மோகவன கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகவனகோட்டம்

மோகவன கோட்டம் அல்லது வீரபத்திரர் கோயில் என்பது இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான விசுவமடு கிராமத்தில், விசுவமடு குளத்தின் கிழக்குக் கரையில், வனப்பகுதியை எல்லையாகக் கொண்டு அமைந்துள்ளது ஒரு கோயில் ஆகும். [1]

மோகவன கோட்டம் என்று ஒரு பழைமையான பெயரும் உள்ள இக்கோயில் கிராம மக்களால் வீரபத்திரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் சிவன், அம்மன், முருகன், நாகதம்பிரான், அனுமன், என்று பதினொரு தெய்வங்கள் ஒரே வளாகத்தில் இருந்து அருள்கின்றனர். இந்தக் கோயிலை புதுப்பித்த பண்டார வன்னியனுக்கு என்று தனியான சந்நிதி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. பண்டார வன்னியன் தெய்வமாக போற்றப்பட்டு பூசை செய்யப்படும் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் எனப்படுகிறது.

இது மிகவும் பழைமை வாய்ந்த வரலாற்று தொன்மை மிக்க ஆலயம் என்று மக்கள் குறிப்பிடுகிறார்கள். பண்டார வன்னியன் குருவிச்சிநாச்சி காதல் கதையுடன் சம்பந்தம் உள்ள கோயில் என்று சிலர் கூறுகின்றனர். குருவிச்சிநாச்சி என்பவள் வன்னிப் பகுதியை ஆண்ட கடைசி மன்னன் பண்டார வன்னியனின் காதலி. தன் காதல் கைகூட பண்டார வன்னியன் வழிபட்ட தலம் என்றும், காதல் கைகூடியதால் பண்டார வன்னியன் கோயிலை புனர்நிர்மாணம் செய்வித்தான் என்றும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன.

இந்தக் கோயிலைப் பற்றி அறிந்து யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மலையகம் என்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வழிபட்டு செல்கின்றனர். காதலர்கள் இருவரும் சேர்ந்து இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் காதல் விரைவில் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. அதனால் தூர இடங்களில் இருந்தும் சில காதலர்கள் வந்து செல்கின்றனர்.

இந்தக் கோயில் இயற்கை எழில் கொஞ்சும் வன எல்லையில் அமைந்துள்ளது. உயர்ந்து வளர்ந்த மரங்கள். அமைதியான சூழல். குளிர்மையான காற்று. பல தெய்வங்களுக்கு என்று சேர்ந்தும் தனித்தும் என்று பல சந்நிதிகள் என்று அமைந்து உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மோகவன கோட்டம்". 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகவன_கோட்டம்&oldid=3806181" இலிருந்து மீள்விக்கப்பட்டது