சத்யாதயன தீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ சத்யாதயன தீர்த்தர்
பிறப்பு(1872-12-24)24 திசம்பர் 1872
சிக்கோடி, பெல்காம் மாவட்டம், கருநாடகம்
இறப்பு24 மார்ச்சு 1942(1942-03-24) (அகவை 69)
பண்டரிபுரம், சோலாப்பூர் மாவட்டம், மகாராட்டிரம்
இயற்பெயர்கோர்லஹள்ளி சேதுராமாச்சார்யர்
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம், வைணவ சமயம்
குருசத்யாஜன தீர்த்தர்

சத்யாதயன தீர்த்தர் (Satyadhyana Tirtha) (1872 திசம்பர் 24 - 1942 மார்ச் 24) இவர் ஓர் இந்திய இந்துத் தத்துவஞானியும், அறிஞரும், யோகியும், ஆன்மீகவாதியும், இறையியலாளரும், துறவியுமாவார். இவர் உத்திராதி மடத்தின் 38 வது தலைவராக 1911-1942 வரை சேவை செய்தார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆர்வமுள்ள துறவியாக கருதப்பட்டார். [1] ஒரு இடைவிடாத பிரச்சாரகரான இவர், தனது காலத்தில் சிறந்த விவாதக்காரராக இருந்தார். தத்துவ விவாதங்களில் தனது எதிரிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு பயங்கரவாதியாகவே இருந்தார். இவரது முன்முயற்சியிலும், உத்வேகத்தாலும் மகாராட்டிராவில் இவரை பின்தொடர்பவர்களுக்காக மத்துவாச்சாரியரின் பிரம்மசூத்ர பாஷ்யமும், ஜெயதீர்த்தரின் தத்துவப்பிரகாஷிகாவும் மராத்தி மொழி பெயர்ப்பில் வெளியிடப்பட்டது. [1]

இவர் இந்தியா முழுவதும் விரிவான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, விவாதங்களை நடத்தினார். மேலும், வட மற்றும் தென்னிந்தியாவில் பல மொழிகளில் கடுமையாக விமர்சன துண்டுப்பிரசுரங்களையும், வெளியிட்டார். இவர் 1905-06 ஆம் ஆண்டில் சிறீமன் மத்வ சித்தாந்த அபிவிருத்திகரினி சபை என்பதைத் தொடங்கி, பதிவுசெய்தார். 1930ஆம் ஆண்டில் சமசுகிருத இலக்கியத்தையும் தத்துவத்தின் ஆய்வை ஊக்குவிப்பதற்காகவும், துவைத தத்துவ ஆய்வுக்காகவும், மத்துவ அறிஞர்களின் கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.

சுயசரிதை[தொகு]

இவர், கருநாடகாவின் சிக்கோடி என்ற கிராமத்தில் இருக்கு வேத அறிஞரான கோர்லஹள்ளி ஜெயராமாச்சார்யர் (சத்தியதீர தீர்த்தர்), கிருஷ்ணபாய் ஆகியோருக்கும் பண்டைய தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் [2] 1872 ஆம் ஆண்டு திசம்பர் 24 ஆம் தேதி கோர்லஹள்ளி சேதுராமாச்சார்யர் என்ற பெயரில் பிறந்தார். இவரது தந்தை சத்தியதீர தீர்த்தர் உத்திராதி மடத்தின் 37வது தலைவராக இருந்தார். [3]

சத்தியாதயன தீர்த்தருக்கு மடத்தின் நிர்வாகத்தில் பரந்த அனுபவம் இருந்தது. இவர் மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டிருந்தார். இவர் எப்போதும் மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் தத்துவ சிக்கல்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு அணுகக்கூடியவராக இருந்தார். மேலும் சமசுகிருதம் மற்றும் தத்துவத்தில் பல்கலைக்கழக பட்டங்களை எடுத்த பல இளம் அறிஞர்களை வேதாந்தத்தில் ஆராய்ச்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஊக்கப்படுத்தினார். [4]

பணிகள்[தொகு]

1929-30ல் கும்பகோணத்தில் நடந்த பிரபலமான துவைத - அத்வைத விவாதத்தில், அனந்த கிருஷ்ண சாஸ்திரி என்பவரின் தலைமையிலான விவாதத்தில் பங்கு கொண்டு வெற்றி கண்டார். [4] பால கங்காதர திலகர் போன்ற தனது காலத்தின் முன்னணி மனிதர்களை இவர் தத்துவ விவாதத்தில் ஈடுபடுத்தினார்; பனாரசு சம்பூர்ணானந்து சமசுகிருதக் கல்லூரியில், வட இந்திய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட துவைதப் படைப்புகளின் வெளியீட்டிற்கான ஒரு இருக்கையை ஏற்படுத்தினார். மேலும், அபிநவகதை, அத்வைதகலானலா போன்ற பிற சர்ச்சைக்குரிய பாரம்பரிய நூல்களைத் திருத்தியுள்ளார். [4]

இவர் அனைத்து சிந்தனைப் பள்ளிகளின் அறிஞர்களுக்கும் ஆடம்பரமான ஊக்கத்தை அளித்தார். மேலும் திருப்பதி மற்றும் பிற இடங்களில் ஆண்டுதோறும் அறிஞர்களின் சபைகளை நடத்தினார். மேலும் பல்வேறு கற்றல் பிரிவுகளில் அறிஞர்களை ஆராய்ந்து வெகுமதி அளித்தார். இந்து மதத்தின் துறவிகளில் இவர் முன்னணியில் இருந்தார். இவர் பல முறை இந்தியா முழுவதும் பயணம் செய்தார். பாரம்பரிய கற்றல் மையங்கள் மற்றும் வடக்கில் வாரணாசி, கயை மற்றும் துவாரகை போன்ற மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் தெற்கில் உள்ள இடங்களையும் பார்வையிட்டார்.

இவர் பல சர்ச்சைக்குறிய வேதாந்தக் கட்டுரைகள், மத்துவர், ஜெயதீர்த்தரின் படைப்புகள் பற்றிய வர்ணனைகளை உள்ளடக்கிய பல படைப்புகளை எழுதியுள்ளார். இவரது சந்திரிகாமந்தனம் என்பது, திருவிசநல்லூர் இராமசுப்ப சாஸ்திரியின் வியாசதீர்த்தரின் தாத்பார்யசந்திரிகாவின் மறுப்பு ஆகும்.

இறப்பு[தொகு]

1942 மார்ச் 24இல் இவர் இறந்த பிறகு, இவரது நினைவாக மகாராட்டிராவின் பண்டரிபுரத்தில் உள்ள மடத்தில்ஒரு பிருந்தாவனம் எழுப்பப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sharma 2000.
  2. Sharma 2000, ப. 198.
  3. 3.0 3.1 Rao 1984, ப. 90.
  4. 4.0 4.1 4.2 Sharma 2000, ப. 549.

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யாதயன_தீர்த்தர்&oldid=3934417" இலிருந்து மீள்விக்கப்பட்டது