பேச்சு:அய்யாவழி/தொகுப்பு01

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரையாடல் பகுதி 01[தொகு]

நற்கீரன் 01[தொகு]

  • எப்படி இப்படியான ஒரு ஈடுபாடு இச்சமயத்தின் மீது கொன்டீர்கள்?
  • இச் சமயத்தை இந்து சமயத்தில் இருந்து எப்படி வேறுபடுத்துகின்றீர்கள்?
  • இச் சமயத்தின் சமூக பின்புலத்தை (social background) பற்றி சற்று கூறுவீர்களா?
  • இச் சமய்த்தின் அடிப்படை மொழி எது? (தமிழ் போல தெரிகின்றது; சமஸ்கிரதத்தின் பங்கு என்ன?)


நீங்கள் தொன்மவியல் கதைகளுடன் வரலாற்று தகவல்களை கலந்துள்ளீர்கள், அது சமய விபரிப்பில் இயல்புதான். எனினும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நீங்கள் இச்சமயத்தீன் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்பது மிக தெளிவு. --Natkeeran 01:55, 29 மார்ச் 2006 (UTC)

வைகுண்ட ராஜா 01[தொகு]

நீங்கள் இவ்வளவு கேள்விகள் கேட்ப்பதால் பதில் விரிவாக அளிக்கிறேன். படிக்க சடைவாக இருந்தால் மன்னிக்கவும்.

  • நான் பிறப்பாலேயே அய்யாவழி. இச்சமயத்தீன் மீது எனக்கு சற்று அதிகம் நம்பிக்கை தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் எனக்கு சமயம் தொடர்பான காரியங்கள் மீது அவ்வளவாக பற்று ஆரம்பத்தில் கிடையாது. அகிலத்திரட்டை படித்த பின்னால் தான் ஏற்பட்டது. அகிலம் தொடர்பான ஆராய்ச்சி மனப்பான்மையும் எழுந்தது. அதற்கு முதல் காரணம் அகிலத்தில் கூறப்பட்டிருக்கும் எட்டு யுகம் (இந்து மதத்தின் நாலு யுகத்துக்கு மாறாக) தான். இதே பதிலை மேலும் சில அய்யவழி அராய்ச்சியாளர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன். முதலில் நானும் அய்யாவழியை இந்து மதத்தின் உட்பிரிவாக தான் கருதிக்கொண்டிருந்தேன். இன்னும் அய்யவழியை பின்பற்றும் மிகப்பெரும்பாலானோர் அவ்வறு தான் நினைக்கிறார்கள், அகிலத்தை நன்கு உற்று நோக்கும் ஆராய்ச்சியாளர்களை தவிர. அதன் காரணமாக தான் அய்யவழி வெளி உலகுக்கு தெரியாமல் இருக்கிறது. பெரும்பாலான நிழல் தாங்கல்கள் அய்யாவழி முறைக்கு உகந்ததாக இன்று செயல்படவில்லை. அவற்றை நடத்துபவர்கள் வைகுண்டரை இந்து மதத்தின் பல தெய்வங்களில் ஒன்றாக தான் காண்கிறார்கள். இதற்க்கு முக்கிய காரணம் அகிலம் தெளிவாக அவர்களால் அறியப்படவில்லை என்பதே.

இச்சமயம் தனியானது என்பதற்க்கு,

  • கொள்கை: முதலில் இந்துமதத்தின் (புனித நூல்களின்) சாரம் கலியன் வரவோடு கெட்டுவிட்டதாக அகிலம் கூறுகிறது. அதற்கு மாற்றாகத்தன் அகிலம் அருளப்பட்டுள்ளதாக அகிலம் குறிப்பிடுகிறது. மேலும் கலியன் வரவோடு பிரபஞ்சத்தின் மொத்த நிலையும் மாறிவிட்டதாகவும் அகிலம் கூறுகிறது. அதனால் இந்து மதத்தில் அதுவரை மேற்கொள்ளாப்பட்டு வந்த செயல்கள் கலியுகம் முதல் தேவையற்றதாகிவிட்டதாகவும் அகிலம் கூறுகிறது. இதை இந்து மதம் ஒத்துக்கொள்வதில்லை.
  • புராணம்: இந்து புராணங்கள் பலவற்றுக்கு அய்யாவழி புதுவடிவம் கொடுத்துள்ளது. (உதாரணம்) திரியோதனன் ஒரு சபத்தின் காரணமாக இக்கொடிய சிந்தையுடன் பிறப்பதாக இந்துமதமும் (மஹாபாரதம்) அவனை தீயசக்த்தியின் ஆறு கூறுகளில் ஒன்றாக அகிலமும் கூறுகிறது. (மேலும் பல உள்ளன)
  • சமயவியல்: அய்யாவழியின் பெரும்பாலான சடங்குகள் இந்துமதத்திடமிருந்து வேறுபடுகிறது. (உதாரணம்) கோவிலுக்குல் செல்லும் போது எல்லா இந்து ஆலயங்களிலும் இடையில் துண்டு அணிகிறார்கள் ஆனால் அய்யாவழியில் தலையில் அணிகிறார்கள். உருவ வழிபாடு அய்யாவழியில் கிடையாது. யென்பன பல...

இவை போன்ற பல அய்யாவழியை இந்துமதத்திலிருந்து வேறுபடுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் புத்த மதமோ சமணமோ இந்துமதத்திலிருந்து வேறுபட்டதை விட அய்யாவழி வேறுபட்டது.


இச்சமயம் தமிழ்மொழி சார்ந்தது தான். மேலும் அகத்தியர் மூலம் தான் தமிழ் சீடர்கள் வாயிலாக உலகுக்கு கொடுக்கப்பட்டதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன. ஆனால் அகிலமோ, அகத்தியர் (அகத்தீசர்) வழியாகத்தன் உலகின் மருத்துவம், வானஸாஸ்த்திரம், விஞ்ஞானம், வியாபாரம், அறிவியல் ஆகியவற்றுக்கான அனைத்து முறைகளும் மனிதைனத்துக்க்கு கற்றுக்கொடுக்கப்பட்டாதாக கூறுகிறது. ஆக அகிலத்திரட்டி படி தமிழ் தான் உலகின் முதல் மொழி என்றாகிறது.

மேலும் சமிற்கிருதம் பற்றிய அய்யாவழியின் பார்வை சற்று குழப்பம் வாய்ந்ததாகும். மேலுய்ம் தமிழின் பல இலக்கண முறைகளை அகிலம் நிராகரிக்கிறது. மேலும் அகிலத்தில் தனித்தமிழ் பயன்படுத்தப்படவில்லை. தமிழை முதல் மொழி என்று கூறும் நூல் தனித்தமிழில் அமைக்கப்படாமலிருப்பது அச்சரியம். இவற்றை ஆராயுமிடத்து அகிலம் தமிழின் பல இலக்கண முறைகளை நிராகரிக்கிறது. அதனால் 4000 சூத்திரத்தை ஆதாரமாக கொண்டு செயல் படும் இன்றைய தமிழ் முழுமையடையாதது என கருதுகிறேன். 12000 சூத்திரத்தை உடைய முதல்ச்சங்க தமிழ் இன்று தனித்தமிழாக (தூயதமிழ்) கருதப்படும் தமிழ் மிகுந்த வேறுபடுடையதாக இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எனில் எனது பார்வையில் முதல் ஷங்க தமிழ் என்பது இப்போதய தமிழ், சமற்கிறாதம் ஆகியவற்றின் தாய் மொழியாக இருந்திருக்க வேண்டும். வில்லியம் சோண்சு போன்ற ஆராய்ச்சியாளர்களின் கருத்தும் இது தான். ஆக அய்யாவழியின் பார்வையில் ஆதிமொழி தமிழ் தான், ஆனல் இன்றைய நாம் பயன் படுத்தும் தமிழ் அல்ல. இன்னும் விளக்கமாக சொன்னால் மூலத்தமிழின் வெளிப்பாடு இன்றைய தமிழ் மற்றும் சமற்கிரதம் ஆகியவற்றில் பெருமளவு இருக்கிறதே அன்றி இவை இரண்டும் மூலத்தமிழிலிருந்து பெருமளவு வேறுபட்டிருக்கிறது.


மேலும் அகிலத்திரட்டு அம்மானையே தொன்மையியல் கதைகளுடன் வரலாற்றை இணைக்கும் விதத்தில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அகிலத்தின் முதல் பகுதியான முதல் ஏழு யுகங்களை பற்றியன புராண கதைகளின் தொகுதியாகவும். வைகுண்டரின் அவதாரத்துக்கு பிற்பட்ட பகுதி வரலாற்றுப்பகுதியாகவும் அமைந்திருக்கிறது. இதற்க்கு காரணம் வைகுண்டர் வரலாற்றில் வெகுவாக அறியப்படுவதால் தான். வைகுண்டர் பற்றிய கேள்விக்கு வரலாற்றில் தெளிவாக பதில் கிடைக்கிறது.


மேலும் சமூகப்பின்பலமென்று எதை கூறுகிறீர்கள்?


