சதி சுகன்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதி சுகன்யா
1942 சதி சுகன்யா தமிழ்த் திரைப்பட பாட்டுப்புத்தக முகப்பு
இயக்கம்டி. ஆர். சுந்தரம்
டி. வி. சாரி
தயாரிப்புஸ்ரீ மீனாட்சி பிலிம் கம்பனி
கதைடி. வி. சாரி
திரைக்கதைடி. வி. சாரி
இசைகல்யாணம் குழு
நடிப்புஒன்னப்ப பாகவதர்
டி. ஆர். மகாலிங்கம்
காளி என். ரத்னம்
டி. எஸ். துரைராஜ்
டி. ஆர். ராஜகுமாரி
ஒளிப்பதிவுஏ. சண்முகம்
படத்தொகுப்புடி. துரைராஜ்
கலையகம்மாடர்ன் தியேட்டர்ஸ்
விநியோகம்ஸ்ரீ மீனாட்சி பிலிம் கம்பனி
வெளியீடு1942 (1942)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சதி சுகன்யா (Sathi Sukanya) 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கதைச் சுருக்கம்[தொகு]

பிரபாசத் தீர்த்தத்தினருகில் சயவன முனிவர் (கே. டி. சந்தானம்) பல ஆண்டுகளாகத் தவம் செய்துகொண்டிருந்தபடியால் புற்று அவரை மூடிக் கொள்ளுகிறது. சயவனர் இல்லறத்தைக் கடைப்பிடிக்காமல் மோட்சத்தை அடைய முடியாததால், இல்லறத்தை மேற்கொள்ளச் செய்யவேண்டுமென விட்டுணு (எஸ். என். என். ராஜு) நாரதரைத் (டி. ஆர். மகாலிங்கம்) தூண்டுகிறார்.[2]

பூலோகத்தில் சர்யாதி (கே. கே. பெருமாள்) மன்னரின் ஒரே மகள் சுகன்யா (டி. ஆர். ராஜகுமாரி). உல்லாசப் பயணம் செல்லத் தகுந்த இடத்தைப்பற்றி மன்னர், மகாராணி (எம். எம். ராதாபாய்), சுகன்யா முதலியோர் யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நாரதர் சென்று பிரபாச தீர்த்தம் அதற்குத் தகுந்த இடம் என்று யோசனை கூறுகிறார். மன்னரும், குடும்பம், மற்றும் தன் பரிவாரங்களுடன் பிரபாசத்தை அடைகிறான். சுகன்யாவும், தோழிகளும் அங்கு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும் போது, சுகன்யா ஒரு புற்றிற்குப் பின்புறம் போய் ஒளிந்து கொள்ளுகிறாள். புற்றில் ஏதோ மின்னுவதைக் கண்ட சுகன்யா ஒரு குச்சி அதனைக் குத்துகிறாள். புற்றினுள் தவம் செய்து கொண்டிருந்த சயவனரின் இரு கண்களும் குத்தப்பட்டுவிட்டதால் அவர் கடுஞ்சினங்கொண்டு இவ்வடாத காரியத்தை செய்தவர் யாராயிருந்தாலும், அவருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்படவேண்டுமென சபித்து விடுகின்றார். அங்கு முகாம் செய்திருக்கும் அனைவரும் வயிற்றுவலியால் அவதிப்படுகின்றனர். மன்னன் சயவனரிடம் சென்று எல்லோரையும் மன்னிக்கும்படி கோருகிறான். குருட்டு சயனவரோ கண்ணைக்குத்தியவளே தனக்கு மனைவியாக இருந்து தனக்குப் பணிவிடை செய்யவேண்டுமென சாதிக்கிறார். உடனே நாரதரும் அங்கு வந்து, சுகன்யாவை முனிவருக்கு கல்யாணம் செய்து கொடுக்கும்படி கூறுகிறார். வேறு வழியில்லாமல் கிழட்டு முனிவருக்கு தன் பெண்ணை மணம் செய்துகொடுத்துவிட்டு தம் நாட்டிற்குத் திரும்புகின்றனர்.[2]

