வீரை வெளியனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரை வெளியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் வெளியன். இவர் வீரை என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் வீரை வெளியனார் என்று அழைக்கப்பட்டார். வீரை வெளியனார் பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது. அது புறநானூறு 320 எண் கொண்ட பாடலாக இடம்பெற்றுள்ளது. இவரது மகன் வீரை வெளியன் தித்தனாரும் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.

வீரை, ஊர்[தொகு]

வீரை என்பது ஊரின் பெயர். வீரை என்னும் சொல் வாழைமரத்தைக் குறிக்கும். 1 2[தொடர்பிழந்த இணைப்பு] எனவே வீரை வாழைமரம் மிகுதியாக இருந்த ஊர் எனலாம். வீரகனூர் என இக்காலத்தில் வழங்கப்படும் ஊரின் சங்ககாலப் பெயர் வீரை என்பர். 3 திருப்பைஞ்ஞீலி என்னும் ஊரின் கோயில் வாழை மரத்தைக் காவல் மரமாகக் (தலவிருச்சமாகக்) கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். சொல் மரபை எண்ணிப் பார்க்கும்போது வீரகனூரே பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம் புலவர் வாழ்ந்த ஊர் எனலாம். வீரை என்னும் ஊர் பெண்ணையாற்றின் வடகரையில், புதுச்சேரிக்கு அருகில் இருப்பதாகவும், அவ்வூர் இக்காலத்தில் வீராம்பட்டினம் என்று அழைக்கப்படுவதாகவும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

இப்பாடலில், ஒரு வேட்டுவனின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றையும், அவ்வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பும் திறத்தையும் புலவர் வீரை வெளியனார் வெகு அழகாகச் சித்திரிக்கிறார்.

  • திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
  • துறை - வல்லாண்முல்லை ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

வல்லாண் எனப்பட்ட அந்த நெடுந்தகை தான் போர்முகத்தில் உதவியமைக்காகத் தனக்கு வேந்தன் தந்த விழுமிய செல்வத்தைத் தனக்கென வைத்துக்கொள்ளாமல் பலருக்கும் வழங்கும் பாங்குடையவன். அதனால் அவன் புகழ் எங்கும் பரவியிருந்தது.

அவனது மனைவியும் தான் சந்தனக்கட்டையை எரித்து மணம் கமழச் சமைத்த உணவைத் தன் பெரிய சுற்றத்தாரோடு சேர்ந்தே உண்பவள்.

அவள் அருள் உள்ளம் கொண்டவள்.

கைம்மான் வேட்டுவன்[தொகு]

நெடுந்தகை மனைக்குப் பந்தல் வேண்டுவதில்லை. அவனது மனை முற்றத்தில் முஞ்ஞை, முசுண்டை போன்ற கொடிகள் படர்ந்து பம்பிக் கிடந்தன. அவன் அந்த நிழலில் உறங்கிவிட்டான். அவன் பெண்மானை வளர்த்து அதன் உதவியால் ஆண்மானைப் பிடிப்பவன்.

ஆண்மான் ஒன்று அங்கு வந்தது. அவன் வளர்த்த பெண்மானோடு கூடி மகிழ்ந்தது. அவன் மனைவி அதனைப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருந்தாள். கணவன் எழுந்துவிட்டான். ஆண்மான் அஞ்சி ஓடிவிட்டது. கணவன் பெண்மானின்மீது சினம் கொண்டு அடித்து உணவாக்கிக் கொள்வான் என அஞ்சினாள்.

தன் கணவனிடம் சொன்னாள்.

நான் மான் தோலில் தினை காயவைத்திருந்தேன். கானக்கோழியும் இதல் பறவையும் அதனைத் தின்றுவிட்டன. அவற்றைப் பிடித்துத் தா எனக் கேட்டு, அவன் பிடித்துத் தர அதனைச் சமைத்து தன் குடும்பத்தாருக்கெல்லாம் படைத்தாள்.

கைம்மான் பிணையைப் புணர்ந்த கலைமான் தப்பிச் செல்ல வல்லாண் குடும்பத்து மனைவி வகைசெய்த அருளுள்ளம் கொண்டவள்.

பாடல்[தொகு]

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட

இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இல்வழங் காமையின் கல்லென ஒலித்து
மான்அதள் பெய்த உணங்குதினை வல்சி

கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
ஆர நெருப்பின் ஆரல் நாறத்
தடிவார்ந்து இட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
தங்கினை சென்மோ, பாண! தங்காது

வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரை_வெளியனார்&oldid=3362458" இலிருந்து மீள்விக்கப்பட்டது