விளாப்பாக்கம் குடைவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளாப்பாக்கம் குடைவரை

விளாப்பாக்கம் குடைவரை என்பது, இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டத்தில், விளாப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள குடைவரை ஆகும். அங்குள்ள ஒரு குன்றுத்தொடரில் இக்குடைவரை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பான்மலை என அழைக்கப்படும் இம்மலை முற்காலத்தில் பெரிய திருப்பாமலை என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்குடைவரையின் மண்டபம் மிகவும் பெரியது. மண்டபத்தில் இரண்டு வரிசைகளில் தூண்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் ஆறு முழுத்தூண்கள் உள்ளன. சுவரோடு ஒட்டியபடி அரைத்தூண்களும் உள்ளன. தூண்களில் சதுரம், எண்கோணப் பட்டைகள் போன்ற பகுதிகள் எதுவும் காணப்படவில்லை. போதிகைகளும் எளிமையானவையாகவே காணப்படுகின்றன. இது முழுமையாகச் செதுக்கி முடிக்கப்படாத குடைவரையாகவே காணப்படுகின்றது. இது மகேந்திர பல்லவ மன்னன் இறுதிக் காலத்தில் தொடங்கப்பட்டு முழுதும் நிறைவேறாமல் பணி எனக் கருதப்படுகிறது.[1]

பிற்காலத்தில் இந்தக் குடைவரையைச் சமண முனிவர்கள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. குடைவரையில் முகப்புப் பகுதிகளில், சமணச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இவ்வூரில் உள்ள வேறு கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் 9 ஆம் நூற்றாண்டில் இக்குடைவரையில் சமணர்கள் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 51-52
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 53
"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாப்பாக்கம்_குடைவரை&oldid=3391370" இலிருந்து மீள்விக்கப்பட்டது