கீழத்தூவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழத்தூவல் (Keelathooval) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சிறப்புமிக்க சில சிற்றூர்களில் ஒன்றாகும். இப்பகுதியானது தொல்லியல் சிறப்பு வாய்ந்த ஆறு தளங்களைக் கொண்டுள்ளது.

தொல்லியல் தளங்கள்[தொகு]

அய்யனார் மற்றும் காளி கோயில்[தொகு]

அய்யனார் மற்றும் காளி கோயில் சிற்றூரிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் இந்த கோயிலுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. கோயிலும் குளமும் சிற்றூர் மக்களால் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் விழாவிற்காக பாதுகாக்கப்படுகின்றன. நீச்சலுக்காக நகரத்தினால் பயன்படுத்தப்படும் பெரிய குளமானது 1970 களில் ஆழப்படுத்தப்பட்டது. அதன் தரைப்பகுதி தோண்டப்பட்டபோது, மண் விளக்குகள், உண் கலங்களுடன் எல்லன் கணக்கிலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை இறந்தவர்கள் தங்கள் பிற்பட்ட வாழ்க்கையில் வெளிச்சத்துக்கும் உணவுக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் அடுப்புகளுடன் புதைக்கப்பட்டன. இந்த தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் மூடப்பட்டன. இந்த சிற்றூரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் எருதுக்கட்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த எருத்துக்கட்டின் போது சிற்றூர் மக்களால் சிறப்பாக வளர்க்கப்பட்ட, வலுவான, வேகமான, ஆற்றல் வாய்ந்த, பயிற்சி பெற்ற காளைகளை இளைஞர்கள் வெற்றி கொள்வர். இந்த திருவிழா சிற்றூரை சுற்றியுள்ள பகுதிகளில் பிரபலமானது.

இந்த கோயிலின் வருடாந்திர குதிரை எடுப்பு சடங்கானது, தொன்மவியல்படி, துருக்கரின் படையெடுப்பை தெய்வத்தின் தலையீட்டால் தடுப்பதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் மாலிக்கு கஃபூரின் படையெடுப்பைக் குறிக்கிறது. மாலிக்கு கஃபூரின் படைகள் இராமேசுவரம் வரை அணிவகுத்துச் சென்றதாக அறியப்பட்டது. மேலும் கீழத்தூவல் அதன் பாதையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு தலை துண்டிக்கப்பட்ட இந்து கல் சிற்பங்கள் கூடுதல் சாட்சியமாக உள்ளன. மதுரை மீதான மாலிக்கு கஃபூரின் முற்றுகை பல வாரங்களாக தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல்[தொகு]

கிராமத்திற்கு கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குட்டிவிளா தோப்புக்கு அருகில் பள்ளிவாசல் உள்ளது. அங்கு பரமக்குடி-முதுகுளத்தூர் சாலை செல்கிறது. குட்டிவிளா மரங்கள் உள்ளூர் மக்களால் பாதுகாக்கப்படுகின்றன, அவர்கள் இந்த மரங்களை புனிதமாக கருதுகின்றனர்.

சீரா பள்ளிவாசல்[தொகு]

ஊரின் தென்கிழக்கு திசையில் ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீரா பள்ளிவாசல் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டதாக இல்லை, என்றாலும் அங்குள்ள இலந்தை மரம் புனிதமாக கருதப்படுகிறது. இராமநாத மாவட்டத்தின் இந்த பகுதியில் இலந்தை மரங்கள் அரிதானவை. கீழத்தூவல் ஊரானது வங்காள விரிகுடாவிலிருந்து 20 கிலோமீட்டர்கள் (12 mi) தொலைவில் உள்ளது.

முனியப்ப சாமி கோயில்[தொகு]

இங்கு முனியப்பா சாமி கோயிலும், அந்தக் கோயிலின் புனித குளமும், எந்த காலத்தில் உருவானது என்று அறியப்படாதது. இங்கு ஆண்டுதோறும் மாசி களரி கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. இந்த கோயில்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளை பரம்பரை அறங்காவலர்களின் குடும்பமானது கவனித்து வருகின்றது. இந்த கோயிலுக்குப் பின்னால் உள்ள குளத்தின் கரையில் பெரிய ஆலமரங்கள் வரிசையாக அமைந்துள்ளன.

குடம்பூரணி[தொகு]

குடம்பூரணி புனித மரமானது, பல வகையான பறவைகளுக்கு அடைக்கலம் தருவதாகவும், ஒரு பழங்கால சிவன் கோவிலின் எச்சங்களை கொண்டதாகவும் உள்ளது. இங்கு தெய்வங்களின் சிலைகள் மற்றும் சத்தியின் ஆயுதமான சூலாயுதம் ஆகியவற்றுடன் கல் தூண்கள் நிற்கின்றன. இந்த கோயிலுக்கு அருகிலுள்ள குளம் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

கோயில்களைச் சுற்றி சுமார் நான்கு முதல் ஐந்து கிலோமீட்டர் விட்டம் கொண்ட பகுதியானது மக்கள் வாழும் பகுதியாக உள்ளது. கி.பி 1311 இல் மாலிக்கு கஃபூரின் படையெடுப்பின்போது தலையில்லமல் உள்ளதாக இரண்டு தெய்வங்களின் சிலைகள் (அல்லது அரசன் மற்றும் அரசி) உடைக்கப்பட்டன.

நடுகற்கள்[தொகு]

இவ்வூரின் முதன்மையான பிள்ளையர் கோயிலுக்கு முன்னால் இருந்த நடுகல் அகற்றப்பட்டது, ஏனெனில் இது கிராமப் பாதையின் மையத்தில் அமைந்திருந்தது. அந்த இடம் ஒரு போர்க்களமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த முழு சமூகத்தின் பெண்கள் அயல் நாட்டு படையெடுப்பாளர்களால் களங்கப்படக்கூடாது என்பதற்காக கீழத்தூவல் மக்களால் ஒரு நிலவறைக்குள் அடைத்து வைக்கப்பட்டதாக தொன்மவியல் கருத்து கூறுகிறது. கீழத்தூவல் என்ற சொல்லின் பொருளானது இந்தப்பகுதியில் பேசப்படாத, மாறாக இதை ஒட்டிய மாநிலமான கேரளத்தில் பேசப்படும் மொழியான மலையாளத்தில் "கிழக்கு கூடு" என்று பொருள்படும் சொல்லாகும்.

பரம்பரை[தொகு]

17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து 1947 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் விடுதலை வரை இராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி குலத்தின் பரம்பரையைச் சேர்ந்தவர்களை இந்த ஊரின் தற்போதைய குடியிருப்பாளர்களில் காணலாம். கி.பி 1888 இல், இராமநாத பாஸ்கர சேதுபதி [1] மன்னர் தூவலின் கண்ணுசாமி தேவரின் மகள் சிவபக்கியம் நாச்சியாரை மணந்தார். கண்ணுசாமித் தேவர் அரச குடும்பத்தின் உறவினர் ஆவார்.[2] தற்போதைய இரநாதபுரத்தின் இளவரசரும், முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான காசினாத துரை 1990 களில் மன்னர் பாஸ்கர சேதுபதி பற்றிய வரலாற்று ஆய்வு நூலின் ஆசிரியர் எசு. எம். கமால் அவர்களைச் சந்தித்தபோது, அவரது பாட்டி தூவலைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தினார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Royal patron". Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2019-12-25.
  2. Mannar Bhaskara Sethupathy by Dr. S.M. Kamal, Sharmila Printers, 1992
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழத்தூவல்&oldid=3765976" இலிருந்து மீள்விக்கப்பட்டது