தம்புரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்பூரா --- தம்பூரி --- Tampuri

தம்புரா சுருதி கருவிகளில் மிகச்சிறப்பானது. இது தம்பூரா, தம்பூரி, தம்பூரு, தம்பூர் என்றும் அழைக்கப்படுகின்றது. நன்கு சுருதி சேர்ந்துள்ள தம்புராவை மீட்டுவதால் மனதை ஒன்றுபடுத்தி இறை தியானத்தில் ஈடுபடுவோரும் உண்டு. அரங்கிசையில் மேளக்கட்டு ஏற்படவும் இது உதவுகிறது. வாய்பாட்டுக்கும், வீணைக்கும், வயலினுக்கும் துணைக்கருவியாக தம்பூரா பயன்படுகிறது.[1]

வீணை போன்ற தோற்றமுடைய தம்பூராவின் அடிப்பகுதி குடம் போலவும் மேல் பகுதி நீண்டும் இருக்கும். குடத்தின் குறுக்களவு 10 முதல் 18 அங்குலமும், தம்பூராவின் நீளம் மூன்றரை முதல் ஐந்து அடிவரையிலும் இருக்கும். அடியில் உள்ள குடமானது பலா மரத்தாலோ அல்லது சுரைக்காயாலோ செய்யப்பட்டதாக இருக்கும். தப்பூராவின் வளைவான பகுதி குதிரை எனப்படும். மேல் பக்கத்தில் 4 தந்திகள் செல்லும். இதில் மூன்று தந்திகள் இரும்பாலும், ஒன்று பித்தளையாலும் ஆனது. நடுத் தந்திகள் இரண்டும் ஆதார சட்ச சுரத்தை ஒலிப்பவை. 4 தந்திகளையும் ஒன்றாக சேர்த்து ஒலிக்கும்போது முதன்மை மெட்டின் மேல் நான்கு தந்திகளுக்கும் மெட்டுக்கும் இடையில் துண்டு நூல்களை செலுத்தி வைத்துக் கொள்வர். இது சீவா எனப்படும். சுருதியை சரியாக சேர்க்க ஏதுவாக தந்திகளில் மணிகள் கோர்க்கபட்டிருக்கும். தம்பூராவின் உச்சியில் உள்ள பிருடைகளை பயன்படுத்தி தந்திகளைத் தளர்த்த இயலும்.[1]

பெரும்பாலும் தம்பூராவை செங்குத்தாக நிறுத்தி விரல்கலால் தந்திகளை வருடி வாசிப்பர். 'ரிக ரிக' என வண்டின் ரீங்காரம்போல் இது கேட்கும்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பாடகர்களின் ஆதாரம் (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். பக். 26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்புரா&oldid=3276537" இலிருந்து மீள்விக்கப்பட்டது