மகாமாயா
| மகாமாயா | |
|---|---|
| இயக்கம் | டி. ஆர். ரகுநாத் |
| தயாரிப்பு | எம். சோமசுந்தரம் & எஸ். கே. மொஹிதீன் |
| கதை | இளங்கோவன் |
| திரைக்கதை | இளங்கோவன் |
| இசை | எஸ். வி. வெங்கட்ராமன், குன்னக்குடி வெங்கடராம ஐயர் |
| நடிப்பு | பி. யு. சின்னப்பா பி. கண்ணாம்பா எம். ஜி. சக்கரபாணி என். எஸ். கிருஷ்ணன் டி. ஏ. மதுரம் எம். எஸ். சரோஜா இன்னும் பலர் |
| ஒளிப்பதிவு | மார்க்கஸ் பார்ட்லி |
| படத்தொகுப்பு | ஏ. காசிலிங்கம் |
| கலையகம் | ஜூபிடர் பிக்சர்ஸ் |
| வெளியீடு | அக்டோபர் 16, 1944 (இந்தியா) --> |
| ஓட்டம் | 11,000 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மகாமாயா என்பது 1944-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் 1944-ஆம் ஆண்டு வெளியானது.[1]
கதைச் சுருக்கம்
[தொகு]காந்தார நாட்டின் இளவரசியான மகாமாயாவும் (பி. கண்ணாம்பா), ஒரு அயல் நாட்டின் இளவரசனான விக்ரமசிம்மனும் (பி. யு. சின்னப்பா) ஒரே குருவின் மாணவர்களாக அவரின் ஆசிரமத்தில் தங்கியிருக்கின்றனர். ஒரு நாள் மகாமாயா அப்பாவித்தனமாக விக்ரமனின் வாளுக்கு மாலை ஒன்றைச் சூட்டி விடுகிறாள். அதன் பின் விளைவு அவளுக்குத் தெரியவில்லை. ஒரு வீரனின் வாளுக்கு ஒரு பெண் மாலை சூட்டினால் அவள் அவனையே திருமணம் செய்ததாக அப்போது வழக்கம் இருந்தது. அவள் தன் வாளுக்கு மாலை சூட்டியதை விக்ரம் அறிவான்.
இருவரும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பியதும் வேறு வேறு வரன்களை மணந்து கொள்ளுகின்றனர். பின்னர் ஒரு சமயம் விக்ரமன் மகாமாயாவைச் சந்திக்கிறான். அச்சமயம் அவள் தனது வாளுக்கு மாலை சூட்டியதை நினைவூட்டி அவள் தனக்கே சொந்தமானவள் என விக்ரமன் உரிமை கொண்டாடுகிறான். ஆனால் மகாமாயா அதற்குச் சம்மதிக்கவில்லை. எனவே விக்ரமன் அவளைக் கடத்திச் செல்கிறான். மகாமாயா அவனிடமிருந்து தப்பி தன் நாட்டுக்குச் செல்கிறாள்.
அங்கே அவளது கணவன் அவளை ஏற்க மறுக்கிறான். எனவே, மகாமாயா தன் கற்பை நிலை நாட்ட தன் குழந்தையையும் கொன்று தானும் உயிரை மாய்த்துக் கொள்ளுகிறாள்.[1]
நடிகர்கள்
[தொகு]| நடிகர் | பாத்திரம் |
|---|---|
| பி. யு. சின்னப்பா | விக்கிரமசிம்மன் |
| பி. கண்ணாம்பா | மகாமாயா |
| என். எஸ். கிருஷ்ணன் | சிங்கன் |
| டி. ஏ. மதுரம் | மீரா |
| ஆர். பாலசுப்பிரமணியம் | அமரசிம்மன் |
| எம். எஸ். சரோஜா | சந்திரலேகா |
| டி. பாலசுப்பிரமணியம் | நந்தகுப்தன் |
| எம். கே. மீனலோசனி | மனோரமா தேவி |
| எம். ஜி. சக்ரபாணி | நீலன் |
| எஸ். வி. சகஸ்ரநாமம் | ஜெயபாலன் |
| டி. ஆர். பி. ராவ் | மகிபாலன் |
| டி. டி. குசலாம்பாள் | பாலா |
நடனக் குழுவினர்: கே. வரலட்சுமி, டி. ராஜ்பாலா, வி. ராஜேசுவரி, கே. ராஜராஜேசுவரி, கே. எஸ். சரோஜினி, எம். எஸ். சாந்தா[2]
