அலை-துகள் இருமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் அலை-துகள் இருமை என்பது, எல்லாப் பொருள்களும் அலை போன்ற இயல்புகளையும், துகளை ஒத்த இயல்புகளையும் ஒருங்கே கொண்டுள்ளன என்னும் கருத்துரு ஆகும். குவாண்டம் பொறிமுறையின் மையக் கருத்துருவான இது, அலை, துகள் என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.
இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, ஒளி, பொருள் என்பன தொடர்பாக 1600 களில், கிறிஸ்டியன் ஹூய்கென், ஐசாக் நியூட்டன் ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. அல்பர்ட் ஐன்ஸ்டீன், லூயிஸ் புரோக்லீ ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால அறிவியல் கொள்கைகள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.