குறிஞ்சிவாணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறிஞ்சிவாணன்
பிறப்புபி. மாணிக்கம்
தெமோதரை, பதுளை மாவட்டம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்துக் கவிஞர்


குறிஞ்சிவாணன் (பி. மாணிக்கம், தெமோதரை, பதுளை மாவட்டம், இலங்கை) குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞர் ஆவார். 1963 இல் எழுதத் தொடங்கிய இவர் குறிஞ்சிவாணன் என்ற புனைபெயருடன் மாக்ணி, அக்கரைப்பாமா, சாகாமம் மணியன் போன்ற புனைபெயர்களிலும் கவிதைகள் எழுதியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அக்கரைப்பற்றில் சிலகாலம் வாழ்ந்து தற்போது திருக்கோயில் பிரிவிலுள்ள சாகாமம் எனும் குடியேற்றக் கிராமத்தில் வசித்துவருகிறார்.

கவிதையுலகில்[தொகு]

இவர் தனது 18 வது வயதில் 'வெற்றி நமதே' என்னும் தலைப்பில் வீரகேசரிக்கு தனது முதற்கவிதையை எழுதினார். தொடர்ந்து தினபதி, சிந்தாமணி, ராதா, சுதந்திரன், செய்தி போன்ற பத்திரிகைகளில் இவரது 100 க்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகின. 1968 இல் 'கல்லச்சு இயந்திரம்' ஒன்றைத் தயாரித்து அதன்மூலம் 'மலைக்கீதம்' எனும் மெல்லிசைப் பாடல் தொகுதியொன்றை வெளியிட்டார். அடுத்து மலையக மக்களின் பிரச்சினைகளை மையமாகவைத்து 'தேனிசை' என்ற பாடல்தொகுப்பைப் பிரசுரித்தார். 1991 இல் ஐரோப்பிய நாடான பெர்லின் நகரில் அமரர் 'நடேசையர்' நினைவாக நடைபெற்ற தமிழ் இலக்கிய மகாநாட்டில் இவரது 50 கவிதைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இவர் அக்கரை மாணிக்கம், அமரர். கவிஞர் க.வடிவேல் கல்முனைப்பூபால், சி. கனகசூரியம் போன்றோருடன் கவியரங்குகளில் பங்குகொண்டு சிறந்த கவிதைகள் பாடியுள்ளார். 1996 இல் திருக்கோவிலில் நடைபெற்ற சாகித்திய விழாவில் எழுத்தாளர் 'அன்புமணி' அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். 1998 இல் வெளியான 'இன்னும் விடியவில்லை' எனும் மரபுக் கவிதைத் தொகுதியில் இவரது கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • மலைக்கீதம் (1968, மெல்லிசைப் பாடல் தொகுப்பு)
  • தேனிசை (பாடல்தொகுப்பு - மலையக மக்களின் பிரச்சினைகளை மையமாகவைத்து )
  • துயரம் சுமக்கும் தோழர்களாய் (2011, கவிதைத்தொகுப்பு)

விருதுகள்[தொகு]

  • புலவர்மணி ஆ. மு. சரீபுத்தீன் தமிழியல் விருது (ரூபாய் 10,000 பணத்துடன்) - துயரம் சுமக்கும் தோழர்களாய் கவிதைத்தொகுப்புக்கு[1]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. http://www.maddunews.com/2013/07/2012.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிஞ்சிவாணன்&oldid=3641272" இலிருந்து மீள்விக்கப்பட்டது