திருமயம் பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமயம் பாறை ஓவியங்கள் என்பன, தமிழ் நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், திருமயம் நகரின் மலைக்கோட்டையில் உள்ள பாறையில் தீட்டப்பட்ட ஓவியங்களைக் குறிக்கும். இந்த ஓவியங்கள் 5000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது.[1]கி.பி 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்ட சித்தன்னவாசல் சுவரோவியங்களை விட திருமயம் பாறை ஓவியங்கள் பழமையானவை.[2]

திருமயம் கோட்டையில் பாறை ஓவியங்கள்[தொகு]

திருமயம் பாறை ஓவியங்கள்

இந்தப் பாறை ஓவியங்கள் இப்போதுதான் வெளி உலகத்துக்குத் தெரிய வந்துள்ளது என்றும், புதுக்கோட்டை மாவட்டத்தின் தொன்மையைக் காட்ட உதவும் முதன்மையான ஆதாரமாகும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தெரிவித்துள்ளார்.[3][2] [4]

மலைக்கோட்டையின் நுழைவாயிலுக்குள் நுழைந்தவுடன் வலது புறத்தில் தலைப்பாகை அல்லது தொப்பி வடிவப் பாறையைக் காணலாம். இப்பாறையின் மேற்குப் பக்கத்தின் கீழ்பகுதியில் மங்கலாக சில ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியத்தின் செய்தியினை அறிய முடியவில்லை.[4] தென்புறம் ஓர் ஆணும் பெண்ணும் படுத்திருப்பது போல ஓர் ஓவியம் காணப்படுகிறது.[3][2][4]

வேறொரு ஓவியத்தின் கீழ்ப்பகுதியில், சில உருவகங்கள் இசைக்கருவிகள் வாசிப்பதற்கேற்ப மற்றவர்கள் ஆடுகின்றனர். ஓர் ஆணும் பெண்ணும் கைகோர்த்தபடி ஆடுகிறார்கள். அருகே இருவர் இசைக்கருவியை இசைத்தவாறு ஆடுகின்றனர்.[2] தலையில் ஒருவர் குஞ்சம் அணிந்தும் மற்றொருவர் அமர்ந்த நிலையில் மத்தளம் போன்ற இசைக்கருவியை இசைத்தவாறு காணப்படுகின்றனர். இந்த ஆட்டத்தை காண்பது போல தோன்றும் வண்ணம் ஒரு பெரிய காணப்படுகிறது. இது இங்கு வாழ்ந்திருந்த கூட்டத்தின் தலைவியைக் குறிப்பிடலாம்.[3][4]

பாறையின் கிழக்குப் பக்கத்தில் காணப்படும் மங்கலான ஓவியத்தில் சண்டையிடுதல் அல்லது வேட்டையாடுதல் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.[4]

மற்றொரு ஓவியத்தில் மனிதன் விலங்கின் மீது மனிதன் அமர்ந்த நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கு விலங்கு நீண்ட உருவமாக வரையப்பட்டுள்ளது. இது இடம் விட்டு இடம் பெயர்வதைக் காட்டும் ஓவியம் என்று கருதப்படுகிறது.[3][4] பாறையின் வடக்குப்பக்கத்தில் உள்ள ஓவியத்தில் பல மனித உருவங்கள் காணப்படுகின்றன. ஒரு பெண்ணைப் பின்பற்றி ஒருவர் பின் ஒருவராகத் தொடர்ந்து வருவதைப் போலவும், நிற்பது போலவும் உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.[3][2][4]

திருமயம் குன்றின் தென்புறத்தில் உள்ள சிவன் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் இடையே உள்ள குகையின் மேற்புறத்தில் சில பாறை ஓவியங்களை கண்டதாக அருள்முருகன் கூறியுள்ளார்.[2][3][4] மேலே குறிப்பிட்ட பாறை ஓவியங்கள் செந்நிற வண்ணத்தில் மட்டுமே வரையப்பட்டுள்ளது என்றும் அடர்த்தியான வண்ணப்பூச்சும் கோட்டு உருவங்களும் சில ஓவியங்களில் காணப்படுவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.[3][4]

கால அளவீடு[தொகு]

"தாய்வழிச் சமுதாயம், வேட்டையாடுதல், கல்லாயுதம் பயன்பாடு, சக்கரத்துக்கு முந்தைய விலங்கின் மீது ஏறிச்செல்லுதல், ஆடல் கலை ஆகியவற்றிலிருந்து திருமயம் பாறை ஓவியங்கள் கி.மு. 5 ஆயிரத்துக்கும் முற்பட்டது" என்று அருள்முருகன் கருதுகிறார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. An Iron Age-Early Historic Motif on the Rock Paintings of Tamil Nadu Veerasamy Selvakumar in Rock Art::Recent Researches and New Perspectives (Festschrift to Padma Shri. Dr. Yashodhar Mathpal). Vol. II Ajit Kumar (ed). Delhi, New Bharatiya Book Corporation 457-460.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Ancient rock murals found in Tamil Nadu's Pudukottai district NDTV November 22, 2013
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Rural murals throw light on life in old Pudukottai Deccan Chronicle November 23, 2013
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 திருமயம் கோட்டையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு மோகன்ராம் தினமணி நவம்பர் 22, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமயம்_பாறை_ஓவியங்கள்&oldid=3422526" இலிருந்து மீள்விக்கப்பட்டது