சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை என்ற ஊரில் உள்ள புராதன அம்பாள் ஆலயம் ஆகும்.

இன்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோற்றம் பெற்ற இவ்வாலயம் யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐதீக கதைகளுடன் கூடியது. இவ்வாலயத்துக்கு அருகாமையில் சிவன், முருகன், பைரவர் ஆலயங்கள் உள்ளன.

ஆலயத்தின் பின்புறத்தில் தலவிருட்சங்களாக நொச்சி, ஆல், அரசு, கடம்ப மரங்கள் போன்றவற்றின் கீழ் தங்கு சங்களை (கண்ணகி அம்மன்) அம்பாளும் அமைந்துள்ளார். இவ்வாலயத்தினை வழிவழியாக வந்த தர்மகத்தா சபையினர் நெறிப்படுத்தி வருகின்றார்கள்.

இங்கு சிறப்பு உற்சவங்கள், மகோற்சவங்கள், ஆடிப் பூரம், நவராத்திரி, கந்தசட்டி, திருவெம்பாவை என்பன நடைபெற்று வருகின்றன. இதைவிட தொன்று தொட்டு சித்திரை மாதம் முதலாம் வாரம் வருகின்ற வெள்ளிக்கிழமையில் ஆரம்பமாகி கந்த புராண படலமும் மார்கழி மாதத்தில் திருவாசக முற்றோதலும் நடைபெற்று வருகின்றன. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து வந்த காலங்களில் ஆலயத்தில் விநாயகர் தேர், சப்பறம், தீர்த்தக்கேணி, கல்யாண மண்டபம், அன்னதான மண்டபம் போன்ற திருப்பணிகள் நிறைவு பெற்று காணப்படுகின்றது.

சுதுமலை அம்மனின் வரலாற்றைக் கூறும் ஆவணமாக த. காசிநாதன் எழுதிய சுதுமலை சிறீ புவனேஸ்வரி அம்பாள் ”கோயில் வரலாறு” என்னும் நூலும், பண்டிதர் மு. கந்தையா எழுதிய ”சிறீ புவனேஸ்வரி அம்மை பிள்ளைத்தமிழ்” என்னும் நூலும், வித்துவான் சைவப்புலவர் வ. செல்லையா எழுதிய “புவனேஸ்வரி அம்மை போற்றித்திருவகவல்” எனும் நூலும் ஆலயத்தின் சான்றுகளாக அமைந்துள்ளன.

இவற்றையும் பார்க்க[தொகு]