தயாரிப்புக் குழு
[தொகு]- தயாரிப்பாளர்கள்: எம். சோமசுந்தரம், எஸ். கே. மொகிதீன்
- இயக்குநர்: டி. ஆர். ரகுநாத்
- திரைக்கதை வசனம்: இளங்கோவன்
- ஒளிப்பதிவு: மார்க்கஸ் பார்ட்லி
- படப்பிடிப்பு : ஜித்தேன் பானர்ஜி
- படத்தொகுப்பு: ஏ. காசிலிங்கம்
- ஒலிப்பதிவு: தீன்ஷா கே. தெஹ்ராணி
- நடனம்: எம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பண்டிட் போலோநாத் சர்மா
- கலை: எஃப். நாகூர்
- கலையகம்: நியூடோன்[1]
- பாடல்கள்: டி. கே. சுந்தர வாத்தியார், கம்பதாசன்
- இசையமைப்பு: எஸ். வி. வெங்கட்ராமையர்
தயாரிப்பு விபரம்
[தொகு]கதையை எழுதி முடிக்க இளங்கோவனுக்கு சுமார் ஓராண்டு காலம் பிடித்தது. அப்போதும் அவரால் கதையை எப்படி முடிப்பதென்று தெரியவில்லை. மூன்று வித முடிவுகளை எழுதினார். தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார். மூன்று விதமான முடிவுகளும் படமாக்கப்பட்டன. எனினும் இறுதி முடிவு படத்தில் உள்ளபடி சேர்க்கப்பட்டது. அப்போது இரண்டாவது உலகப்போர் காலமாதலால் திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்துக்கு மேல் இருக்கலாகாது என்ற சட்டம் காரணமாக இப்படத்தின் நீளம் 11,000 அடியாக இருந்தது.[1]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எஸ். வி. வெங்கட்ராமன், குன்னக்குடி வெங்கடராம ஐயர் ஆகிய இருவரும் இசையமைத்தனர். பாடல்களை கம்பதாசனும், டி. கே. சுந்தர வாத்தியாரும் எழுதினார்கள். ஒன்பது பாடல்கள் இருந்தபோதிலும்,[2] பி. யு. சின்னப்பா பாடிய சிலையே நீ என்னிடம் என்ற பாடல் மட்டும் பிரபலமானது.[1]
| பாடல் | பாடியவர் | இயற்றியவர் |
|---|---|---|
| மகாமாயா ஜெகந்நாகய மலைமாது | பி. கண்ணாம்பா | டி. கே. சுந்தர வாத்தியார் |
| சிலையே நீ என்னிடம் பேசவல்லாயோ | பி. யு. சின்னப்பா | கம்பதாசன் |
| சின்னஞ்சிறிய சிங்காரக் கிளியே | பி. கண்ணாம்பா | கம்பதாசன் |
| ஓம் சிவாய நம ஓம் | நாடகமேடைப் பாடல் | கம்பதாசன் |
| விருந்திடுவோமே! புள்ளிமான் முயல் | வில்லவர்கள் | நடனப்பாடல் |
| மகாமாயா வரும் நேரமிதே | பி. யு. சின்னப்பா | கம்பதாசன் |
| கிக்கிக்கீ குக்குக்கூ | எம். எஸ். சரோஜா | டி. கே. சுந்தர வாத்தியார் |
| வாச்சாரே எனக்கு மாப்பிள்ளை | என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் | - |
| மாயா மதநோயால் மனம் வருந்துரேனடி | பி. யு. சின்னப்பா | டி. கே. சுந்தர வாத்தியார் |
வசூல்
[தொகு]பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா ஆகியோரின் சிறந்த நடிப்பாலும், உயர்ந்த தயாரிப்பினாலும் விமர்சகர்களிடையே சிறந்த படம் என சிலாகிக்கப்பட்டது. ஆயினும் அந்தக் கால இரசிகர்கள் படத்தின் கதையில் ஒரு அரசன் மணமான பெண்ணின் மேல் விருப்பம் கொள்வதை விரும்பாததால் படம் தோல்வியைத் தழுவியது.[1]