இருமுனையப் பிறழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருமுனைய பிறழ்வு
இருமுனையப் பிறழ்வு கூடிய கிளர்ச்சிக்கும் உளச்சோர்வுக்கும் இடையே மாறி மாறி இருத்தலாகும்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉளநோய் மருத்துவம், clinical psychology
ஐ.சி.டி.-10F31.
ஐ.சி.டி.-9296.0, 296.1, 296.4, 296.5, 296.6, 296.7, 296.8
ம.இ.மெ.ம125480 309200
நோய்களின் தரவுத்தளம்7812
மெரிசின்பிளசு001528
ஈமெடிசின்med/229
பேசியண்ட் ஐ.இஇருமுனையப் பிறழ்வு
ம.பா.தD001714

இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder அல்லது bipolar affective disorder) அல்லது இருதுருவக் கோளாறு என்பது கிளர்ச்சி-சோர்வு கோளாறான ஓர் உளநோய் ஆகும். உளநோய் கண்டறிதலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதீத உற்சாக நிலை நிகழ்விருந்து ஒன்று அல்லது மேற்பட்ட சோர்வு நிகழ்வுகள் இருப்பினும் இல்லாதிருப்பினும் அது இருமுனையப் பிறழ்வாக வகைப்படுத்தப்படுகிறது. உள்ளம் மிகவும் உயர்ந்த உணர்ச்சிகளுடன் இருக்கும் நிலை பித்து என அழைக்கப்படுகிறது. இவ்வாறான மிக உயர்ந்த மன உணர்நிலைகளை எட்டியவர்கள் பொதுவாக உளத்தளர்ச்சி உணர்நிலைகளையும் உணர்வதுண்டு. சில நேரங்களில் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும் கலந்த உணர்நிலையிலும் அவர்கள் இருக்கலாம். [1] இத்தகைய இருவேறு அதீத மனநிலைகளுக்கு இடையே "வழமையான" உணர்நிலைகளிலும் இருப்பர்; ஆனால், சில நபர்களுக்கு தளர்வும் உற்சாகமும் விரைவாக மாறிக்கொண்டிருக்கலாம் - இது விரைவுச் சுழற்சி எனப்படுகிறது. தீவிரமான பித்து நிலைகளில் உளப்பிணி அறிகுறிகளான திரிபுக்காட்சிகளும் மாயத் தோற்றங்களும் வெளிப்படும். இந்த மனக்கோளாறை உணர்நிலை மாற்றங்களின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து இருமுனையம் I, இருமுனையம் II, சைக்ளோதைமியா என்ற பிற துணை பகுப்புகளில் வகைப்படுத்துகின்றனர். இவை அனைத்துமே இருமுனையக் கற்றை (bipolar spectrum) எனப்படுகிறது.

இருதுருவக்கோளாறு உள்ள ஒருவர் பித்து, உளச்சோர்வு ஆகிய இரு உளப்பிரச்சினைகளுக்கும் மாறி மாறி உட்பட்டு துன்பப்படுவார். சாதாரண மனச்சோர்வை ஒருதுருவ மனச்சோர்வு எனலாம். இருதுருவக் கோளாறில் பெரும்பாலும் முதலில் தோன்றுவது பித்து நிலையாகும். அக்காலப்பகுதியில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு உயர்ந்த சக்தியுள்ள மனோபாவத்துடன் இருப்பதோடு, வன்முறை, குற்றச்செயல்கள், மதுப்பாவனை, குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றிலும் ஈடுபடக்கூடும். சிறிது காலம் பித்து நோய் நீடித்த பின் மனச்சோர்வு வரலாம். பித்து நிலையோடு ஒப்பிடும் போது மனச்சேர்வுக்குறிய காலம் குறைவாக இருந்த போதிலும் அதிக வலிமையுடன் தோன்றுவதால், இக்காலப் பகுதியில் தற்கொலை எண்ணங்களுடன் இருக்கக்கூடும். ஒருதுருவ மனச்சோர்வை விட இருதுருவக் கோளாறில் தற்கொலைக்கான வாய்ப்புக்கள் அதிகம்.