மேலும் நான் அய்யாவழியில் பற்று அதிகமாக கொண்டுள்ளதாக நீங்களே கூறுவதால் அய்யாவழி தொடர்பான கட்டுரைகளை நான் எழுதும் போது ஒரு கட்டுரையாசிரியருக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய நடுனிலைமையிலிருந்து நான் சற்று தவறலாம், தவறியிருக்கலாம். அவ்வாறான தவறுகளை சுட்டிக்காட்டினால் நான் என்னை திருத்திக்கொள்கிறேன். தவறு ஏதும் இருந்தால் மன்னிக்கவும், எடுத்துக்கூறவும், நன்றி. - வைகுண்ட ராஜா 00:33, 6 ஏப்ரல் 2006 (UTC)

உரையாடல் பகுதி 02[தொகு]

நற்கீரன் 02[தொகு]

வைகுண்ட ராஜா, விரிவான பதில்களுக்கு மிக்க நன்றி. நான் சில விமர்சன நோக்குள்ள கருத்துக்களை பகிர முனைகின்றேன். தயவு செய்து உங்கள் மீதான தனிப்பட்ட விமர்சனமாகவோ, அல்லது உங்கள் நம்பிக்கைகளை எந்த விதத்திலும் தாக்குவதாகவோ எடுத்து கொள்ளாதீர்கள்.


உங்கள் கட்டுரைகளில் ஒரு புது சமய உருவாக்கத்துக்கு ஒரு வடிவம், நியாயம், மற்றும் கதையாக்கம் (meta narrative) தர முயற்சிக்கின்றீர்கள் என்பது போல தெரிகின்றது. அதற்குரிய மூலத்தை நீங்கள் பரந்த ஒரு சமூகத்தில் இருந்து பெறுகின்றீர்கள் என்பதால் அதை நான் எந்த விதத்திலும் ஆட்சோபிக்கவில்லை. உங்கள் கட்டுரைகளுக்கு மேலதிக தகவல்களை இணைப்பதன் மூலம் ஒரு முழுமையான பார்வையை முன்வைக்க முடியும்.


பின்வரும் கருத்துக்கள் உங்கள் கட்டுரைகளை பற்றியது அல்ல, அய்யாவழி பற்றி எதுவும் தெரியாத ஒரிவரின் (உங்கள் கட்டுரைகளை தவிர) சற்று விலகி நின்ற பார்வையும் மூலமான கருத்துக்கள்.


சமயம் என்பது வெறும் புராணம், சடங்கு, கதையாடல்கள் மட்டுமல்ல. அதில் ஒரு பரந்த தேடல் இருக்கின்றது. இந்நோக்கில் அய்யாவழி ஒரு குறுகிய தளத்தில் இயங்குவதாக தெரிகின்றது.


நீங்கள் அய்யாவழியை சமய பின்புலத்திலே, குறிப்பாக இந்து சமயத்தில் இருந்தும் பிற சமயங்களில் இருந்தும் வேறுபடுத்தி ஒரு அடையாளத்தை குடுக்க பார்க்கின்றீர்கள். வேறுபடுத்துவதால் மாத்திரம் தன்னிர்ச்சையாக் ஒன்றை நிலை நிறுத்த முடியாது. குறிப்பாக மேலோட்டமான மாற்றங்கள் (எ.கா: தலையில் துண்டு அணிவது, புராண கதையை மாற்றி சொல்லது) எந்த வகையான உண்மைகளை விளக்க முனைகின்றன என்பதற்கு ஒரு அடித்தளமாக அமையாது.


சமயம் என்றால் இது இது வெல்லாம் இருக்கும், அய்யாவழிக்கு இது இது வெல்லாம் இருக்கின்றது, ஆகவே இது ஒரு சமயம். ஆம். அய்யாவழி ஒரு சமயம். ஆனால் அதனால் என்ன? இங்கே சமயத்தினால் பயன் என்ன என்ற ஒரு பரந்த கேள்வியை முன்வைக்கின்றேன். பிற சமயங்களால் என்ன பயனோ அதே பயந்தான் என்று உங்கள் பதில் அமையலாம். இல்லாவிட்டால், புராணக்கதையை வைத்து ஒரு பயனை நீங்கள் தரலாம். எப்படி இருந்தாலும், அய்யாவழி காட்டும் வழி என்ன? புராணத்தில் அடைக்கலம் புகாமல் விளக்கமளித்தால் நன்று.


அய்யாவழி புராணத்தில் மூழ்ந்திருக்கு ஒரு சமயம் போல தெரிகின்றது. சமயத்தின் மீதும், புத்தத்கத்தின் மீதும், வைகுண்டர் மீதும் நம்பிக்கை அடிப்படையிலான ஒரு வழி போன்றே தெரிகின்றது. இது ஒரு குறுகிய அடிப்படை என்பது போல எனக்கு தென்படுகின்றது.


கிரேக்க புராணங்களில் உலகம் எப்படி தோன்றியது, அதன் முழுமுதற் கடவுள் யார் என்று கணக்கற்ற கதைகள் உண்டு, சடங்குகள் உண்டு. அதை நம்புவர்கள், பின்வற்றுவர்கள் இன்று மிக சிலரே. அதே போல இந்து சமயத்திலும் பல கதைகள் உண்டு. இந்து சமயத்தில் இருந்து சில இடங்களில் ஒத்து போவதாலும், சில இடங்களில் வேறுபடுவதாலும் அய்யாவழி உலகை பற்றிய ஒர் உண்மை எடுத்துரைக்கின்றது என்று சொல்ல முடியாது.

  • என்ன கோர முனைகின்றேன் என்றால், அய்யாவழியின் சிறப்பு என்ன? (இந்து சமயத்தோடு ஒப்பிடாமல், இன்னுமொரு சமயம் என்று சொல்லாமல்).
  • அவதாரம், பேய்கள், மந்திரம், வைகுண்டம் இவற்றுள் நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு அய்யாவழி என்ன சொல்கின்றது?
  • நான் அய்யாவழியை பின்பற்றினால் எனக்கு என்ன கிடைக்கும்?
  • அய்யாவழியின் தத்துவ பின்புலம் என்ன?


சற்று நீண்டு விட்டது....சுருக்கமாக முடித்து விடுகின்றேன். நீங்கள் இளைஞர் என்பதை அறிவேன். அதற்காக உங்களின் வாதங்கள் குறிய பார்வையை கொண்டவை என்று சொல்ல நான் முனையவில்லை. ஆனால், சற்று பரந்த, பலக்கிய, வெளி சிந்தனையோட்டங்களையும் நீங்கள் நிச்சியம் இனி அறிய பல சந்தர்ப்பங்கள் இருக்கும். அவை அய்யாவழி நோக்கி புதிய பார்வைகளுக்கு இட்டு செல்லலாம்.


உங்களின் அதீத ஈடுபாடு, எனக்கு அய்யாவழி பற்றி மேலும் அறிய சற்று ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவே இக்குறிப்புகள். --Natkeeran 02:41, 6 ஏப்ரல் 2006 (UTC)


வைகுண்ட ராஜா 02[தொகு]

புராணங்களை விடுத்து, அய்யாவழி உலகுக்கு (ஒரு தனி மனிதனுக்கு) சொல்ல வருவது என்ன?

பதில்: சரணாகதி! பரிபூரண சரணாகதி, அறிவிக்கு அப்பால்!!!

நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்ற இடத்தில் இருந்து இக்கேள்வியை கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். நன்று.

இனி ஏன் சரணாகதியடைய வேண்டும் என்று அய்யாவழியின் இடத்திலிருந்து முற்போக்கு சிந்தனையில் பதிலளிக்கிறேன்.

