லூசியோ கோஸ்தா
| லூசியோ கோஸ்தா Lúcio Costa | |
|---|---|
| தனிப்பட்ட விவரங்கள் | |
| நாட்டினம் | பிரேசிலியர் |
| பிறப்பு | லூசியோ மார்சல் ஃபெரெய்ரா ரிபெய்ரோ லிமா கோஸ்தா 27 பெப்ரவரி 1902 தூலோன், பிரான்ஸ் |
| இறப்பு | 13 சூன் 1998 (அகவை 96) ரியோ டி ஜெனெரொ, பிரேசில் |
| பணி | |
| கட்டிடங்கள் | குஸ்தாவோ கப்பனேமா மாளிகை |
| திட்டங்கள் | பிரசிலியாவுக்கான தொடக்கத் திட்டம் |
லூசியோ மார்சல் ஃபெரெய்ரா ரிபெய்ரோ லிமா கோஸ்தா (Lúcio Marçal Ferreira Ribeiro Lima Costa, 27 பெப்ரவரி 1902 – 13 யூன் 1998) ஒரு பிரேசில் நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞரும், நகர்ப்புற வடிவமைப்பாளரும் ஆவார். பிரசிலியா நகரின் வடிவமைப்புக்காக இவர் பெரிதும் அறியப்பட்டவர்.[1]
வரலாறு
[தொகு]கோஸ்தா பிரான்சிலுள்ள துலோ (Toulon) என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் பிரேசிலியர்கள். இவரின் தந்தை ஜோக்கிம் ரிபெய்ரோ ட கோஸ்தா பாகியாவின் சல்வடோரைச் சேர்ந்த ஒரு கப்பல் பொறியாளர். தாயார் அலினா ஃபெரெய்ரா ட கோஸ்தா மனோஸ் என்னும் இடத்தைச் சேர்ந்தவர்.[2] இவர் இங்கிலாந்தின் நியூகாசில் என்னும் இடத்தில் உள்ள ரோயல் கிரமர் பள்ளியிலும், பின்னர் சுவிட்சர்லாந்தின் மொன்ட்ரேயில் உள்ள கொலீஜ் நசனலிலும் கல்வி பயின்றார். ரியோ டி ஜெனரோவில் உள்ள தேசிய கவின்கலைக் கல்லூரியில் (Escola Nacional de Belas Artes) கட்டிடக்கலை பயின்ற கோஸ்தா, 1924ல் கட்டிடக்கலைஞர் பட்டம் பெற்று வெளியேறினார். தொடக்கத்தில் பல்வேறு பாணிகளையும் சேர்ந்த கட்டிடங்களை வடிவமைத்த கோஸ்தா, 1929க்குப் பின்னர் நவீனவியக் கோட்பாட்டைக் கைக்கொள்ளலானார். 1930ல் ரசியாவில் பிறந்த பிரேசிலியரான கிரகரி வார்சவ்சிக் என்பவருடன் இணைந்து நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதே நேரம், தான் படித்த தேசிய கவின்கலைக் கல்லூரியில் இயக்குனராகவும் பணிபுரிந்தார். மாணவர்கள் இவரிடம் புதிய பாணியைக் கற்க ஆர்வம் கொண்டிருந்தபோதும், இவருடைய கடுமையான நிர்வாகம் காரணமாக மாணவர்களிடமிருந்தும், ஆசிரியர்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால், ஒராண்டின் பின்னர் பதவி விலகவேண்டிய நிலைமை ஏற்பட்டது.