நல்லாத்தூர் சொர்ணபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லாத்தூர் சொர்ணபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடலூரில் அமைந்துள்ளது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°52'22.6"N, 79°42'15.1"E (அதாவது, 11.872940°N, 79.704188°E) ஆகும்.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக சொர்ணபுரீசுவரர் உள்ளார். இவர் பொன்னம்பல நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். சாளரம் எனப்படுகின்ற கல் ஜன்னல் வழியாக இறைவனை வணங்கலாம். இறைவி திரிபுரசுந்தரி ஆவார். இறைவின் பாதத்தின்கீழ் மகாமேரு அமைக்கப்பட்டுள்ளது.[1]

அமைப்பு[தொகு]

இக்கோயில் மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். மூலவர் எதிரில் வாசல் இல்லாமல் சாளரமாகக் காணப்படுகின்ற வகையைச் சார்ந்த சாளரக் கோயிலாகும். சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் காணப்படுகிறது. திருச்சுற்றில் தல விநாயகரான சுந்தர விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், பாமா ருக்மணியுடன் வேணுகோபாலன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், சூரியன், சந்திரன், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், காமதேனு, பைரவர், சனீசுவரர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர். சிவன் கோயிலாக இருந்தாலும் முருகனுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு எதிரில் கொடி மரம் காணப்படுகிறது. [1]

விழாக்கள்[தொகு]

மகாசிவராத்திரி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிசேகம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. திருவாதிரை நட்சத்திரத்தில் மகாமிருத்யுஞ்ஜய ஹோமம் நடத்தப்பெறுவதால் இத்தலத்தை வட திருக்கடையூர் என்றும் கூறுகின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]