சி. நயினார் முகம்மது
சி. நயினார் முகம்மது (இறப்பு: சூலை 23, 2014) தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரும், எழுத்தாளரும், ஆவார். பெரும்புலவர் என அழைக்கப்பட்டவர்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]நயினார் முகம்மது திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 32 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகவும், 1980களில் அக்கல்லூரியின் முதல்வராக நான்கு ஆண்டுகளும் பணியாற்றினார். கல்லூரி சேவையில் இருந்து இளைப்பாறிய பின்னர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]
இவர் தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதத்துடன் இணைந்து தமிழகப் புலவர் குழுவைத் தோற்றுவித்து, 28 ஆண்டுகள் அதன் செயலாளராக இருந்து சேவையாற்றினார்.[2] அத்துடன், இசுலாமிய இலக்கியக் கழகத்தைத் தோற்றுவித்து அதனூடாக ஐந்து பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடுகளை நடத்தினார். இவற்றின் மூலம் இசுலாமியத் தமிழ் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்தார். திருச்சிராப்பள்ள்ளி தமிழ்ச் சங்கத்தில் பெரும் புள்ளியாக இருந்த இவர் இறக்கும் வரை அதன் துணை அமைச்சராக இருந்துள்ளார்.[2]
பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல உலகத் தமிழ் மாநாடுகளில் பங்குபற்றினார்.[2] 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்குபற்றிய இவர் சனவரி 10 இல் வீரசிங்கம் மண்டபத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே, காவல்துறையினர் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிகழ்வில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
விருதுகளும் பட்டங்களும்
[தொகு]- தமிழ் செம்மல் விருது (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)
- திருக்குறள் நெறித் தொண்டர் (உலகத் திருக்குறள் பேரவை)
- குறள் ஞாயிறு (உலகத் திருக்குறள் பேரவை)
- பெரும்புலவர் (குன்றக்குடி அடிகள் வழங்கியது)
மறைவு
[தொகு]புலவர் சி. நயினார் முகம்மது தனது 85வது அகவையில் ஐக்கிய அமெரிக்காவில் டெக்சசு மாநிலத்தில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் 2014 சூலை 23 புதன்கிழமை இரவு காலமானார். இவருக்கு அசீனா என்ற மனைவியும் நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காலமானார்:புலவர் சி. நயினார் முகம்மது (85)". தினமணி. 25 சூலை 2014. Retrieved 25 சூலை 2014.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Tamil scholar Nainar Mohamed passes away". தி இந்து. 24 சூலை 2014. Retrieved 25 சூலை 2014.