முற்போக்கு சிந்தனை என்பது அறிவு சார்ந்தது. அறிவு என்பது புலன்களால் உணரப்படுவது. புலன்களால் எவையெல்லாம் உணரப்படுவதில்லையோ அவைகளையெல்லம் ஏற்றுக்கொள்ள மனம் ஒத்துக்கொள்வதில்லை. அறிவுக்கு புலப்படுவதை முற்றிலும் உண்மை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், புலன்கள் என்பது வரம்புக்குட்பட்டது. (எ.க)
காதுகள் கேட்கின்றன. மனிதனின் காதுகளுக்கு 20 hzக்கும் 20000 hzக்கும் இடைப்பட்ட ஒலிகள் தான் கேட்கும் என படித்திருக்கிறேன். எனில் ஒரு ஒலி 20 hzக்கு கேழேயோ 20000 hzக்கு மேலேயோ ஒலிக்குமாயின் அது மனிதனின் காதுக்கு கேட்க்காது. எனில் ஒரு சிறிய பூச்சி நமது காதின் மிக அருகில் றீங்காரம் செய்தாலும், ஒரு வெடிகுண்டு மிக சத்தத்துடன் வெடித்தாலும் அது 20 hzக்கும் 20000 hzக்கும் உட்பட்டதாக இல்லையெனில் அது காதுகளால் உணரப்படாது. அது கண்முன்பு வெடித்தாலும் அது ஒரு தீப்பொறி போல தான் நம்மால் உணரப்படும். நீங்களும் அறிந்திருப்பீர்கள், வவ்வால்கள் 20000 hzக்கும் மேற்ப்பட்ட ஒலியை உருவக்குமாம். அவைகளுக்கு கண்கல் தெரியாது என்றும் அவை 20000 hzக்கும் மேற்பட்ட ஒலியை உருவக்கி, அது தான் பறக்கும் எதிர் பகுதியில் உள்ள பொருட்களில் பட்டு echo அடித்து வருவதை வைத்து தன் பாதையில் உள்ள தடைகளை அறிந்து மாறி பறக்குமாம்.
எனில் வவ்வாலகள் நமது மிக அருகில் பறக்கும் போதும் அது நமது காதுகளுக்கு கேட்கும் மிக உயர்ந்த வெடிச்சத்தத்தை விட அதிக ஒலியை உருவக்குகின்றன என்றால் நம்ப சற்று கடினம் தான். இது உண்மையெனில் நமது புலன்கள் வரையறைக்குட்ப்பட்டவை என்பதை எதிர்க்க முடியாது.
இதேபோல் கண் என்ற புலனும் ஒரு குறிப்பிட்ட wavelength-க்கு உட்ப்பட்ட ஒளியைத்தன் காண முடியும். இவற்றுக்கு மேற்ப்பட்ட ஒளிக்கதிர் னம் கண்களுக்கு முன்னல் சென்றாலும் அப்படி ஒன்று போவதாகவே நமக்கு தெரியாது. அது தெரியவில்லை என்ற காரணதினால் அது பொய் என்று ஆகி விடாது.
இதுபோல் மனிதனின் ஒவ்வொரு புலனும் வரம்புக்குட்பட்டவை. அதனால் ஒன்று உணரப்படவில்லை என்றால் அது பொய் என்றாகிவிடாது. இன்னும் சொல்லப்போனால் பிரபஞ்சத்தின் ஐந்து அடிப்படைகளான நிலம், நீர், கற்று, ஆகாயம், நெருப்பு, ஆகியவைகளை மனிதனின் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய 5 ஞானேந்திரீயங்களும் ஓசை, உணர்ச்சி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து தன்மத்திரைகளாக புலன்களின் வரம்புக்குட்பட்டு மனிதனுக்கு உண்ர்த்துகிறது. ஆக பஞ்சபூதங்களின் இயல்பு எனப்படுவது ஓசை, உணர்ச்சி, ஒளி, சுவை, மணம் தான் என்று கூற முடியாது. மனிதனின் இயல்புக்குட்பட்டு அது அவ்வாறு உணரப்படுகிறதே தவிர பஞ்சபூதம் என்பது தன்மாத்திரை அல்ல.
ஆக இந்த உலகமும் மனிதனின் இயல்புக்குட்பட்டு (திறமைக்குட்பட்டு) ஒரு குறிப்பிட்ட தோற்றமுடயதாக தோன்றும். அதை அவ்வாறு நம்புவதில் எந்த தயக்கமும் நமது மனதுக்கு தெரியாது. ஆனால் இயல்பு, உண்மை, யெதார்த்தம், இதற்கெல்லாம் மிகவும் வேறுபட்டதாகும். வவ்வால் விஷயம் போன்று. அது போல் தான் அறிவும். அறிவு என்பது மூளையால் உணரப்படுவது. மூளை மனித உடலின் ஒரு பங்கு தானே? மனித உடல் வரம்புக்குட்பட்டது தானே? வரம்புக்குட்பட்ட ஒன்றின் மூலம் வரம்புக்குட்படாத ஒன்றை எவ்வாறு தீர்மானிப்பது? அவ்வாறு தீர்மானிக்கப்பட்டால் அது எவ்வாறு உண்மையாகும்?
இதையே நவின விஞ்ஞான மொழியில் கூறினால், இன்று மனிதன் கண்டு பிடித்திருக்கும் அண்டத்தின் அளவே பல லட்சம், கோடி, கோடி மைல்கள் விரிவடைந்து கிடக்கும் ஒன்றாகும். 12000 KM உடைய பூமியே அவ்வண்டத்தில் ஒரு தூசியம். அண்டத்தின் அளவு இது வரை தீர்மானிக்கப்படவில்லை. அதன் எல்லை இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை. இனி அதர்க்கு எல்லை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இவ்வெலையை ஒரு சுவர் என வைத்துக்கொள்வோம். சுவர் என்றால் குறைந்தபட்ஷம் இருபுறம் இருக்கவேண்டுமே. சுவரின் இப்புறம் நாம் இருக்கிறோம். மறுபுறம் என்ன இருக்கிறது? ஏதாவது ஒன்று இருக்க வேண்டுமே? ஆக அண்டத்தின் அளவு அங்கும் நின்று விடவில்லை. அண்டம் போய்க்கொண்டே இருக்கிறது. அதர்க்கு எல்லைகளே இல்லை. அது வரம்புக்குட்படாதது. வரம்புக்குட்படாத அண்டத்தை வரம்புக்குட்பட்ட மனித மூளையின் மூலம் சிந்தித்தல் விடை கிட்டாது. மனிதனின் சிந்திக்கும் திறமைக்கு அப்பால் அண்டமும் அதன் செயல்பாடும் இருக்கிறது.
ஆகையால் வரம்புக்குட்பட்ட அறிவால் சிந்திக்கப்படுவது உண்மையாகாது. இன்னும் சொல்லப்போனால் இந்த கணிப்பொறியின் முன்னால் இருந்து நான் உபயோகப்படுத்துகிறேன் என்றால் நான் உபயோகப்படுத்தும் பொருள் என்னால், என்புலன்களால் கணிப்பொறி என்று உணரப்படுகிறதே அன்றி அது உண்மையில் கணிப்பொறி என்று என்னால் உறுத்யாக சொல்ல முடியாது. ஆனால் இதை கணிப்பொறி அல்லாத ஒன்று என்று ஏற்றுக்கொள்ள எனது மனம் தயங்குகிறது. ஏனென்றால் எனது மூளையின் பரிணாமாம் அதை அவ்வாறல்லாது ஏற்றுக்கொள்ள விடுவதில்லை. இதை தான் கலிமாயை என்று அகிலம் கூறுகிறது.
உதாரணமாக பத்துதலையுடைய ராவணன் என்று அகிலமும் ராமாயணமும் கூறுகிறது. ராமனின் மீது மிகுந்த பக்தி உடையவர்கள் இதை முற்றிலும் உண்மை என்று நம்புகின்றனர் (முடிவுகட்டுகின்றனர்). ஆனால் முற்ப்பொக்கு சிந்தனையாளர்கள் அதை பத்து தலை என்றால் பத்து தீய குணங்கள் என்றும், பத்து தலையின் வலிமையை உடைய என்றும், ராமன் மீது வெறுப்புடையவர்கள் பத்துதலை விஷயத்தை முற்றிலும் பொய் என்றும் கருதுகின்றனர். இன்றைய சூழ்நிலையில் நமது முன்னால் பத்து தலை உடைய ஒரு மனிதரை நம்மால் கற்ப்பனை பண்ண முடிகிறதா? அறிவுக்குட்பட்டு சிந்தித்தல் அது பொய் என்றாகிறது.
ஆனால் இதை விஞ்ஞான மொழியில் சிந்தித்தல், ராவணனின் கதை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாக கூறப்படுகிறது. டார்வின் கொள்கை படி புற உலகுக்கு ஏற்றவாறு உயிரினங்களும் தங்களை மாற்றிக்கொள்ளுமாம், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும். அப்படி பார்த்தால் இன்றைய நிலையில் இருந்து ராவணன் இருந்தானா என இன்றைய அறிவு கொண்டு சிந்திப்பது தவறாகும். ஏனென்றால் இன்றெய சூழ்நிலைக்கேற்றவாறு நாம் மாறி விட்டோம். நான் இப்போது ராவ்ணனின் காலகட்டதில் இருந்த சிந்தனைத்திறனுக்குட்பட்டு சிந்திக்க முடியாது. ஆக இங்கும் அறிவு தன் நிலையை மாற்றிக்கொண்டது.
ஆனால் அகிலத்திரட்டுகுட்பட்டு சிந்தித்தால் நான் அதை பொய் என்று முடிவுகட்டவோ, சில உண்மைகளை வெளிப்படுத்த சொல்லப்பட்ட கதை என்றோ, முற்றிலும் உண்மை என்றோ சொல்ல மாட்டேன். அது எனது சிந்திக்கும் திறமைக்கப்பால் உள்ள ஒன்றாகவே சொல்வேன். அது ஏதாவது உண்மையை கூறுவதாக தெரிந்தால் சொல்வேன். ஆனால் முடிவுகட்டமாட்டேன். அது தொடர்பான முழுமுதல் உண்மையை இறைவனுகே விட்டு விடுவேன்.
இனி நம் தலைப்புக்கு வருவோம். நான் முதலில் சொன்ன சரணாகதி.
சில சமயங்களை பின்பற்றும் சிலர் தனக்கு பல வருடங்களாக தீராத நோய் ஒரு இடத்தில் போன உடன் தீர்ந்ததாகவும் அதனால் அவர்கள் அதன் மேது பற்று வைத்திருப்பதாகவும் சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்கள் மனதில் அவ்விடத்துக்கு போனால் திரும்பவும் நோய் குணமடைந்துவிடும் என்றும் நம்புகிறார்கள். அங்கு அவர்கள் இறைவனை எடை போடுகிறார்கள். இறைவன் என்றால் இப்படித்தான், என எடை போடுகிறார்கள்.
இன்னும் பலர் தான் சொற்ப்பனம் கண்டதுபோல் நடந்ததாகவும். இன்னும் நடக்கும் என்றும். தனக்கு இறைவன் சொற்ப்பனம் காட்டிவிட்டால் அதுபோல் நடக்கும் என்றும் இறைவனை எடை போடுகிறார்கள். அவர்களுக்கு அதனால் ஒரு கர்வம் வளர்கிறது. இதை அய்யாவழி முழுமையாக கண்டிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அய்யாவழியில் இவ்வாறு நாம் செய்தால் நமக்கு இது நடக்கும் என்று நம்பக்கூடாது. நாம் தீர்மானிக்ககூடாது. நாம் முடிவுகட்டக்கூடாது. அவ்வாறு நாம் முடிவு கட்டினால் இறைவனுக்கென்ன வேலை?
இவ்வுலகில் அறிவுக்குட்பட்டு நாம் எதையும் முடிவுகெட்டகூடாது. ஏனென்றால் நமது அறிவே பொய். ஆனால் பரிபூரண சரணாகதி மூலம் சிறப்பான வழ்க்கை வாழ முடியும். இது தான் அய்யாவழியின் கரு. இதைத்தான் அகிலம் கலியுகத்தில் கலி, மாயையாக மக்கள் மனதில் குடிகொண்டிருப்பதாக கூறுகிறது. நமது வழ்க்கை யில் நிறைய மறை பொருள்க்கள் இருக்கின்றன அல்லவா. நான் கேட்கிறேன், முற்ப்போக்கு சிந்தனையில், நாம் இயக்கையில் இயர்க்கையாக உருவானவர்கள் என்றால் ஏன் இந்த மறி பொருள்க்கள். அது தான் கலிமாயை என்று அகிலம் கூறுகிறது. இவை அனைத்தயிம் வெல்லும் ஒரே வழி சரணாகதி என்று அகிலம் கூறுகிறது.

