ஒசூர் வெங்கட்ரமண சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கட்ரமண சுவாமி கோவில்
வெங்கட்ரமண சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:ஓசூர்
சட்டமன்றத் தொகுதி:ஓசூர்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:வெங்கட்ரமண சுவாமி
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
குளம்:சீதைக் குளம்
சிறப்புத் திருவிழாக்கள்:4ம் சனி
குன்றில் உள்ள ஒரு சமண சிற்பம்

ஒசூர் வெங்கட்ரமண சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.

குன்று[தொகு]

இக்கோயில் ஒசூர் நகரின் வெங்கடேஸ் நகர் என்றபகுதியில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த மலையில் சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்களும்[1] சிவச் சின்னங்களும் நிறைந்துள்ளன. மேலும் இந்தக் குன்றில் சமணத் துறவிகள் வாழ்ந்தற்கான சுவடுகள் காணப்படுகின்றன. இந்தக் குன்றில் உள்ள கல்வெட்டுகள் வாயிலாக இங்கு பாரீசுவ ஜீனாலயம் என்ற ஒரு சமணக் கோயில் இருந்ததாக தெரியவருகிறது.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலுக்கு 90 அடி நீள அகலத்தில் மதில்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு கிழக்கு நோக்கி வாயில் உள்ளது. மகா மண்டபத்துக்கு முன்பாக மூன்று நிலை இராசகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பரம்பத வாயிலிலும் மூன்று நிலை இராசகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலை அடுத்து 21 அடி உயர விளக்குக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அதை அடுத்துள்ள முகமண்டபமானது நான்கு தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் பலிபீடமும், கருடாழ்வார் சிலையும் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் வெங்கட்ரமணர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கோயில் பிரகாரத்தில் பஞ்சலிங்க சந்நிதி, சண்டிகேசுவரர் சந்நிதி, பிரசன்ன பார்வதி சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. வடமேற்கில் சீதைகுளம் உள்ளது. கோயில் தலமரமான அரசமரத்தின் அடியில் விநயகர் உள்ளார். தெற்கு வாயிலின் அருகே அனுமன் சந்நிதி உள்ளது.

திருக்குளம்[தொகு]

இங்கு உள்ள திருக்குளம் சீதை குளம் என அழைக்கப்படுகிறது. இராமனும், சீதையும் தங்கள் பயணத்தின்போது இங்கு தங்கியதாகவும், அப்போது சீதைக்கு ஏற்பட்ட தாகத்தைத் தணிக்க இராமன் அம்புவிட்டு இக்குளத்தை உருவாக்கியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி சனிக் கிழமைகளில் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. மேலும் வைகுண்ட ஏகாதசி, தனூர் மாத பூசை ஆகியவை சிறப்பாக செய்யப்படுகின்றன. மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. எஸ்.கே.ரமேஷ் (29 அக்டோபர் 2016). "ஓசூர் வெங்கடபெருமாள் கோயிலில் 12-ம் நூற்றாண்டு சமண கல்வெட்டுகள், சிற்பங்கள் கண்டுபிடிப்பு". செய்தி. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2016.
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 120–123. {{cite book}}: Check date values in: |year= (help)