வளி மாசடைதல்
வளி மாசடைதல் அல்லது காற்று மாசடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் என்பன வளிமண்டலத்தில் கலப்பதைக் குறிக்கும். இது மனிதர்களுக்குப் பாதிப்பு அல்லது வசதிக் குறைவை ஏற்படுத்துவதுடன், சூழலுக்கும் கெடுதல் விளைவிக்கின்றது. வளி மாசடைதல், இறப்பையும், சுவாச நோய்களையும் ஏற்படுத்துகின்றது. வளி மாசடைதல், நிலையான மூலங்களினால் ஏற்படுவதாகவே பெரிதும் நம்பப்பட்டபோதிலும், மாசுப்பொருட்கள் வெளியேற்றத்துக்கான மிக முக்கியமான காரணம் தானுந்துகள் ஆகும். புவி சூடாதலுக்குக் காரணமான காபனீரொட்சைட்டுப் போன்ற வளிமங்களும் மாசுப் பொருள்களே என்று அண்மைக்காலங்களில் காலநிலை அறிவியலாளர்கள் கூறிவருகிறார்கள். அதே வேளை தாவரங்களின் ஒளித்தொகுப்புக்குக் காபனீரொட்சைட்டின் தேவையையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.
வளிமண்டலம் ஒரு சிக்கலான இயங்கியல், இயற்கை வளிமங்களின் தொகுதியாகும். இது புவியிலுள்ள உயிரினங்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது. வளி மாசடைதலால் ஏற்படுகின்ற ஓசோன் அழிவு, மனிதரின் உடல்நலத்துக்கும், புவியின் சூழல்மண்டலத்துக்கும் கெடுதியானது.