மேலும் இறைவன் னமது சிந்தனைத்திறனுக்கப்பற்பட்டவென் என்பதர்க்கான அகில வரிகள்.

சாத்திரத்திலும் தோன்றேன் சதுர்மறையைத்தாண்டி நிற்பேன்
சேத்திரத்திலும் அடங்கேன் செய்தவத்திலடங்கேன்
அன்பிலுமடங்கேன் அறத்திலும் அடங்கேன்
வம்பிலும் அடங்கேன் வணங்கிடிலுமடங்கேன்
கும்பிடிலும் அடங்கேன் குவித்திடிலும் அடங்கேன்
னம்பிடிலும் அடங்கேன் ஞானத்திலும் அடங்கேன்
யோகக் கிரியை உறு சரியையிலடங்கேன்
விற்பனத்திலடங்கேன் வினோதமதில் அடங்கேன் (அதிசயங்கள் காட்டுதல்)
சொற்பனத்திலடங்கேன் தெரிசனத்தில் அடங்கேன்
கனாவில் அடங்கேன் கைகாட்டலில் அடங்கேன்
அனாவில் அடங்கேன் அச்சரத்தில் அடங்கேன்
இத்தனியில் அடங்காது இருந்து பகை முடிப்பேன்.

இறைசக்தி என்றால் இவைகள் எல்லாம் இருக்க வேண்டும் என்று நம்ப வேண்டாம் என்றாகிறது. இறைவன் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்பதாகும். - வைகுண்ட ராஜா 23:11, 6 ஏப்ரல் 2006 (UTC)

நற்கீரன், வைகுண்ட ராஜா, அய்யாவழி பற்றிய வைகுண்ட ராஜாவின் கட்டுரைகளை நான் மேலோட்டமாகத்தான் பார்த்திருக்கிறேன், ஆழமாக வாசித்து அறிந்துகொள்ளவில்லை. அதனால் இது பற்றிய உங்களுடைய விவாதத்தில் நான் பங்குபற்ற முயலவில்லை. எனினும், தமிழ் விக்கிபீடியாவில் எழுதப்படும் கட்டுரைகள் மீது ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறுவதைக் காண நான் மகிழ்ச்சியடைகிறேன். வைகுண்ட ராஜாவின் கட்டுரைகளும், விமரிசனங்களுக்கு அவர் கொடுக்கும் விவரமான பதில்களும், அவர் எடுத்துக்கொண்ட விடயத்தில் நல்ல பரிச்சயம் உள்ளவர் என்பதைக் காட்டுவதாக நான் நம்புகிறேன்.
இச் சமயம் அல்லது சமயப் பிரிவு பற்றி இதற்கு முன்னர் நான் அறிந்திருக்கவில்லை. இந்து சமய ஆய்வாளர்கள் எத்தனை பேருக்கு இதுபற்றித் தெரியும் என்றும் எனக்குத் தெரியாது. விக்கிபீடியாவில் இது பற்றி எழுதப்படும் கட்டுரைகள் சமய அரங்கில் இது பற்றிய வாதப் பிரதிவாதங்களை எழுப்பினால் அதுவும் இது பற்றிய ஐயங்கள் பற்றிய தெளிவு ஏற்பட வழிவகுக்கும். அதுவும் விக்கிபீடியாவுக்கு ஒரு வெற்றிதான். Mayooranathan 04:35, 7 ஏப்ரல் 2006 (UTC)
மயூரநாதன், கருத்துக்களுக்கு நன்றி. அய்யாவழி நோக்கிய எனது புரிதலும் மேலோட்டமானதே. ஆனால், வைகுண்ட ராஜாவின் புரிதல் ஆழமானது, விரிவானது என்பது கண்கூடு. அய்யாவழியின் சமூக பின்புலம் (social background) (எ.கா: ஒரு குறிப்பிட்ட பிரதேச, சாதிய, பொருளாதார) பற்றியும் வைகுண்ட ராஜா தகவல்கள் தந்தால் மேலும் சில தளங்களில் அய்யாவழியை நோக்கலாம். --Natkeeran 05:27, 7 ஏப்ரல் 2006 (UTC)

உரையாடல் பகுதி 03[தொகு]

நற்கீரன் 03[தொகு]

விரிந்த பதில்களுக்கு நன்றி. உங்களின் வாசிப்பு பின்புலம் பரந்த அடிப்படையில் இருப்பதை உங்கள் எடுத்துக்காட்டுக்களில் இருந்து உணரக்கூடியதாக உள்ளது.


அறிவின் மார்க்கம் என்ன என்ற கேள்வியை கேட்கின்றீர்கள்? அறிவியலும் அடிப்படையில் ஒரு நம்பிக்கையில்தான் இயங்குகின்றது. அதாவது இவ்வுலகின் இயல்பில் மாற அம்சங்கள் சில உண்டு, அவற்றை எம்மால அறிய முடியும் என்பதுதான் அந்த அடிப்படை நம்பிக்கை.


நிஜம் எது என்ற கேள்வியையும் முன்வைக்கின்றீர்கள்? எம் புலன்களால் அறிய கூடிய நிஜத்துக்கும் உண்மையான நிஜத்துக்கும் வித்தியாசம் உண்டு என்று சுட்டுகின்றீர்கள். ஆம். ஆனால் நிஜம் இதுதான் என்ற ஒன்று உண்டா? எம்மால் இவ்வுலகை அறிய எம் புலன்களும், எம் மூளையும் தான் அடிப்படை.


மனிதன் மூளையால் சிந்த்திதால் விடை கிட்டாது என்று ஆதி மனிதன் குந்தியிருந்தால் இன்னும் அப்படியே இருந்திருப்போம். எம்மால் அறியப்படவேண்டிய பல அம்சங்கள் பல இருக்கின்றன.


புராணங்களை எப்படி எடுத்துக்கொள்வது என்பதில் பல சிக்கல்கள் உண்டு. ஏன் என்றால் அவற்றின் பின்புலத்தில் வைத்து பார்த்தால் பல பயனுள்ள தகவல்களை பெறமுடியும் என்றும் நினைக்கின்றேன்.


ஆனால் நிச்சியமா அப்படியே எடுத்துக்கொள்வது சற்று குழந்தைதனமானது. சினிமா படத்திற்கும் நிஜ வாழ்விற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா? இராமாயணம் ஒரு கதை.


டர்வினின் கொள்கையில் பல ஓட்டைகள் உண்டு, பல விஞ்ஞானிகள் அதை மறுத்து வருகின்றார்கள். எனினும் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு திறமான கோட்பாடு. ஆனால் அதைவைத்து இராவணன் இருந்தான் என்று வாதிடுவது சற்று பொருந்தாது. எதிர்காலத்தில், using genetic engineering and biotechnology, it might be possible to produce design beings in the future.


நீங்கள் என்னத்திடம் சரணாகதி அடைகின்றீர்கள்? என்னத்தை வேண்டி? அறிவு இல்லாவிட்டால் எதை வைத்து முடிவு கட்டுவது?


சில நோய்களை பக்றீரியா போன்ற கிருமிகளால் தோற்றுவிக்கப்படுகின்றன என்று அறியப்படும் முன், அவை பேய்களால் தோற்றுவிக்கப்படுதாக பலர் நம்பினர். சந்திரனில் மனிதன் கால்வைக்க முன்பு, அதை நோக்கி பல புரணாக்கதைகள் இருந்தன. எனவே புரணா கதைகளை அப்படியே நம்புவது ஏற்றுக்கொள்வது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை?


இவ்வுலகில் அறிப்பட்டவை என்று சில இருக்கின்றன. அறிப்படாமல் இன்னும் அறிப்படவேண்டி பல இருக்கின்றன. இதுவே உலகு, இதுவே இன்றைய மனித நிலை. நாளைய மனிதன் இறப்பை மீறலாம் அல்லது பல நூற்றாண்டுகள் பின்போடலாம், அண்டதை ஆளலாம் அவற்றையெல்லாம் இன்றே நாம் தீர்மானிக்க முடியாது.


