பெ. சுந்தரம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோன்மணீயம் பெ. சுந்தரனார்
Manonmaniam Sundaram Pillai.tif
பிறப்புமனோன்மணீயம் பெருமாள் சுந்தரனார்
4 ஏப்ரல் 1855
ஆலப்புழா, கேரளா, இந்தியா
இறப்பு26 ஏப்ரல் 1897(1897-04-26) (அகவை 42)
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர்
பெற்றோர்பெருமாள்
மாடத்தி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
சிவகாமி அம்மாள்

மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (Manonmaniyam P. Sundaranar, ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ஆம் ஆண்டு சுந்தரனார் பிறந்தார்.[2] இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமி. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876-ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

ஆசிரியப் பணி[தொகு]

1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார்.[3] பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித் துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.

மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 1885 இல் டாக்டர் ஹார்வித் துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரனாரைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார். அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்படத் தாங்கினார். 1878 இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார். இவருடைய மகன் நடராசன் பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.

சமயப்பணி[தொகு]

திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையினைத் தோற்றுவித்து சமயத் தொண்டாற்றி வந்தார். இவருக்கு F.M.U., F.R.H, S.M.R.A.S, ராவ்பகதூர் போன்ற பல பட்டங்கள் கிடைத்தன.

தமிழ்ப்பணி[தொகு]

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது.[4] சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.

கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்[தொகு]

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

முழுமையான தமிழ் தாய் வாழ்த்து (UnEdited Version of Tamil Thai vazhthu)

இறுதி நாட்கள்[தொகு]

பேராசிரியர் சுந்தரனார் தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரனார் தமது 42வது வயதில் 1897, 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.

வெளியிட்ட நூற்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Randor Guy (19 December 2010). "Manonmani 1942". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article961803.ece. 
  2. 100010509524078 (2021-04-04). "மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த நாள்: ஏப்.4- 1855". Maalaimalar (English). 2021-11-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-11-01 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  3. "Madurai Diraviyam Thayumanavar Hindu College, Tirunelveli". Mdthinducollegetirunelveli.org. 10 May 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2015-07-22 அன்று பார்க்கப்பட்டது.
  4. "தமிழ்த் தாய் வாழ்த்து: தமிழக அரசாணை சொல்வது என்ன? - தினசரி". dhinasari.com (ஆங்கிலம்). 2021-11-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._சுந்தரம்_பிள்ளை&oldid=3602195" இருந்து மீள்விக்கப்பட்டது