ள ஓர் ஓவியம் (குகை 275) ஐந்து ஜாதகக் கதைகளை விளக்கும் தொகுப்பாக உள்ளது. இதில் சிபி புராணம் இரண்டாம் பதிப்பாக இந்த தொகுப்பில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சோழ வம்சத்துடனான தொடர்பு[தொகு]

பொது ஊழியில் 100 முதல் 1250 ஆண்டு வரை ஆண்ட சோழர்களின் தென்னிந்திய வம்சத்துடன் சிபி மன்னரின் கதை இணைக்கப்பட்டுள்ளது. பிற்கால சோழர்கள் சிபி வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.[சான்று தேவை] சிபியின் தமிழ்ப் பெயர் செம்பியன் என்பதாகவும் இந்த பெயரில் பல சோழ மன்னர்கள் அழைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma, Arvind (15 April 2014). "The rights in Hinduism". www.opendemocracy.net. openDemocracy'. Archived from the original on 2017-03-17. பார்க்கப்பட்ட நாள் 2017-03-16.
  2. "Some Aspects of Jataka Paintings in Indian And Chinese (Central Asian) Art". www.ibiblio.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-24.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபி_ஜாதக_கதை&oldid=3608781" இலிருந்து மீள்விக்கப்பட்டது