அய்யாவழி மீதானா அல்லது உங்களுடைய நம்பிக்கையின் மீதான தாக்குதலாக தயவு செய்து என் கருத்துக்களை எடுத்துகொள்ளாதீர்கள். வெறும் கருத்து பரிமாற்றம் என்றே எடுத்துகொள்ளுங்கள். --Natkeeran 00:56, 7 ஏப்ரல் 2006 (UTC)


வைகுண்ட ராஜா 03[தொகு]

அறிவு என்பது முற்றிலும் பொய் என்று நான் சொல்ல வரவில்லை. அது அப்படியானால் அகிலத்திரட்டை எவ்வாறு நன்புவது? அது இருக்கும் தமிழை எவ்வாறு நம்புவது? ஆனால் எது உண்மை எது பொய் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றௌ தான் சொல்கிறேன். அறிவு பொய்யானால் அறிவு சிந்தித்து முடிவுகட்டுவதை முழுமையாக பொய் என்று சொல்லலாம். அறிவு பொய் என்பதை எப்படி உறுதியாக நம்புவது. இந்து மதத்தின் மாயா வாதத்தை படிப்போருக்கு இது இன்னும் எளிதில் புரியும். மனம் (பெரும்பாலும் அறிவு) என்பது மாயை. நாம் சிந்திப்பது புற உலகு என வைத்துக்கொள்வோம். புற உலகும் மாயையே. எனவே அறிவை பயன்படுத்தி உலகை சிந்திப்பதெனப்படுவது, பொய்யை (மாயை) பயன் படுத்தி பொய்யை சிந்திப்பதாகும். அது எவ்வாறு உண்மையாகும்? ஒருவேளை இருக்கலாம். ஆனால் அதை எவ்வாறு அறுதியிட்டு கூறுவது? இதை தான் அகிலம் கலிமாயை என கூறுகிறது. நமது மனம் கலியாகிய மயைக்குட்பட்டு இருப்பதால் எனது சிந்தனைகளில் எவையெல்லம் உண்மை என்று என்னால் முழுமையாக கூறமுடியாது. இதைத்தன் நான் கூற வருகிறேன்- "எனக்கு தெரியாது" . அது தான் சரணாகதி.

அடுத்ததாக நம்பிக்கை.

"இவ்வுலகின் இயல்பில் மாற அம்சங்கள் சில உண்டு, அவற்றை எம்மால அறிய முடியும் என்பதுதான் அந்த அடிப்படை நம்பிக்கை"

முதலில் நீங்கள் சொல்லும் நம்பிக்கை என்பது, ("எம்மால் அறிய முடியும்" என்பது) உங்கள் மூளையில் எழும் அறிவால் நீங்கள் முடிவுகட்டுவதாகும்.

அகிலத்தின் பதில்,

அகிலம் மொத்த பிரபஞ்சத்தையும் "ஏகம்" என்று கூறுகிறது. ஏகம் என்றால் ஒன்று, ஒப்பற்றது. பிரபஞ்சம் அனைத்தும் ஒன்று என்றால் இங்கு நாம் காணும் அனைத்தும் ஒன்று. அனைத்து பொருள்களுக்கும் அப்பால் ஒரு ஒற்றுமை உள்ளது. அந்த அடிப்படை ஒற்றுமையின் மூலம் ஒன்று மற்றொன்றை சார்ந்து இயங்குகிறது. உயிருள்ளவைகளும், உயிரற்றவைகளும். வெளியிலிருக்கும் காற்றை சுவாசிப்பதால் எனக்கு சில நன்மைகள் உண்டு எனில், அந்த காற்றை என்னுடலும் மனமும் ஏற்றுக்கொள்கிறதெனில் அதர்க்கும் எனக்கும் ஏதோ தொடர்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். அது போல் துரு துராக இருக்கும் மண், தண்ணீர் பட்ட உடன் ஒரு மண்கட்டி ஆகிறதெனில் அத்தண்ணீரை மண் பயன்படுத்திக்கொண்டு தன் நிலையை மாற்றிக்கொண்டது என்பதாம். இது போல் ஒவ்வொன்றுக்கும் சொல்ல முடியும். எனில் இப்பிரபஞ்சத்தில் ஒன்றோடொன்று தொடர்பில்லாதது என்று எதுவும் கிடையாது.

பூமியை எடுத்துக்கொண்டால் கடலின் பெரிய வெள்ளம் வந்து மொத்த நிலப்பரப்பையும் மூழ்கடித்துவிட்டதாக வைத்துக்கொள்ளுங்கள். அழிந்தவைகளெல்லம் மண்ணோடு மண்ணகிவிடும். ஒரு சிறிய கரித்துண்டு 2 வருடங்களில் அழியுமானால் பெரிய இரும்பு ஒருவேளை 500 ஆண்டுகள் எடுக்கலாம். ஆனால் முடிவில் அதுவும் அந்த கரித்துண்டும் மண் என்ற எச்சமாகவே இருக்கும். விஞ்ஞான விதிப்படி இன்னும் 1000 கோடி ஆண்டு ஆகிவிட்டால் மொத்த பூமியும் வயுவாக சூரிய மண்டலத்தில் கலந்து விடும். இன்று பூமியில் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் பேர் போட்டு அழைத்தல் பல லட்சம், கோடி பொருள்கள் இருக்கின்றன. ஆனால் மேர்சொல்லப்பட்ட ஆண்டுகள் கழித்தால் அனைத்துக்கும் ஒரே பெயர் "வாயு" எனில் அடிப்படையில் அனைத்தும் ஒன்று. நான் இங்கு காணும் ஒரு சிறு புல்லும், இந்த கணிப்பொறியும், சூரியனும், நானும், கோள்களும் அனைத்தும் ஒன்று. இந்த ஒற்றுமை நாம் ஒவ்வொன்றுக்கிடையும் காணும் வேறுபாடுகளுக்கு அப்பால் உள்ள ஒற்றுமையாகும். இந்த அனைத்து வேற்றுமைக்கும் அப்பால் காணும் ஒரு ஒற்றுமையையே அய்யாவழி ஏகம் என்கிறது. அதையே முழுமுத்ற்பொருளாக காண்கிறது. அதை இறைவன் என்ற தனி பெயரிட்டு கூட அய்யாவழி அழைக்கவில்லை. ஒப்பற்றது என்ற அர்த்ததில் வரும் "ஏகம்" என்னும் ஒரு பதத்தையே அகிலம் கூறுகிறது.

விவேகானந்தர் கூட சிகாகோ சொற்பொழிவின் போது இந்த அடிப்படை ஒருமையை விளக்குவார். ரிக் வேதத்தில் மட்டும் ஒரே ஒரு இடத்தில் இதே "ஏகம்" என்னும் பதம் பயன்படுத்தப்படுவதாக கூறுவார். அந்த சுலோகம் கூட இந்த அர்த்தத்தில் வருவதாக நினைக்கிறேன். "இருப்பது ஒன்றாக இருந்தாலும் ஞானிகள் அதை பல வாறாக உணர்கிறார்கள்".

நீங்கள் என்னிடம் "நீங்கள் என்னத்திடம் சரணாகதி அடைகின்றீர்கள்?" என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தீர்கள். அது இந்த "ஏகத்தை" தான், இந்த ஒருமையை, அடிப்படை ஒருமையை.

ஆனால் ("எம்மால் அறிய முடியும்") என்று நீங்கள் கூறியதை, "உங்கள் மூளையில் எழும் அறிவால் நீங்கள் முடிவுகட்டுவதாகும்." என்று கூறினேன்.

உலகை நான் அறிவேன் என்றால் அது உங்கள் மூளை எனப்படும் தனித்தன்மைக்கு உள்ளிருந்து எழுந்த ஒன்றாகும். உங்களை நீங்கள் பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தி உங்கள் தனித்தன்மையிலிருந்து கேட்கப்பட்ட கேள்வியாகும். உங்கள் மூளையையும், அறிவையும் தாண்டி உங்களுக்கும் பிரபஞ்சதுக்கும் இருக்கும் ஒற்றுமையிலிருந்து எழுந்த கேள்வி அல்ல. அவ்வாறு ஆனால் நீங்களும் பிரபஞ்சமும் ஒன்று அல்லவா. நான் அதை அறிவேன் என்று சொல்ல அங்கு இரண்டு பொருட்கள் இல்லையே. நீங்கள் உங்கள் வெளியில் இருக்கும் பொருளை நான் அறிவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிரீர்கள். அவ்வாறு அறிந்தாலும் அதை எவ்வாறு முற்றிலும் உண்மை என்று நம்ப முடியும்? ஆனால் தனித்தன்மையை விடுத்து நானும் அதுவும் ஒன்று என்று சிந்திதீர்களானால், அந்த சிந்தை உடனேயெ உங்களுக்கும் அதுக்கும் (பிரபஞ்சம்) அடிப்படையாக இருக்கும் அடிப்படை ஒற்றுமையின் ஸ்தானத்திலிருந்து கேட்கப்படும் கேள்வியாகிவிடும். அந்த அடிப்படை ஒற்றுமை எனப்படுவது இங்கு "ஏகம்" என்னும் இறைவனிடம் கேட்கும் கேள்வியாகிவிடுவதால் அது சரணாகதியாகிவிடுகிறது.

அடுத்து புராணத்தை ஏன் கதை என்கிறீர்கள்? நம்பமுடியவில்லை என்பதர்க்காகவா? அப்படியென்றால், சிலவற்றை கூறுகிறேன்.

