உப்பளம் (உப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மரக்காணம் உப்பளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மரக்காணம்,உப்பளம்

உப்பளம், சமையலுக்கான உப்பு தயாரிக்கும் களமாகும். களம் எனும் பாத்திகளில் கடல் நீரை அடைத்து சூரிய ஒளியில் நன்கு நீர் ஆவியாகி போகுமளவுக்கு காய்ச்சி எடுத்தால் சோடியம் குளோரைடு எனும் சமையல் உப்பு கிடைக்கும். இந்தியாவில் உப்பளத்தொழிலில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் உப்பின் தேவையில் 12% தமிழ்நாட்டின் தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள உப்பளங்களிலிருந்து உப்பு அறுவடை செய்யப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் உப்பளம்[தொகு]

தமிழகத்தில் உப்பின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் தொ. பரமசிவன், உப்பு விளையும் களத்துக்கு அளம் என்றும், "உப்பு விற்பவர்களை சங்க இலக்கியத்தில் உமணர்கள் என்று அழைத்தனர் என்றும், பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியுள்ளனர் என்றும் குறித்துள்ளார். உப்பளங்களுக்கு பேரளம், கோவளம் (கோ அளம்) போன்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளது. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். தமிழர் தாயகப் பகுதிகள் கடற்கரையை அண்டிய பகுதிகளாக இருந்தமையால் தமிழர்கள் உப்புத் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கை[தொகு]

இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகள் ஆன ஆனையிறவு, நிலாவெளி, சிவியாதெரு, இருபாலை, கரணவாய், கல்லுண்டாய், முல்லைத்தீவு முதலிய இடங்களில் உப்புப் பெறப்படுகின்றது.[1] இப் பகுதிகளில் பல உப்பளங்கள் உள்ளன.

இந்தியா[தொகு]

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம் போன்ற கரையோர மாவட்டங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையினால் தமிழ்நாட்டு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.[2]

பொருளாதார முக்கியத்துவம்[தொகு]

உப்புத் தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். உப்பு தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பொருளாகவும் உள்ளது.

மரக்காணம் உப்பளம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள உப்பளங்களுள் ஒன்று மரக்காணத்திலுள்ளது. இது வடக்கே ஆலம்பாறை முகத்துவாரத்திற்கும் தெற்கே கழிவெளி ஏரிக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ளது. இங்குள்ள உப்பளங்களுக்குக் கழிமுகத்தின் வழியே கடல்நீர் வருகின்றது. ஏறக்குறைய 3500 ஏக்கரில் இங்கு நடைபெறும் உப்பு உற்பத்தி, சனவரிக்குப் பிறகு துவங்கப்பட்டு, ஆறு மாதங்களுக்குத் தொடருகின்றது[3].

உற்பத்தி முறை[தொகு]

பருவமழைக்குப் பின் பாத்திகளில் தண்ணீரும் சேருமாகச் சேர்ந்திருக்கும்; துளைக்குழாய் மூலமாகவும் தண்ணீர் பாத்திகளில் தேக்கப்படுகின்றது. இவற்றிலிருந்து சேற்றை அகற்றுவது முதற்பணி. தொட்டம் என்ற அமைப்புகளில் கடல்நீர் தேக்கப்படுகின்றது. தொட்டத்திற்கும் பாத்திக்கும் இடையில் அமைந்த வாய்க்கால் பகுதி கிடங்கல் என அழைக்கப்படும். கிடங்கல் என்றால் உப்புத் தண்ணீரை பாத்திகளுக்கு கொண்டு வரும் வாய்க்கால். இவற்றை சுத்தப்படுத்தி, சேற்றை அகற்றி, கடற்கரை மணல் கலந்து நன்றாகக் காலால் மிதித்துத் தரைபோல் சரிசெய்வர். ஒரு பாத்திக்கு ஒன்பது நாளுக்கு ஆறு பேர் மிதிப்பர். இந்தப் பாத்திகளை இவ்வாறாக மட்டம் செய்தால்தான் தண்ணீரைத் தேக்கி உப்பு தயாரிக்க முடியும்.

பிறகு பாத்திகளில் இருக்கும் வரப்புகளை மொழுகி அவற்றைத் தயாரிக்க வேண்டும். வெயில் தொடங்கிய பின்பு கிடங்கல் வழியாக தண்ணீர் பாத்திகளுக்கு கொண்டு வரப்படும்; முதலில் கடல்நீரைக் கொண்டு வந்தால் அதில் மழைநீர் கலந்து இருக்கும் என்பதால் உப்புத்தன்மை குறைவா இருக்கும். அதனால நிலத்தடியில் 10 அடியிலிருந்து குழாய்கிணற்றின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். அந்த தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமா இருக்கும். அப்படி வருகிற தண்ணீர் பாத்திகளில் தேங்க வைக்கப்பட்டு, சூரிய வெப்பத்தில் கொஞ்சம் கொஞ்சமா உப்பாக மாறும். உப்பு படிகங்கள் பால் ஏடை போல மிதக்கும். அப்படி மிதக்கும் படிகங்களை வார்ப்பலகை கொண்டு வரப்பு ஓரத்தில் சேர்த்து வைக்கப்படும். இப்படி சேர்த்து வைக்கப்படும் உப்பு ஐந்து நாளைக்கு ஒருமுறை மொத்தமாக சேகரிக்கப்பட்டு (கிட்டத்தட்ட 60 கிலோ) தரையில் கொட்டி வைக்கப்படும்; அவ்வாறு தரையில் கொட்டி வைக்கப்படும் இடத்திற்கு அம்பாரம் என்று பெயர் [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும்". Archived from the original on 2013-07-27. பார்க்கப்பட்ட நாள் 2012-10-13.
  2. தவாது போன உப்புத் தொழில்
  3. புதிய தலைமுறை [1]
  4. புதிய தலைமுறை [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்பளம்_(உப்பு)&oldid=3948489" இலிருந்து மீள்விக்கப்பட்டது