ஆனந்தேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனந்தேசுவரர் கோயில் (Anantheshwara Temple) என்பது கேரளத்தின், காசர்கோடு மாவட்டதில் மஞ்சேஸ்வரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயில் ஆகும். இருந்த கோயிலானது காசர்கோடு நகரில் இருந்து 48 கி.மீ. தொலைவில், கர்நாடக மாநில எல்லைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தக் கோயிலை நிறுவியவர் கௌட பிராமணப் பிரிவைச் சேர்ந்த ரங்கசர்மா என்று கூறப்படுகிறது.

வரலாறு[தொகு]

கோவாவின் குகஸ்தலியில் சங்கமாலா காட்டில் சுயம்புவாக தோன்றிய இந்த ஆனந்தேசுவரரை ரங்க சர்மா என்பவர் கண்டெடுத்ததாக கருதப்படுகிறது. இந்த சுயம்பு மூர்த்தியே கருவறையில் உள்ளவர் எனப்படுகிறது. இக்கோயிலானது பரந்த தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. செப்புத் தகடுகள் வேய்ந்த கூரை, சுருள் வடிவ மரச்சுவர்கள் அனைத்தும் மலபார் ரகம் ஆகும்.

பல பழங்கால கோயில்களைப் போலவே இந்த கோயிலும் மனிர்களாலும், இயற்கையாலும் அழிவுக்ககு ஆளாகியது. 1677 ஆம் ஆண்டில், ஏற்பட்ட ஒரு சூறாவளியால் கோயிலின் சில பகுதிகளை அழிவுற்றது. இக்கோயில் 1755 ஆம் ஆண்டில் கண்ணூரின் ஆட்சியாளரான முகம்மது அலியால் கொள்ளையடிக்கப்பட்டது. சிறிது காலத்திலேயே மராட்டிய கடற்கொள்ளையனான அங்கிராவாலும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கோயில் கடைசியாக கி.பி. 1799 - 1804 காலக்கட்டதில் புதுப்பிக்கப்பட்டது.[1] காசி மத் சமஸ்தானத்தின் அப்போதைய பீட்டாதிபதியான எச். எச். ஸ்ரீமத் விபுதேந்திர தீர்த்த சுவாமிகள் கோயிலை மறுநிர்மானம் செய்வதற்கும், புதிதாக பத்ர நரசிம்மரை நிறுவுவதற்கும் முன்முயற்சி எடுத்தார்.

கோயில் அமைப்பு[தொகு]

கருவறை கருவறை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்றை பக்தர்களால் காண இயலும். மற்றொன்று பலிபீடத்தின் (சிம்ஹாசனா) பின்னால் மறைந்திருக்கிறது.

கோவிலின் முதன்மைத் தெய்வம் ஆனந்தேசுவரர் எனப்படும் சிவன். இவர் சுயம்புலிங்கமாவார். மேலும் இக்கோயிலில் நாகரூபி சுப்பிரமணியரின் இரண்டு சிலைகள் உள்ளன. ஒன்று பழமையானது இன்னொன்று அண்மையில் நிறுவப்பட்டது. மேலும் இங்கு பத்ரநரசிம்மர் மையத்தில் நின்றிருக்க ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் உடன் உள்ளனர். இதுமட்டுமல்லாது விட்டலர், வேதவயாசர், லக்ஷ்மிநரசிம்மர், கேசவார், கிருஷ்ணா, கரலனரசிம்மர் போன்றோரின் சிலைகளும் உள்ளன. உட்சவ நரசிம்மரின் உட்சவமூர்த்தி உட்பட பல சிலைகள் ஓரளவு காணப்படுகின்றன. இவை வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து[தொகு]

மஞ்சேஸ்வரம் ஊரானது மங்களூருக்கு தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவில் கொச்சின் - மங்களூர் தொடருந்து பாதையில் அமைந்துள்ளது. இந்த கோயில் தொடருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை எண் 66 இல் மங்களூருக்கு தெற்கே சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் மங்களூர் வானூர்தி நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.manjeshwar.org/temple/ கோயில் வலைதளம் 2020 ஆகத்து 1 அன்று பார்க்கபட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தேசுவரர்_கோயில்&oldid=3621172" இலிருந்து மீள்விக்கப்பட்டது