எயித்தியப் புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எயித்தியப் புரட்சி
பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் பகுதி

சான்டோ டொமிங்கோ சண்டை., சனவரி சுச்சோடோல்சுகி வரைந்த ஓவியம் பிரெஞ்சுப் படையில் அங்கமாயிருந்த போலந்து
நாள் 14 ஆகத்து 1791 – 1 சனவரி 1804
இடம் செயிண்ட் டொமிங்கு
எயித்திய வாகை
நிலப்பகுதி
மாற்றங்கள்
பிரெஞ்சுக் குடியேற்றவாத அரசு நீக்கம். தன்னாட்சிபெற்ற எயித்தியக் குடியரசு மலர்ச்சி.
பிரிவினர்
எயிட்டி
பெரும் பிரித்தானியா (1793–1798)
எசுப்பானியா (1793–1795)
பிரெஞ்சு இராச விசுவாசிகள்
பிரான்சு பிரான்சிய முதல் குடியரசு
போலந்துப் படைப் பிரிவினர்
தளபதிகள், தலைவர்கள்
டூசேன் லோவெர்டூர்
ஜீன்-ஜாக் டெசலைன்ஸ்
பிரான்சு நெப்போலியன் பொனபார்ட்
பிரான்சு சார்லஸ் லெகிளர்க்
பிரான்சு டொனாட்டியன்-மாறி-ஜோசஃப் டெ விமூயர்
பலம்
வழமையான படைகள்: <55,000,
தன்னார்வலர்கள்: <100,000
வழமையன படைகள்: 60,000,
86 போர்க்கப்பல்களும் நாவாய்களும்
இழப்புகள்
படைத்துறை இறப்பு: அறியவில்லை
குடிமக்கள் இறப்பு: 100,000
படைத்துறை இறப்பு: 37,000 சண்டை மரணங்கள்
20,000 மஞ்சள் காய்ச்சல் மரணங்கள்
குடிமக்கள் இறப்புகள்: ~25,000

எயித்தியப் புரட்சி அல்லது ஹைட்டியின் புரட்சி (Haitian Revolution, 1791–1804) பிரெஞ்சுக் குடியேற்ற நாடான செயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டி ஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந்தது. இதுவே அடிமைத்தனத்திற்கு எதிராக வெற்றி கண்ட முதல் புரட்சியாகும். எயித்தியப் புரட்சி பிற்காலத்தில் நிகழ்ந்த பல முக்கியப் புரட்சிகளுக்கு வழிகோலியதுடன் அமெரிக்காக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதிலும் முக்கியப் பங்காற்றியது.

பின்புலம்[தொகு]