டார்வின் கொள்கையில் ஓட்டை இருப்பதாக சொன்னீர்கள். அதை நான் மட்டுமல்ல டார்வினே ஒத்துக்கொள்கிறார். அவரின் Origin of Species-ன் Introduction-இல் அவர் தனது கொள்கையில் தனக்கே சில சந்தேகங்கள் இருந்ததாகவும் அவற்றின் பெரும்பகுதியை தனது 20 வருட கால கட்ட ஆராய்ச்சியில் தீர்த்துவிட்டதாகவும் இன்னும் சில தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் தனது உடல் நிலை மோசமாக இருப்பதால் தனது இதுவரையான ஆராய்ச்சி வீணாகக்கூடாது என்பதர்க்காகவே இதை இப்போது வெளிய்டுகிறேன் என்றும் கூறுகிறார். மேலும் அவர் தனது ஆரய்ச்சியின் (முடிவுபெறாத) முடிவை ஒருவரும் ஏறுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை என்றும் நான் ஒரு புதிய ஆராய்ச்சிக்கான அடித்தளமமைத்திருப்பதாகவும் கூறுகிறார். மேலும் அவர் ஒவ்வொரு species-ம் தனித்தனியாக உருவாக்கப்பட்டவைகளல்ல என்பதில் மட்டு உறுதியாக இருக்கிறார். (Each species had not been independently created). குரங்கிலிருந்துன் மனிதன் பரிணமித்தான், போன்ற கருத்துக்களையே இன்று எதிற்க்கும் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். மற்றபடி டார்வின் கொள்கையே (evolution எனப்படும் தான் இருக்கும் சூழ்நிலைகேற்றவாறு தன்னை சிறிது சிறிதாக பலநூறு தலைமுறைகளில் மாறிக்கொள்வது போன்ற கொள்கைகளிலும்) இன்று பரவலாக அல்ல பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதனால் ராவணன் இருந்தான் என்று சொல்ல வரவில்லை.

இன்றைய சூழ்நிலையில் அவ்வாறு ஒரு மனிதரை அறிவு ஜீரணிக்கவில்லை அல்லவா. இதை (அய்யாவழி) சமய ரீதியாக சொன்னால் கலியின் மாயை காரணமாக அறிவு மாயைக்குட்ப்பட்டு அவ்வாறு சிந்த்திதலையே மூடத்தனமாக நம்புகிறதென்பேன்.

ஆனால் முற்போக்கு சிந்தனையில் சிந்தித்தால், விடை சற்று நெடியது

எகிப்திய மம்மிக்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீகள். அவை 2500-4000- ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளாம். பெரும்பாலானவைகள் 3 முதல் 4 அரை அடிக்கு உட்பட்டவைகளாக இருக்கின்ற்ன. அவர்கள் pygmies என்ற குள்ள மனிதர்களல்ல. இன்னும் சொல்லப்போனால் திராவிட மக்களினத்துடன்நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகிறார்கள். இன்று நாம் 4 அடி மனிதர்களாகவா இருக்கிறோம். இல்லை எனவே இந்த 4000 அண்டுக்குள் இப்படி ஒரு பரிணாமம் நடந்துள்ளது. இது 480 கோடி வயதுடைய பூமியில் மனித வரலாறு பதிவு செய்யப்பட்ட 4000 ஆண்டுக்குள்ளான மாற்றம். எனில் ராமாயணம் நடந்ததாக கருதப்படுவது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. எனவே பரிணாம வளர்ச்சியில் இப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று எவ்வாறு சொல்கிறீர்கள். Theory of evolution படி மனிதனுக்கும் சிம்பான்சீ இன குரங்குக்கும் 99.125 சதம் ஜீன் ஒற்றுமைகள் உள்ளனவாம். மனிதனுக்கும் எலிக்கும் உருவத்தில் ஏதும் தொடர்பு உள்ளதாக தோன்றுகிறதா? ஆனால் எலிக்கும் மனிதனுக்கும் 95.238 சதம் ஜீன் ஒற்றுமையாம். இது இன்றைய நவீன விஞ்ஞானம் ஒத்துக்கொள்வதாகும். நீங்கள் "நான் அறிவேன்" என்ற அந்த மனிதனின் தன்னம்பிக்கையின் வடிவமாக கருதப்படும் கண்டுபிடிப்பு இவ்வாறு சொல்கிறது. இரு தலைகளை உடைய குழந்தைகள் பிறப்பது நாம் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கும் ஒன்றாகும். சில உடனே இறக்கின்றன சில, சில நாட்கள் வாழ்ந்து பின் இறக்கின்றன. ஒரு தலைக்கு மேல் இருக்க சாத்தியம் உள்ளதே! இனி பல்லி இனத்துக்கும் டைனாசர் இனத்துக்கும் சாதாரணமாக சிந்தித்தால் தொடர்பில்லை. ஆனால் இவை இரண்டும் ஒரு இனத்தின் பரிணாமமாம். பரிணாமம் என்றால் evolution கொள்கை பிறகாரம் பல்லியினம் வாழ்ந்த கால, இட, தட்பவெட்ப சூழ்னிலை அதனை இவ்வளவு சிறிதாக உருமாற செது, அதன் மற்ற இனமான டைனாசர் இனத்தை நேர் மாறாக பரிணமிக்க செய்திருக்கிறது வேறு ஒரு சூழ்னிலை. ஆக இச்சூழ்நிலை ஒரே இனத்தை சம்பந்தமில்லத இரண்டாக மற்றுகிறது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் இது இவ்வறு இருக்க நான் இதை இப்படித்தன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இது இவ்வாறு இருக்கவே முடியாது, இவ்வறு சிந்திப்பது குழந்தைத்தனமானது என்று எவ்வாறு சொல்கிறீர்கள்?

நான் முதலில் சொன்னது போல் பேக்டீரியாக்கள் பேய்கள் என்று புரிந்துகொள்ளப்பட்டனவா இல்லை இன்று பேய்கள் பேக்டீரியாக்ள் என்று புரிந்துகொள்ளப்படுகின்றனவா என்றால். அதில் எந்த அறிவு உண்மை என்ற கேள்வி தான் எழும். பதில் எதுவாகவும் இருக்கலாம்.

ஆனால் அதையும் முற்பொக்கு சிந்தனையில் சிந்தித்தல் இன்று பேய் பிடித்தல் என்னும் நம்பிக்கையை multiple personality, split personality, என்றெல்லாம் உளவியல் சொல்கிறது. சமீபத்தில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் இந்த split personality - யை விளக்கியது. அதில் முன்னே இருந்த ஒரு ஆளின் மீது பல காரணங்களால் மற்றொருவருக்கு ஏற்ப்படும் ஆர்வம் பின்னர் split personality யாக உருவடுப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் நான் கேட்கிறேன் அவரை இவருக்கு தெரிந்திருந்தாலோ அல்லது அவரைப்பற்றிய செய்தியை இவர் எவர் மூலமாகவும் அறிந்திருந்தாலோ அது சாத்தியம். ஆனால் 35 வருடங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்தத்தை 10 வயது சிறுவன் அப்படியே சொல்கிறான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர் பற்றிய உண்மை இச்சிறுவனது தந்தைக்கு கூட தெரியாது. ஏனென்றால் அவை அவரின் தந்தையின் காலகட்டத்தில் நடந்தசம்பவங்களாம். இதை நான் நேரடியாக கண்டேன். இதர்க்கு உளவியல் என்ன சொல்கிறது? - வைகுண்ட ராஜா

உரையாடல் பகுதி 04[தொகு]

நற்கீரன் 04[தொகு]

எது உண்மை எது பொய் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றௌ தான் சொல்கிறேன்.

எது உண்மை, எது பொய் என்று இறுதியாக எல்லா விடயங்களை நோக்கியும் நாம் தீர்மானிக்க வேண்டிய தேவை இல்லை. நீங்கள் உங்கள் இருப்பை, இக் கண இருப்பை நம்புகின்றீர்கள் தானே, அது உண்மை.

இந்து மதத்தின் மாயா வாதத்தை படிப்போருக்கு இது இன்னும் எளிதில் புரியும். மனம் (பெரும்பாலும் அறிவு) என்பது மயை. நாம் சிந்திப்பது புற உலகு என வைத்துக்கொள்வோம். புற உலகும் மாயையே.

மனம் (மூளை) மாயை என்பதை எப்படி அறிவது? இந்து மதம் சொல்கின்றது மனம் (மூளை) மாயை என்று, அதனால் மாயை. வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எம்மால் அறியப்பட்ட சில உலக இயல்புகள் உண்டு (உதாரணம்: புவி ஈர்ப்பு), அதே போல் எம்மால் அறியப்படாமல் பல அம்சங்கள் உண்டு. ஆனால், எல்லாம் மாயை என்பது அர்த்தமற்றது. அப்படியானால், அந்த மாயையும் மாயைதானே.

எனக்கு தெரியாது. அது தான் சரணாகதி.

உமது சிந்தனைகளில் எவையெல்லாம் உண்மை என்று வகை செய்வது கடினமாக இருக்கலாம். ஆனால் உமக்கு சிந்தனை உண்டல்லவா. "நான் சிந்திக்கின்றேன், அதனால் நான்." என்பது டெஸ்கராஸ்சின் பிரபல வாக்கு. நான் இருக்கின்றேன், இதில் எந்த மாயையும் நான் காணவில்லை. என் இருப்பே முதன்மை, அதன் பின்னரே எல்லாம். எனக்கு தெரியும், நான் இருக்கின்றேன் என்று, அதனால்தான் "எனக்கு தெரியாது" அதுதான் சரணாகதி என்ற கோட்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அனைத்து வேற்றுமைக்கும் அப்பால் காணும் ஒரு ஒற்றுமையையே அய்யாவழி ஏகம் என்கிறது. அதையே முழுமுத்ற்பொருளாக காண்கிறது. அதை இறைவன் என்ற தனி பெயரிட்டு கூட அய்யாவழி அழைக்கவில்லை. நீங்கள் என்னிடம் "நீங்கள் என்னத்திடம் சரணாகதி அடைகின்றீர்கள்?" என்று ஒரு கேல்வி எழுப்பி இருந்தீர்கள். அது இந்த "ஏகத்தை" தான், இந்த ஒருமையை, அடிப்படை ஒருமையை.

