வள்ளைப்பாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகளிர் நெல் முதலான தானியங்களைக் குற்றுவர். அப்போது அவர்களது வளையல்கள் குலுங்கும். ஒருவர் இரு கைகளும் மாறி மாறி வர உலக்கைமூச்சு போடும்போதும், இருவர் சேர்ந்து, இருவரது நான்கு கைகளாலும் உலக்கைமூச்சுப் போடும்போதும் வளையல் பண்ணிசை பிறக்கும். இதற்கு வள்ளை என்று பெயர். இப்படிக் குற்றும்போது பாடலும் பாடுவர். இதற்கு வள்ளைப்பாட்டு என்று பெயர்.

கலித்தொகை வள்ளைப்பாட்டு[தொகு]

தினையைச் சந்தன மர உரலில் போட்டு யானைத் தந்த உலக்கையால் குற்றும் மகளிர் பாடிக்கொண்டே குற்றுகின்றனர். குற்றுவோர் தலைவியும் தோழியும். திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்தும் தலைவன் இயல்பினைப் பழித்துத் தலைவி பாடுகிறாள். அந்த இயல்பில் பொருள் இருப்பதாகத் தோழி பாடுகிறாள். இருவரும் மாறி மாறிப் பாடுகின்றனர். ஓர் எடுத்துக்காட்டு

தலைவி இயற்பழித்துப் பாடியது

... தண்தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே
பெண்டிர் நலம் வௌவித் தண் சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை

தோழி இயற்படப் பாடியது

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து நெடுஞ்சினை
தீங்கண் கரும்பின் கழை வாங்கும், 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை. [1]

சிலப்பதிகார வள்ளைப்பாட்டு[தொகு]

தெய்வமாகிய கண்ணகியை வள்ளைப்பாட்டுப் பாடி வாழ்த்தும் மகளிர் இவ்வாறு வாழ்த்துகின்றனர்.

பாடல் சால் முத்தம் பவள உலக்கையால்
மாட மதுரை மகளிர் குறுவரே
வானவர்கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்

[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. கலித்தொகை 40
  2. சிலப்பதிகாரம் 29 வாழ்த்துக்காதை வள்ளைப்பாட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளைப்பாட்டு&oldid=3269959" இலிருந்து மீள்விக்கப்பட்டது