1802இல் ஸ்னேக் கல்லியில் நடந்த சண்டை.
1803இல் வெர்டியர்சு சண்டை

கரிபியன் தீவுகளின் செல்வச்செழிப்பு ஐரோப்பிய சர்க்கரைத் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த கரும்புத் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். இத்தீவில் காப்பி, கோக்கோ, பருத்தித் தோட்டங்களும் இருந்தபோதிலும் அவை இலாபமீட்டுபவையாக இல்லை.[1] 1730களில் பிரெஞ்சுப் பொறியாளர்கள் சிக்கலான நீர்ப்பாசன அமைப்புகளை உருவாக்கியதால் கரும்பு உற்பத்தி பெருகியது. 1740களில் செயிண்ட்-டொமிங்குவும் ஜமைக்காவும் உலக சர்க்கரை உற்பத்தியில் முதன்மையாளர்களாக விளங்கின. சர்க்கரை உற்பத்திக்கு மனித உழைப்பு மிகவும் தேவையாக இருந்தது; இதற்கு ஆப்பிரிக்க அடிமைகளைப் பயன்படுத்தி வந்தனர். சிறுபான்மையினராகவும் மிகுந்த செல்வந்தர்களாகவும் விளங்கிய வெள்ளைக்கார தோட்ட உரிமையாளர்கள் தங்களை விடப் பத்து மடங்கு பெரும்பான்மையான கருப்பர்களின் எதிர்ப்பை எதிர்பார்த்து அஞ்சினர்.[2][3] இதனால் அடித்துக் கொடுமைப்படுத்திக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்றனர். அடிமைகள் இட்ட கட்டளையை மீறினாலோ தப்பி ஓடினாலோ அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஓர் படிப்பினையாக இருக்குமாறு கொடுமையான கசையடிகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இது சில நேரங்களில் விரை நீக்கம், கொளுத்துதல் வரை சென்றது. பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லூயி இக்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கோட் நாய்ர் என்ற கருப்பு விதியைக் கொணர்ந்தார். ஆனால் இதனைத் தோட்டக்காரர்கள் மீறியதோடன்றி உள்ளூர் சட்டங்களால் இவற்றை மாற்றினர்.[4] 1758இல் வெள்ளை உரிமையாளர்கள் இயற்றிய சட்டங்களால் ஓர் சாதிப் பிரிவினை உருவானது. முதல்நிலையில் வெள்ளை குடியேற்றவாதிகள், பிளாங்க்குகள், இருந்தனர். அடுத்த நிலையில் முலட்டோக்கள் அல்லது சுதந்தர கருப்பர்கள் (gens de couleur libres) இருந்தனர். இவர்கள் கல்வியறிவு, படைப்பயிற்சி பெற்றவர்களாகவும் அடிமைப்படாதவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலனவர்கள் வெள்ளை உரிமையாளருக்கும் அவரிடம் அடிமைப்பட்டிருந்த கருப்பினப் பெண்களுக்கும் பிறந்தவர்கள். மூன்றாம் கடைநிலையில் ஆப்பிரிக்க தேசத்து அடிமைகள் இருந்தனர். இவர்களது மரணவீதம் கூடுதலாக இருந்ததால் தோட்டக்காரர்கள் அடிக்கடி ஆப்பிரிக்காவிலிருந்து புதிய அடிமைகளை இறக்குமதி செய்தனர்.இதனால் இவர்கள் தீவின் மற்றவர்களைப் போலன்றி ஆப்பிரிக்கப் பண்பாட்டுடன் தனித்திருந்தனர். மேலும் தீவில் ஏற்கெனவே இருந்த நாகரிகமடைந்த அடிமைகளிடமிருந்து பிரித்து வைத்தது. [4][5]

வெள்ளை குடியேற்றவாதிகளுக்கும் கருப்பின அடிமைகளுக்கும் அடிக்கடி வன்முறை மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை தோட்டங்களிலிருந்து தப்பித்துச் சென்ற அடிமைக் கூட்டங்களால் நடந்தவை. தப்பியோடியவர்களை மரூன்கள் என்று அழைத்தனர். இவர்கள் தோட்டங்களின் எல்லைகளில் மறைந்து வாழ்ந்ததோடன்றி திருட்டுக்களில் ஈடுபட்டனர்.சிலர் நகரப்பகுதிகளுக்கு ஓடிச்சென்று மற்ற கருப்பர்களுடன் இணைந்தனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் காடுகளுக்கக் கூட்டம் கூட்டமாக இவர்கள் தப்பிச் சென்றனர். கூட்டமாக இருந்தபோதும் இவர்களுக்குத் தலைமையேற்று நடத்தும் திறனும் பேரளவு திட்டமிட்டு சாதிக்கும் வன்மையும் இல்லாதிருந்ததால் பெரும் சமர்கள் எதுவும் எழவில்லை.