ஏகம் என்றும் ஒன்று என்றும் நீங்கள் குறிப்பிடும் எண்ணக்கருக்கும், டாஃவ் என்று டாஃவிசத்தில் குறிக்கும் ஒருவித பிரபஞ்ச இயல்புக்கு பல ஒற்றுமைகள் இருக்கின்றன. எப்படி மின்காந்த சத்தி இருக்கின்றதோ, எப்படி புவியீர்ப்பு சக்தி இருக்கின்றதோ அப்படி டாஃவ். அப்படி ஒன்றாகவே உங்களின் ஏகம் என்ற எண்ணக்கருவையும் பார்க்கின்றேன். அதன் இயல்போடு செல்வது எம் வாழ்க்கைக்கு உதவலாம். ஆனால், நான் என்ற ஒன்றும் உண்டு.

உலகை நான் அறிவேன் என்றால் அது உங்கள் மூளை எனப்படும் தனித்தன்மைக்கு உள்ளிருந்து எழுந்த ஒன்றாகும். உங்களை நீங்கள் பிரபஞ்சத்திலிருந்து வேறுபடுத்தி உங்கள் தனித்தன்மையிலிருந்து கேட்கப்பட்ட கேள்வியாகும்.

(குறிப்பு: நான் உலகை அறிவேன் என்று குறிப்பிடவில்லை என்று நினைக்கின்றேன். நாம், மனிதர்கள் என்ற ரீதியிலேயே குறிப்பிட்டேன்...)நான் என்ற ஒன்று உண்டு. நானும் இயற்கையே. இயற்கையின் ஒர் அம்சமே. அது தெளிவு. நான் என்ற நானுக்கும் இயற்கைக்கும் எங்கு எல்லைகள் என்பதில் எனக்கு அவ்வளவு தெளிவு இல்லை. ஆனால் அந்த நானுக்கு ஒரு உணர்வு உண்டு. அந்த உணர்வு இவ்வுலகில் தன்னால் சுதந்திரமாக சில முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்புகின்றது. அப்படியான ஒரு நம்பிக்கையே என் வாழ்வுக்கு இருக்கும் அடிப்படை அர்த்தம். There exist a consciousness with some sort of free will, which is I. I might be an element of nature, but that does not destroy its existence.

அடுத்து புராணத்தை ஏன் கதை என்கிறீர்கள்? நம்பமுடியவில்லை என்பதர்க்காகவா? அப்படியென்றால், சிலவற்றை கூறுகிறேன்.

புராணத்தை கதைகள் என்றேன் ஏன் என்றால் அவை கதைகள் என்பதால். சினிமாக் கதையை கதை என்பேன் ஏன் என்றால் அது ஒரு கதை என்பதால். எவ்வளவு நிஜமாக சித்தரிக்கப்பட்ட சினிமாக் கதை என்றாலும் ஒரு கதையாசிரியரின் கற்பனையில் இருந்து உதித்தது என்றால் அது கதைதான்.

ஆனால் இது இவ்வறு இருக்க நான் இதை இப்படித்தன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இது இவ்வாறு இருக்கவே முடியாது, இவ்வறு சிந்திப்பது குழந்தைத்தனமானது என்று எவ்வாறு சொல்கிறீர்கள்?

நீங்கள் சொல்வது சரிதான். இராமாயணம் முற்றிலும் புராணக்கதை என்று சொல்ல என்னிடம் எந்த ஆதாரமும் தற்சமயம் இல்லை. ஆனால் அது கதையில்லை, அது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு என்ன ஆதாரங்கள் உண்டு? (இராமர் அணை, இலங்கை, அயோத்தி கோயில், குரங்குகள் என்று கூறிவிடாதீர்கள்...)

ஆனால் 35 வருடங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்தத்தை 10 வயது சிறுவன் அப்படியே சொல்கிறான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவர் பற்றிய உண்மை இச்சிறுவனது தந்தைக்கு கூட தெரியாது. ஏனென்றால் அவை அவரின் தந்தையின் காலகட்டத்தில் நடந்தசம்பவங்களாம். இதை நான் நேரடியாக கண்டேன். இதர்க்கு உளவியல் என்ன சொல்கிறது?

உளவியலில் பல அம்சங்களை neuroscience மூலம் ஒரு தளத்தில் விளக்க முடியும். ஆனால், எல்லாவற்றை பற்றியும் விளக்கங்கள் தற்சமயம் இல்லை. ஆராச்சியகள் நடைபெறுகின்றன. காலப்போக்கில் மேலும் விளக்கங்கள் கிடைக்கலாம். சிறுவன் எப்படி சொல்கிறான் என்பதற்கு விளக்கம் என்னிடம் இல்லை. சிலவேளை சிறுவன் எதோ ஒரு விதத்தில் அந்நிகழ்ச்சிகளை அறிந்திருக்க முடியும், அல்லது ஒருவித odd coincidence அல்லது probability. It maybe a fraud or maybe not be. உலகில் எல்லாவற்றுக்கும் விளக்கம் இன்று இருக்கு என்று கூறவில்லை, ஆனால் சிலவற்றுக்கு உண்டு. --Natkeeran 01:31, 8 ஏப்ரல் 2006 (UTC)

வைகுண்ட ராஜா 04[தொகு]

பதில்களின் தாமதத்திற்கு வருந்துகிறேன், மனிக்கவும்.

மாயையை பற்றி பேசுவதற்கு முன்பு மாயை என்றால் என்ன என்பதை சொல்லி விடுகிறேன். மயையை விளக்குவதில் அய்யாவழிக்கும் இந்துமத்ததுக்கும் சிறு வேறுபாடு உண்டு என்றாலும் பெரிய அளவில் மாறுபாடு இல்லை. மாயை எனாப்படுவது,

  • எது இந்த கணம் இருப்பதை போன்று மறு கணம் இருப்பதில்லையோ அது மாயை
  • இருப்பதை இல்லது போல் தோற்றுவிப்பதும், இல்லாததை இருப்பது போல் தோற்றுவிப்பதும்

மாயை.

வேதியல் இயற்கையின் மூலங்களை கூறுவதில் இந்த மாயாவதத்தை ஒத்துக்கொள்கிறது. அது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 118 element களும் அடிப்படையில் ஒரே மூலக்கூறிலிருந்து தான் தோன்றின என்கிறது. இதிலும் கூட 2 element கள் உறுதிசெய்யப்படவில்லை என நினைக்கிறேன். எனில் ஒன்று மற்றொன்றோடு சேரும்போது அது இது இரண்டும் அல்லாது வேறு ஒரு element ஆக உருவெடுப்பதாக வேதியல் கூறுகிறது. ஆக ஒவ்வொன்றும் இடைவிடாது ஏதோ ஒரு வேலையில் (chemical reaction-ல்) ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. எனில் இடைவிடாது மாறிக்கொண்டே இருக்கிறது, மொத்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும், துகளும். ஆக பிரபஞ்சம் மாயையின் முதல் விதிக்குட்ப்பட்டதாகும்.

இருப்பதை இல்லாதது போல் தோற்றுவிப்பது, நாம் முதலில் பேசிய ஒலி (20 Hz, 20000Hz) விஷயத்தில் விளக்கப்பட்டு விட்டது.

இல்லாததை இருப்பது போல் தோற்றுவிப்பது, அதை விளக்குவதென்றால்,

நீங்களும் ஆங்கிலம் கற்றிருக்கிறீர்கள், நானும் கற்றிருக்கிறேன். அதனால் இங்கே நான் stone என்று எழுதியுள்ளளேன் என்றால், அதை கண்ட உடன் உங்கள் மனதில் கல் என்ற உருவம் வந்து விடும். இதே stone என்னும் வார்த்தையை ஆங்கிலம் தெரியாத ஒரு நபரிடம் காட்டினால் (இன்னும் சொல்லப்போனால் இப்பொது உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் எந்நபரும் ஏதொ எழுதப்பட்டிருக்கிறது என புரிந்து கொள்வார்கள். அதனால் ஒரு மொழியும் கற்றிராத ஒருவரிடம் காட்டினால்) அவருக்கு அது ஏதொ சித்திரம் தீட்டப்பட்டுள்ளதாக தான் தெரியும். ஏனென்றால் அடிப்படையில் stone என்ற ஆங்கில வார்த்தைக்கும் கல்லுக்கும் எந்த உறவும் கிடையாது.

நான் உண்மையிலெயே ஒரு கல்லை அனுப்பி இருந்தால் தானே நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நமது பழக்கவழக்கத்தின் அறிவின், (அறிவு என கருதப்படுவதன்) மூலம் stone என்னும் ஆங்கில பதம் எந்த தயக்கத்துக்கும் இடமின்றி நமது மனதில் கல்லை உருவப்படுத்திவிட்டது. இன்னும் சொல்லப்போனால் ஒரு பொருளை (கல் என்ற அறிவிப்பை) நான் உங்களுக்கு தரவேண்டும். ஆனால் அது என்னிடம் இல்லை. ஆனால் நான் அதை (stone என்ற வார்த்தையின் மூலம்) தந்து விட்டேன். இங்கு கல் இல்லை. ஆனால் அக்கலை பார்ப்பதன் மூலம் நீங்கள் எதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை அந்த stone என்ற பதத்தை குறிப்பிட்டதன்மூலம் புரியவைத்துவிட்டேன். இல்லாததை இருப்பது போல் தோற்றுவித்துவிட்டேன். இதுவும் மாயை.