சயவனர் திருமணத்தை நாரதர் முடித்து விட்டாலும், அவருக்கு இளமை திரும்பவேண்டி, தேவ வைத்தியர்களான அசுவினி தேவர்களை (எஸ். கே. ராமராஜன், எஸ். கே. பொன்னம்பலம்) அவர் நாடுகிறார். நாரதரின் விருப்பப்படி அசுவினி தேவர்கள் பூலோகம் சென்று சயவனருக்கு (ஒன்னப்ப பாகவதர்) இளமையைக் கொடுக்கின்றனர். இச்செய்தியைச் செவியுற்ற இந்திரன் (கே. கே. சின்னு) கோபங்கொண்டு தன் சபையைக் கூட்டி இனிமேல் எந்த யாகத்திலும் அசுவினி தேவர்களுக்கு அவிர்ப்பாகம் கிடையாது என்று உத்தரவிடுகிறான். அசுவினி தேவர்கள் நாரதரிடம் முறையிடுகின்றனர். சயவனரிடமே சென்று முறையிட்டால் அவர் தகுந்த பரிகாரம் செய்வாரென நாரதர் கூறுகின்றார். இந்திரன் சயவனர் செய்யும் யாகத்தைத் தடுக்க பூலோகம் சென்று வஜ்ராயுதத்தை ஏவுகிறான். அதற்குப் பதிலாக சயவனர் ஒரு பூதத்தைக் கிளப்பி இந்திரனை வதைக்க அனுப்புகிறார். பூதம் இந்திரனை விரட்டுகிறது. மும்மூர்த்திகளிடம் சென்றும் பயனில்லை. சயவனரிடமே போகும்படி கூறிவிட்டனர். கடைசியாக இந்திரன் சயவனரையே தஞ்சமென்றடைய சயவனர் இந்திரனை மன்னித்துவிடுகிறார்.[2]

நடிகர்கள்[தொகு]

முக்கிய நடிக, நடிகையர்
நடிகர் பாத்திரம்
டி. ஆர். ராஜகுமாரி சுகன்யா
சி. ஒன்னப்ப பாகவதர் சயவனர் (இளையவர்)
கே. டி. சந்தானம் சயவனர் (முதியவர்)
டி. ஆர். மகாலிங்கம் நாரதர்
கே. கே. பெருமாள் சர்யாதி (மன்னர்)
எம். எம். ராதாபாய் சசிரேகை (இராணி)
எஸ். கே. ராமராஜன் அசுவினி தேவர் 1
எஸ். கே. பொன்னம்பலம் அசுவினி தேவர் 2
கே. கே. சின்னு தேவேந்திரன்
ஜி. எஸ். சரசுவதி இந்திராணி
ஈ. ஆர். சகாதேவன் கிருதவர்மன்
எஸ். என். என். ராஜு விட்டுணு
எம். கே. கமலகுமாரி மதனிகா
டி. ஆர். சாமிநாத பிள்ளை மந்திரி
கே. கே. ராதா பிரகஸ்பதி
நகைச்சுவை நடிக, நடிகையர்
நடிகர் பாத்திரம்
காளி என். ரத்தினம் கல்லழகன்
டி. எஸ். துரைராஜ் கவிராயர்
எம். ஆர். சுவாமிநாதன் மருத்துவர்
எம். ஈ. மாதவன் சாத்திரக்காரர்
டி. வி. ஏ. பூரணி மருத்துவரின் மனைவி
சி. டி. ராஜகாந்தம் வள்ளி
வி. எம். ஏழுமலை நம்பியான்
எஸ். எஸ். கொக்கோ காட்டுத்தலைவன் மந்திரி

படத் தயாரிப்பு[தொகு]

திரைப்படப் பணியாளர்கள்
பணி பெயர்
இயக்கம் டி. ஆர். சுந்தரம்
ஒலிப்பதிவு சர்தார் ஈசுவரசிங்
ஒளிப்பதிவு ஏ. சண்முகம்
பாடல்கள் பாபநாசம் பி. ஆர். ராஜகோபாலையர்
இசை கல்யாணம் குழுவினர்
கதை, வசனம் டி. வி. சாரி
கலையகம் மாடர்ன் தியேட்டர்ஸ், சேலம்

பாடல்கள்[தொகு]