முதல் திறனுள்ள மரூன் தலைவராக பிரான்சுவா மக்கன்டல் உருவானார். எயித்திய வூடோ பாதிரியான மக்கன்டல் தம்மின மக்களை ஆபிரிக்க மரபு மற்றும் சமயங்களால் ஒருங்கிணைத்தார். பல்வேறு மரூன் கூட்டத்தினரையும் ஒற்றுமைப்படுத்தி இரகசிய அமைப்பொன்றை தோட்ட அடிமைகளிடத்தில் ஏற்படுத்தினார். 1751 முதல் 1757 வரை எழுந்த ஓர் எதிர்ப்பிற்கு தலைமையேற்றார். 1758இல் இவரை பிரெஞ்சுப் படையினர் பிடித்து உயிருடன் எரித்த போதிலும் இவர் ஏற்றிய சுதந்தரத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.[2][3]

பின் விளைவுகள்[தொகு]

புதிய குடியரசு உருவானபோதும் சமூகத்தில் பிரெஞ்சுக் குடியேற்றவாத ஆட்சியில் நிறுவப்பட்ட நெறிமுறைகளின் தாக்கம் தொடர்ந்தது. பல தோட்ட உரிமையாளர்கள் ஆபிரிக்க அடிமை மனைவியரால் பெறப்பட்ட கலப்பின சிறுவர்களுக்கு கல்வியும் படைப்பயிற்சியும் வழங்கியிருந்தமையால் முலட்டோக்கள் என்றழைக்கப்பட்ட இந்த கலப்பினத்தவர்கள் புரட்சிக்குப் பிந்தைய ஆட்சியில் சீர்மிகுந்தவர்களாக விளங்கினர். போர் முடிவடைந்த சமயத்தில் இவர்களில் பலரும் தங்கள் சமூக நிலையால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தனர். இவர்கள் அடிமைகளோடு தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளாது தங்களுக்குள்ளேயே வட்டம் அமைத்துக் கொண்டனர்.

அரசியலிலும் பொருளாதாரத்திலும் இவர்களது ஆதிக்கத்தால் சமூகத்தில் இரண்டு சாதிகள் உருவாகின.பெரும்பாலான எயித்தியர்கள் பஞ்சம் பிழைக்கும் விவசாயிகளாக சிற்றூர்களில் வசித்து வந்தனர்.[6] கூடுதலாக 1820களில் புதிய நாட்டின் எதிர்காலம் பிரான்சிய வங்கிகளில் அடைமானம் வைக்கப்பட்டிருந்தது; தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார தனிமைப்படுத்தலைத் தவிர்க்கவும் பிரான்சின் அங்கீகாரம் பெறவும் புதிய நாடு அடிமை-உரிமையாளர்களுக்கு ஏராளமான நட்ட ஈடு கொடுக்க வேண்டியதாயிற்று.[7] இந்த நிதியளிப்புகள் எயித்தியின் பொருளாதாரத்தையும் செல்வத்தையும் நிரந்தரமாகப் பாதித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Thomas E. Weil, Jan Knippers Black, Howard I. Blustein, Kathryn T. Johnston, David S. McMorris, Frederick P. Munson, Haiti: A Country Study. (Washington, D.C.: The American University Foreign Area Handbook Series 1985).
  2. 2.0 2.1 Rogozinski, Jan (1999). A Brief History of the Caribbean (Revised ). New York: Facts on File. பக். 85, 116–117, 164–165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8160-3811-2. https://archive.org/details/briefhistoryofca00rogo_0. 
  3. 3.0 3.1 "The Slave Rebellion of 1791". பார்க்கப்பட்ட நாள் 27 November 2006.
  4. 4.0 4.1 Laurent Dubois, Avengers of the New World: The Story of the Haitian Revolution. (Cambridge, Massachusetts: The Belknap Press of Harvard University Press 2004).
  5. "Haiti – French Colonialism". பார்க்கப்பட்ட நாள் 27 November 2006.
  6. Anne Greene (1988–98). "Chapter 6 – "Haiti: Historical Setting", in A Country Study: Haiti". *Federal Research Service of Library of Congress.{{cite web}}: CS1 maint: date format (link)
  7. "A Country Study: Haiti – Boyer: Expansion and Decline". * Library of Congress. 200a. பார்க்கப்பட்ட நாள் 30 August 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எயித்தியப்_புரட்சி&oldid=3879672" இலிருந்து மீள்விக்கப்பட்டது