மாயை இருப்பதை எவ்வாறு நம்புவது என்றீர்கள். அதற்கு தான் இதை கூறினேன்.


"எனக்கு தெரியாது" அதுதான் சரணாகதி என்ற கோட்பாட்டை என்னால் புரிந்து கொள்ள

முடியவில்லை.

எனக்கு ஏதோ ஒன்று தெரியும் என்றால், என்னிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்றாகிறது. "எதைப்பற்றி தெரியுமோ அதைப்பற்றிய" அறிவு தான் அது. அறிவு என்பது என்னிடம் உள்ளது. எனில் நான் வெற்றிடமில்லை. என்னிடம் அந்த அறிவு இருப்பதால் நான் ஒன்றுமில்லை என சொல்ல முடியாது. முழு சரணாகதி என்பது நான் ஒன்றுமில்லை என்பது தானே? என்னில் ஒன்றும், ஒன்றும் இல்லாத போது தான், நான் என்னும் தனித்தன்மை அறுகிறது. நான் என்னும் தனித்தன்மை முழுமையாக அறும் போது தான் எனக்கு அப்பால் என்னையும் பிரபஞ்சத்தையும் இணைக்கும் அடிப்படை ஒருமையுடன் நான் சங்கமிக்கிறேன். நான் அது ஆகிறேன். அது நான் ஆகிறது. (எ.க)

xxx என ஒரு மனிதன் இருக்கிறார். அவர் இறந்து பின்னர் அவரின் உடல் மண்ணோடு மண்ணாகிறது. அதுவரை அவர் (xxx) என அழைக்கப்பட்டார். ஆனால் இப்பொது அவர் மண் என்று அழைக்கப்படுகிறார். அவர் மண் ஆனார். எனில் இதர்க்கும் முன் மண் அவராக இருந்தது. இப்பொது xxx என்ற தனித்தன்மை இல்லை. மண் என்ற ஒருமையுள் கலந்து விட்டார். அவர் மண் ஆனார். இது இவ்வாறிருக்க முதலில் கூறியதுபோல் தனித்தன்மைக்குட்ப்பட்ட நான் என்பவன் மாறிக்கொண்டே இருப்பவன். நான் பார்ப்பவைகளும், கேட்ப்பவைகளும், நுகர்பவைகளும் மாறிக்கொண்டே இருப்பவைகள். எனில் மாறிக்கொண்டே இருக்கும் நான் மாறிக்கொண்டே இருக்கும் அவைகளை எவ்வாறு தீர்மானிப்பேன்? இதை மீறி நான் அவற்றை தீர்மானித்தேன் என வைத்துக்கொள்ளுங்கள். அது ஒருவேளை இன்று சரியாக தோன்றும். ஆனால் அது நாளை தவறாகிவிடும். ஏனென்றால் தீர்மானிக்கும் நாமும் தீர்மானிக்கப்படும் அவைகளும் மாறிக்கொண்டே இருப்பவைகள்.

இன்னும் சொல்லப்போனால் நாமும் நமது சுற்றி இருப்பவைகளும் காலத்தலும் இடத்தாலும் உருவாக்கப்பட்டிருக்கிறோம். காலமும் இடமும் (time and space) மாயை ஆதலால் இவை அனைத்தும் பொய்யே. அதனால் நாம்மாகப்பட்டவர்கள் முடிவு கட்டும் ஒன்றும் உண்மையாகாது. அதனால் அனைத்துக்கும் அப்பால் உள்ள ஒருமையிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன். முழுமையாக சரண் அடைந்துவிட்டேன். எனக்கு ஒன்றும் தெரியாது.


புராணத்தை பற்றிய வாதத்தில்,

அதை கதை இன்று கூற காரணம் என்ன? என்னென்ன காரணங்களால் அதை கதை என்கிறீர்கள்? விஞ்ஞானமும் ஒருவித நம்பிக்கையில் தான் இயங்குகிறதென்றீர்கள். உங்களிடம் அதை ஒரு கதை என நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்றீர்கள். இது இரண்டையும் ஒப்புக்கொள்ளும் நீங்கள் அதை சம்பவம் என நம்புவதை எவ்வாறு குழந்தைத்த்னமானது என எவ்வாறு சொல்கிறீர்கள்?

அணை, அயோத்தி, குரங்கு, முதலியவற்றை ராமாயணம் என்பது சம்பவம் என்பதர்க்கு ஆதாரமாக நான் கொள்ளவில்லை. ஆனால் இதை நான் ஆதாரமாக கொண்டேன் என்றால், அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயார் இல்லையானால், தொல்பழங்காலத்து விஷயங்களில் ஒரு சம்பவம் உண்மை என ஏற்றுக்கொள்ள எந்த விதமான ஆதரங்கள் போதுமானதென நினைக்கிறீர்கள்?


உளவியல் விஷயத்தில் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நான் கண்டவைகளுக்கப்பால் உண்மை இருக்கலாம்.


தமிழ் விக்கீப்பீடியாவில் நீங்கள் Administrator தானே? அப்படியானால் எனக்கு ஒரு கருத்து. தமிழ் விக்கீப்பீடியாவில் ஸ, ஷ, ஹ போன்ற வடமொழி எழுத்துக்களை தவிர்த்து தூய தமிழில் எழுதுவது என விதி வகுப்பது நல்லதல்லவா, தமிழுக்கும்?இன்னும் சொல்லப்போனால் தனித்தமிழ் இன்னும் நல்லது. அது படிப்பவர்களுக்கு எளிதல்ல என கருதினால் இடது பக்கத்தில் பல Link-கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன அல்லவா? அதனருகில் தனித்தமிழ் அகராதி என ஒரு Link கொடுத்து கடினமான வார்த்தைகளுக்கு அதில் இன்றைய பயன்பாட்டில் இருக்கும் சொல்லை கொடுக்கலாம் அல்லவா? இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் தமிழின் சிறப்பே "கன்னித்தமிழ்" மாறாத தமிழ் என்பதால். விக்கீப்பீடியா போன்ற ஒரு மிகப்பெரிய project மூலம் தனித்தமிழை பாயன்பாட்டிற்கு கொண்டுவருவது அவ்வளவு கடினமானதல்ல. - வைகுண்ட ராஜா 20:53, 11 ஏப்ரல் 2006 (UTC)

உரையாடல் பகுதி 05[தொகு]

நற்கீரன் 05[தொகு]

உரையாடல் சற்று நீண்டு விட்டது. பல விடயங்களை பற்றி ஒரே தடவையில் உரையாடுவது சில குழப்பங்களுக்கு காரணமாயிருக்கலாம். மாயை விளக்க வேதியலை மற்றும் தர்க்கதை கையாண்டது எனக்கு முரன்பாடாக தெரிகின்றது.


இவ்வுலகில் மாற அம்சங்கள் சில உண்டு என்ற அடிப்படையில் நான் உங்களிடம் இருந்து வேறுபடுகின்றேன். எல்லாம் மாயை என்பதில் இருந்து நான் உங்களிடம் இருந்து வேறுபடுகின்றேன்.


நீங்கள் ஒருமையிடம் "சரணாகதி" என்றுவிட்டு உங்கள் நடத்தைகளின் விளைவுகளில் (behavioral responsibilities) இருந்து விலகிவிட பார்பாதாக தெரிகின்றது. உங்களிடம் இருக்கும் சுதந்திரத்தை (Free will), உணர்வை (consciousness) ஏன் மறுக்கின்றீர்கள் என்று புரியவில்லை. ஏகம் (collective or cosmic consciousness!) இருக்கலாம், அதன் இயல்போடு இயல்பதால் எம் வாழ்வு நன்மை பெறலாம்.


விஞ்ஞானத்தின் மீது இருக்கும் நம்பிக்கை ஒரு விதத்தில் புலன்களிலும் பகுத்தறிவிலும் தங்கியிருக்கின்றது. ஆனால் புராணம் மீது நம்பிக்கை வேறுபட்டது. தொல்பொருள் ஆராச்சி, வரலாற்றியல், போன்ற துறைகள் துணைகொண்டு புராணக்கதைகள் சம்பவங்களா என்று ஓரளவு நிரூபிக்கலாம்.


உங்கள் நம்பிக்கையை சீண்ட நான் முயலவில்லை. உங்களின் இவ் பரந்த ஆழுமை உங்களின் கட்டுரைகளில் முழுமையாக வெளிப்படவில்லை. குறிப்பாக, அய்யாவழியின் தத்துவ பின்புலம் நோக்கி விளக்கமான ஒரு கட்டுரை எழுதினால் நன்று. குறிப்பாக ஏகம், சரணாகதி, மாயை போன்ற எண்ணக்கருக்களை விளக்கி எழுதினால் நன்று. பொதுவாக, இந்துக்கள் தங்கள் தத்தவங்களையும் புராணங்களையும் பிரித்து ஆய்வது வழக்கம். பல இந்து தத்துவங்கள் புராண பின்புலம் இல்லாமல் தனித்து நிற்ககூடியவை.


தூய தமிழ் என்பதை விட பயன்பாட்டு தமிழே அவசியம். சமஸ்கிரத எழுத்துக்கள் சமஸ்கிரத சொற்களை எழுத, மற்றும் தமிழில் இல்லாத ஒலிகளை உள்வாங்க அவசியம். சமஸ்கிரதம் மீது நாம் இனி பயம் கொள்ள தேவையில்லை. அது ஒரு தனி விவாதம், பின்னர் செய்யலாம் :-) --Natkeeran 22:32, 11 ஏப்ரல் 2006 (UTC)