அறிகுறிகள்[தொகு]

இந்தக் கோளாறால் படைப்பாற்றல் தூண்டப்பட்ட கலைஞர்களில் வின்சென்ட் வான் கோவும் ஒருவர்

இந்தக் கோளாறு உள்ளவர்களின் மூளை உயர் ஆற்றல் நிலையில் இருக்கும். அல்லது மிகக் குறைந்த ஆற்றல் நிலையில் இருக்கும். இரு முனையம் என்பது மூளையின் இந்த இரு தீவிரநிலைகளையேக் குறிக்கிறது. மூளை உயர்ந்த நிலையில் இருக்கும்போது உணர்ச்சிகள் தீவிரமாக இருக்கின்றன; பயம், மகிழ்ச்சி போன்றவை கடுமையாக உணரப்படும். இந்த நிலையில், பித்து, இருக்கும்போது தங்களுக்கான தெரிவுகளை சிந்தித்து செயலாற்றும் பொறுமை இருக்காது; பிறருக்கு கொடை அளிப்பதோ பணத்தைச் செலவழிப்பதோ இயல்புக்கு மாறாக இருக்கும். எது உண்மை எது மனத்தோற்றம் என்று பிரிக்க முடியாத நிலையில் இருப்பர். வெகுண்டெழும்போதும் வன்முறையில் இறங்குவர்; இருப்பினும் இது பொதுவான கருத்துக்கு மாறாக அடிக்கடி நிகழ்வதில்லை.

மேலும் பித்து பிடித்தவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் நேர்மறை நோக்குடனும் காணப்படுவர்.இதனால் பெரும் தீவாய்ப்புள்ள செயல்களில் இறங்குவர். பணம் இல்லாதபோதும் நிறைய தங்களிடம் இருப்பதாக எண்ணுவர். இறந்தவர்களை உயிருடன் இருப்பதாக எண்ணிச் செயல்படுவர். மிகவும் உரக்கவும் விரைவாகவும் பேசுவர். இவை எல்லாமே ஒருவரிடம் காணப்படத் தேவையில்லை; உள நோயில் ஒவ்வொருவருமே வெவ்வேறானவர்கள்.

இந்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் படைப்பாற்றுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.[2] சிலருக்கு இந்தக் கோளாறால் தங்கள் காதலை பராமரிக்கத் தெரிவதில்லை.[3][4]

காரணங்கள்[தொகு]

இருமுனையப் பிறழ்வுக்கான காரணமானது ஆளுக்காள் வேறுபடுகின்றது. இந்த இருமுனையப் பிறழ்வுக்கு அநேகமாகக் குறிப்பிடத்தக்க மரபியல் பங்களிப்பும் சூழல் தாக்கமும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

சிகிச்சை[தொகு]

இருமுனையப் பிறழ்வில் ஒளி சிகிச்சை ஓரு முகனையான வழியாகும்.

பிற உளநோய்களைப் போலவே இருமுனையப் பிறழ்வும் மருந்துகள் மூலமாகவும் பிற சிகிச்சை முறைகள் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். இவை ஒவ்வொருவருக்கும் அவரது நோய்த்தன்மை மற்றும் தீவிரம் பொறுத்து மாறுபடும். தங்களால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று மருந்தை நிறுத்தினால் மீளவும் இந்நோய்க்கு ஆளாவது நிச்சயம். எனவே இந்நோயுடன் வாழ்தல் கடினமாயினும் நோயாளியும் அவரைச் சார்ந்தவர்களும் நோய்த்தன்மை குறித்து முழுமையாக அறிந்து கொண்டால் எளிதாகும். சில நேரங்களில் நோயாளியின் விருப்பத்திற்கு எதிராக மருந்து கொடுக்க வேண்டி வரலாம். மேலும் நோய்த்தன்மையை ஒட்டி சிலர் தற்கொலைக்கும் முயல்வர். இருப்பினும் இந்த நோயைக் குறித்து முழுவதுமாக விளக்குவது உதவுகிறது; சில முறைகள் இந்த நோயை எதிர்கொண்டவர்கள் மெதுவாக தங்கள் நோய்நிலையை உணர்ந்து சிகிச்சைக்கு ஒத்துழைப்பார்கள்.

இருமுனைப் பிறழ்வு சில மருந்துகள் அல்லது பானங்களால் மோசமடையலாம்:

  • காஃபீன் உள்ள தேநீர், காப்பி போன்றவை உணர்வுதூண்டிகள்; உறக்கத்தைக் கெடுப்பதால் இவை இந்நோயுள்ளவர்களுக்கு சிக்கலைத் தரும்.
  • மது அருந்துதல் உறக்கத்தின் ஆழத்தையும் நேரத்தையும் பாதிக்கிறது; மேலும் உளச்சோர்வை உண்டாகும். பழக்கத்திற்கும் அடிகோலும்.
  • சிலநேரங்களில் கஞ்சா எடுத்துக் கொள்ளலாம்; ஆனால் பித்து பிடித்த நிலையில் யாரேனும் தனக்கு கெடுதல் விளைவிப்பார்கள் என்ற பயம் உண்டாகக்கூடிய நிலையில் செயலின்றி இருப்பதை மனச்சோர்வாக புரிந்து கொள்ளும் அபாயம் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமுனையப்_பிறழ்வு&oldid=3679588" இலிருந்து மீள்விக்கப்பட்டது