சதி சுகன்யா திரைப்படத்துக்கு கல்யாணம் குழுவினர் இசையமைத்திருந்தனர். பாபநாசம் பி. ஆர். ராஜகோபால் ஐயர் பாடல்களை இயற்றினார்.[2]

எண். பாடல் பாடகர்/கள் இராகம் தாளம்
1 மாதவனே மாமாயா குழுவினர் நவரச கன்னடம் ஆதி
2 மனமோகன ராதே மாமோகம் குழுவினர் செஞ்சுருட்டி ஆதி
3 நாராயணா நரபோஷ்ணா நம்பினேன் பதமலரினை டி. ஆர். மகாலிங்கம் ரவிச்சந்திரிக்கா ஆதி
4 பாரும் பாரும் என் பாங்கிகாள் டி. ஆர். ராஜகுமாரி, குழுவினர் இந்துத்தானி காப்பி ஏகம்
5 நாகமரம் ஓரத்திலே நரிமுகத்தை கண்டோம் காளி என். ரத்தினம், வி. எம். ஏழுமலை - -
6 மாடப்புறாவே வர்ணக்கிளியாளே காளி என். ரத்தினம், வி. எம். ஏழுமலை - -
7 ஜோதி ரூபா துணைபுரிவாய் நீ டி. ஆர். ராஜகுமாரி யமுனா கல்யாணி ஆதி
8 பாக்யசாலி நானே ஆ... பாரினில் டி. ஆர். ராஜகுமாரி இந்துத்தானி பியாக் ஆதி
9 ஆட்ட மாடிக் கட்டச் சொன்னால் காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம் - -
10 கணனே நானே உனையே சதா எம். எம். ராதாபாய் இந்துத்தானி ஆதி
11 தேவகி தனய கிருஷ்ண தீன தயாளா டி. ஆர். மகாலிங்கம் மாண்டு ஆதி
12 பிலுக்காதே வாடி விதையல் எடுப்போம் காளி என். ரத்தினம், சி. டி. ராஜகாந்தம் - -
13 மா தயைபுரி எந்தன் மாதாவும் டி. ஆர். ராஜகுமாரி லலிதா ஆதி
14 ப்ரேமரூபமே லோகமே டி. ஆர். ராஜகுமாரி, ஒன்னப்ப பாகவதர் இந்துத்தானி ஆதி
15 ஜெகமிதே மிக சுகம் டி. ஆர். ராஜகுமாரி, ஒன்னப்ப பாகவதர் இந்துத்தானி ஆதி
16 சதா ஆன்ந்த பானமே டி. ஆர். மகாலிங்கம் சிந்துராமக்ரியா ஆதி
17 மாநில வாழ்க்கையின் யோகம் மேலாம் ஒன்னப்ப பாகவதர் அமீர் கல்யாணி ஆதி
18 ஹரே முராரி ஹரே முராரி டி. ஆர். மகாலிங்கம் மாண்டு ஆதி
19 அன்றொரு மாதுடன் ஆடவன் சேர்ந்திட டி. ஆர். மகாலிங்கம் ராகமாலிகை ஆதி
20 மதனிகா மதனிகா அடி என டி. ஆர். ராஜகுமாரி மோகனம் ஆதி
21 பங்கஜாசனா வா வா வா வா ஒன்னப்ப பாகவதர் இந்துத்தானி பைரவி ஆதி
22 முன்னமோர் இந்திரனும் முனிவர்களோர் எழுவரையும் ஒன்னப்ப பாகவதர் விருத்தம் -
23 ஆனந்த சுபகாலமே ஆ இனி நமக்காகுமே டி. ஆர். ராஜகுமாரி, ஒன்னப்ப பாகவதர் பியாக் ஏகம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopedia of Indian Cinema, edited by Ashish Rajadhyaksha, Paul Willemen, 1999
  2. 2.0 2.1 2.2 2.3 சதி சுகன்யா பாட்டுப் புத்தகம். பெரியகடை வீதி, திருச்சி: சந்திரவிலாஸ் பிஞ்சராபோல் பிரஸ். 1942. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதி_சுகன்யா&oldid=3719378" இலிருந்து மீள்விக்கப்பட்டது